வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் தனக்கு கிடைத்த கதாநாயக வெற்றியைத் தொடர்ந்து , நடிகர் சந்தானம் முழுக்க முழுக்க சொந்த(க் காசில் எடுக்கும் ) படமாக , தனது ஹேன்ட் மேட் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் படம் ‘இனிமே இப்படிதான்’ .
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் குடும்பக் குத்து விளக்காக நடித்த ஆஸ்னா சவேரி, இதில் கும்மாங்குத்து பெட்ரோமாக்ஸ் லைட்டாக சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்க, பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் கதாநாயகியாக நடித்த அகிலா கிஷோர் கொஞ்சம் சதை போட்டு இன்னொரு கதாநாயகியாக நடித்துள்ளார்.
படத்தை இயக்கி இருக்கும் முருகானந்த்…. ஏய்ய்ய்யய் அவரு ஆள் இல்ல.!
முருகன் ஆனந்த் என்ற இருவர் தங்களது பெயரையே ஒன்றாக்கி அந்த அளவுக்கு நட்பில் ஒன்றாகி படத்தை இயக்கி இருக்கிறார்கள் . இதில் ஆனந்த் சந்தானத்தின் பால்ய கால நண்பர் . சந்தானத்தின் லொள்ளு சபா நிகழ்ச்சியிலேயே அவரது பங்களிப்பு இருக்க , அதே நிகழ்ச்சியில் சந்தானத்தோடு இணைந்தவர் முருகன் .
ஏழு வருடங்களுக்கு முன்பு, ”நான் சினிமா தயாரித்து ஹீரோவாக நடிக்கும் காலம் வந்தால் உங்களுக்கு ஒரு படம் தருவேன்” என்று சொல்லி இருந்தாராம் சந்தானம் . அதை நிறைவேற்றி நட்புச் சந்தணமாக மணக்கிறார் சந்தானம். (சந்தானத்தின் அடுத்த படத்தை இயக்குபவர் கூட சந்தானத்துடன் ஆரம்ப காலம் முதலே பணியாற்றும் சேது என்பவர்தானாம்) .
படத்தில் தம்பி ராமையா, ஸ்டன்ட் மாஸ்டர் பெப்சி விஜயன், வி டி வி கணேஷ் ஆகியோர் காமெடி மற்றும் செண்டிமென்ட் கலந்த கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் .
படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் சந்தானத்தை சினிமாவில் அறிமுகப்படுத்திய சிம்பு, சந்தானத்துக்கு நெருக்கமான ஆர்யா, உதயந்தி ஸ்டாலின் ,மற்றும் சந்தானத்தின் மரியாதைக்குரிய கவுதம் மேனன் என்று…… பல பிற , பிரபலங்கள் !
“சந்தானத் தின் திறமையை நான் அங்கீகரித்தேன் அவ்வளவுதான் . ஆனால் அவர் திட்டமிட்டு நல்ல குணங்களால் சிறப்பாக உயர்கிறார்” என்ற சிம்பு தொடர்ந்து
” ரெண்டு வருஷமா என் படம் எதுவுமே வரல. நான் நிறைய இழந்துட்டேன். பணம் போச்சு . நான் காதலிச்ச பொண்ணு என்னை விட்டுப் போச்சு . உயிர் மட்டும்தான் என் கிட்ட மிச்சம் இருக்கு . வாலு படம் ஒன்பதாம் தேதி வர்றதா இருந்து தள்ளிப் போச்சு . இப்போ எங்க அப்பா அதை ரிலீஸ் பண்ண முயற்சி பண்ணிட்டு இருக்கார். நான் மறுபடியும் ஜெயிச்சு வருவேன் ” என்றார் . கண்ணெலாம் கண்ணீர் . ஆனாலும் என்ன? குரல் கணீர்!
“நான் ஒழுங்கா டான்ஸ் ஆட காரணம் சந்தானம்தான் ” என்று ஆரம்பித்த உதயநிதி ஸ்டாலின்
“ஒகே ஒகே படத்துல ‘வேணாம் மச்சான் வேணாம் ‘பாட்டுக்கு ஆடும்போது ரெண்டு பேரும் நல்லா ஓபி அடிப்போம் . ஆனா திடீர்னு பார்த்தா வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்துல சந்தானம் பிரம்மாதமா ஆடிட்டாரு . அதனால்தான் நானும் சின்சியரா டான்ஸ் ஆட ஆரம்பிச்சேன் ” என்றார் .
“பல படங்களில் திரைக்கதை ஒன் லைன்ல ‘சந்தானம் சீன்’ அப்படின்னு மட்டும் எழுதி வச்சு இருப்பாங்க . அந்த சீன் என்ன?அதுல உள்ள காமெடி என்ன? என்பதை எல்லாம் சந்தானமும் அவரோட டீம் ஆட்களும்தான் முடிவு பண்ணுவாங்க . அப்படி பல காமெடிகளை உருவாக்கியவர்கள் சந்தானத்தை ஹீரோவாக வைத்து எழுதி இயக்கும் படம் இது . இது கண்டிப்பா வெற்றி பெறும் ” என்றார் ஆர்யா .
முத்தாய்ப்பாக பேசிய சந்தானம் “இந்த மேடையில் இருக்கும் சிம்பு, ஆர்யா, உதயநிதி , கவுதம் மேனன் சார் இவங்க படங்களில் மட்டும் எப்பவும் காமெடியனா நடிப்பேன் . மத்த யாராக இருந்தாலும் ஹீரோவாதான் நடிப்பேன் . ஏன்னா இனிமே இப்படிதான் . இந்தப் படத்துல காமெடி இருக்கு. லாஸ்ட்ல ஒரு அருமையான செண்டிமெண்ட் விஷயம் இருக்கு . ” என்றார் .
படத்தின் முன்னோட்டம் கலர்புல்லாக வழக்கமான சந்தானம் ஸ்டைல் பஞ்ச்களோடு இருந்தது .
அறிமுக இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இசையில் இனிமையாக ஒலிக்கும் பாடல்களில் சந்தானம் ஃபிட்டான ஹீரோவாக ஆடிப் பாடுகிறார். ஆஸ்னா சாவேரியை பிரிபிரியாய் உரித்து.. மஞ்சள் தடவி மயங்க வைக்கிறார்கள் . அப்புறம் என்ன?
இனிமே அவங்களும் இப்படிதான் !




