ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க,
ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே, சூரி நடிப்பில் டி.இமான் இசையில் எழில் இயக்கியிருக்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. பயமேனா ? பயமேவா? பார்க்கலாம் .
தமிழகத்தில் தொண்டர்களே இல்லாத ஒரு தேசியக் கட்சி, இங்கே ஆள் பிடிக்க முயல அந்தக் கட்சியையே இரண்டாக உடைத்து புதிய தேசியக் கட்சியை உருவாக்கி அதன் தலைவர் ஆகிறார் ஒருவர் ( சூரி)
ஆனால் லோக்கல் கட்சித் தலைவர் ஒருவருக்கும் (மன்சூர் அலிகான்) அவருக்கும் சிண்டு முடிந்து பிரச்னை உண்டு பண்ணி .
அந்த புதிய தலைவரை பயந்து போய் துபாய் போக வைத்து விட்டு, அந்தக் கட்சியின் மாநில தலைவர் ஆகிறான் , அவருக்கு மருமகன் முறை உள்ள ஓர் இளைஞன் . (உதயநிதி ஸ்டாலின்)
அவனுக்கு அவன் அத்தை பெண்ணுக்கும் சிறு வயது முதலே ஆகாது . வளர்ந்து பெரிய மனுஷி ஆன பிறகும் ( ரெஜினா ) அதே கோபத்தில் இருக்கிறார் .
ஆனால் அவனோ அவளை காதலிக்கிறான் .
இதற்கிடையே அத்தைப் பெண்ணை லோக்கல் கட்சித் தலைவரின் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவாகிறது .
நாயகன் மனம் உடைய , நாயகனை ஒரு தலையாய் காதலித்து ஒரு விபத்தில் இறந்து போன பாத்திமா என்ற பெண்ணின் ஆவி ( சிருஷ்டி டாங்கே) உதவிக்கு வருகிறது .
அததைப் பெண்ணின் மனதை மாற்றி நாயகனை காதலிக்க வைக்க ஆவி முயல, ஊரில் கோயிலுக்கு காப்பு கட்டுகிறார்கள் . எனவே ஆவியால் ஒரு நிலைக்கு மேல் முடியாமல் போகிறது .
அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த சரவணன் இருக்க பயமேன்.
உதயநிதி ஸ்டாலின் வழக்கம் போல தனக்கு தோதான கேரக்டரை எடுத்துக் கொண்டு நடித்திருக்கிறார் .
ஷூட்டிங் நடந்த இடம் எல்லாம் ரொம்பப் புழுக்கம் போல , எல்லாக் காட்சிகளிலும் ஆடையை சிறுபான்மையாக்கி ஆவலை பெரும்பான்மையாக்கி இருக்கிறார் ரெஜினா .
விட்டால் தன்னைத் தானே உரித்து ஊற வைத்துக் கொள்வார் போலிருக்கிறது. யப்பா!
யோகி பாபுவின் காமெடி வசனங்கள் சிரிக்க வைக்கின்றன . வழக்கம் போல கலக்குகிறார் மதுமிதா . குறிப்பாக அந்த வைப்ரேட்டிங் போன் ரியாக்ஷன் செம கலாட்டா !
மற்றபடி தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலான காமெடி நடிகர்கள் படத்தில் இருந்தும் அவர்கள் எல்லாம் எல்லாம் திரையை நிரப்புகிறார்கள் அவ்வளவே .
இவ்வளவு பேரும் சேர்ந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் யோசித்து இருந்தாலே இன்னும் நல்ல காமெடி வந்திருக்குமே
இமான் இசையில் ‘எம்புட்டு இருக்குது ஆச… ‘ பாடல் இனிமை இனிமை .
‘லாலா கடை சாந்தி’ பாடல் குத்தாட்டம் போடுகிறது . பாடலை வண்ணமயமாக எடுத்து இருக்கிறார்கள் .
நாயகி உடலில் ஆவியாக இருக்கும் பாத்திமா , தன் வீட்டுக்குப் போய் அப்பா அம்மாவை சந்திக்கும் காட்சி மனசுக்குள் கனம் சேர்க்கிறது
முதல் பாதி ஏனோ தானோ போகிறது .
இன்னும் கொஞ்சம் நல்ல கதை , அதற்கேற்ற திரைக்கதை , எல்லா காமெடி நடிகர்களுக்கும் நல்ல காமெடி வசனங்கள் என்று முயன்று இருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்