தேர்ட் ஐ சினி கிரியேஷன்ஸ் சார்பில் கார்த்திகேயன் தயாரித்து, கூடுதல் திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடிக்க, சுபிக்ஷா கிருஷ்ணன், சுரேஷ் மேனன், பாண்டியராஜன் , ரேஷ்மா பசுப்புலேட்டி, வின்சென்ட் அசோகன், மன்சூர் அலிகான், வினோதினி வைத்தியநாதன், நிழல்கள் ரவி, மிப்பு சாமி நடிப்பில் , ஜேசன் வில்லியம்ஸ் உடன் சேர்ந்து திரைக்கதை எழுதி, சதீஷ் கீதா குமார் ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் படம்.
தலைகீழாக நின்றால்தான் எல்லா காட்சிகளும் சரியாகத் தெரியும் என்ற ஒரு பார்வைக் குறைப்பாட்டுக்கு ஆளான ஒரு போலீஸ் இளம் அதிகாரி ( கார்த்திகேயன்) , அந்த பிரச்னை காரணமாக ஒரு சம்பவத்தில் தவறுதலாக ஒரு பெண்ணை சுட்டு விட, பணி நீக்கம் செய்யப்படுகிறார் .
அக்கா (வினோதினி வைத்யநாதன்) மாமா ( பாண்டியராஜன் ) உடன் இருக்கும் அவர், ஒரு காரில் இருந்து சாலையில் எறியப்படும் பெண்ணைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார் .
நண்பன் ஒருவன் பணியாற்றும் மதுபான பார் ஒன்றில் அந்தப் பெண் இருந்தது தெரியவர, அவளோடு உடன் இருந்த பெண்கள் பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார்.
ஒரு கொடூரமான நபர்தான் ( வின்சென்ட் அசோகன்) காரில் இருந்து பெண்ணை உருட்டி விட்டது தெரிய வர, இன்னொரு பெண் அந்தக் கொடூர நபரால் கொல்லப்பட, ஒளிந்து இருக்கும் இன்னொரு நபரைக் கண்டு பிடிக்க, அது ஒரு அமைச்சர் , மற்றும் தொழிலதிபர்களின் பாலியல் வீடியோ கொலை முயற்சியில் போய் முடிகிறது .
மேற்படி கொடூர நபர் , போலீஸ் அதிகாரியைக் கொல்ல வர, அடுத்து என்ன என்பதே சூரகன்.
உலகமே தலைகீழாகத் தெரியும் காட்சிகளுடன் அட்டகாசமாகத் துவங்குகிறது படம், உடம்பு தெரிய நாயகன் உடற்பயிற்சி செய்வது, மதுபாரில் ஆடிப் பாடுவது என்று அடுத்து போகிறது .
சண்டைக் காட்சிகள் கவனிக்க வைக்கிறது .
ஓர் நிலையில் சராசரி சினிமாவாக மாறுகிறது.
தெரிந்த நடிகர்கள் இருந்தும் அவர்கள் சாதாரண காட்சிகளில் நடித்து விட்டுப் போகிறார்கள் .
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நல்ல நடிப்பு என்று முக்கிய விஷயங்களில் கவனம் தேவைப்படும் படம்.