நாளைக்கு , எல்லோருக்கும் தெரியப் போகிற கதைதான் .
என்றாலும் நமது வாசகக் கண்மணிகளுக்காக கொஞ்சம் முன்னாடியே …!
அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு விமானம் ஏறுகிறார்கள் சத்யதேவும் (அஜித்) தேன்மொழியும் (அனுஷ்கா). விமானம் கிளம்பும்வரை அவர்களுக்கு ஒருவரை ஒருவர் முன் பின் தெரியாது .
பக்கத்து பக்கத்து சீட்டில் உட்கார்ந்தபடி இருவரும் பயணிக்க , அந்த நீண்ட பயணத்தில் ‘ஹாய் ஹாயி’ல் ஆரம்பித்து பேசி, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சத்யதேவை காதலிக்க ஆரம்பித்து விடுகிறார் தேன்மொழி.
காபி ஷாப்பில் அடுத்த முறை ஒரு சந்திப்பை நிகழ்த்தும்தேன்மொழி , தனது காதலை சத்யதேவிடம் சொல்ல ஆரம்பிக்கையில் … ஒரு முகமூடிக் கும்பல் சத்ய தேவ் மீது தாக்குதல் நிகழ்த்துகிறது. தன்னையும் காத்து தேன்மொழியையும் காப்பாற்றும் சத்யதேவ் தாக்குதல் நடத்தியது யார் என்பதை ஒருவாறு யூகிக்கிறார் .
இங்கே பிளாஷ்பேக் !
தனது பனிரெண்டு வயதில் தந்தையை இழக்கும் சத்யதேவுக்கு மேற்கொண்டு நேர்மையாக வாழ்வதா இல்லை கிரிமினலாக மாறுவதா என்ற ஒரு பெரிய குழப்பம் ஏற்படுகிறது .
போலீஸ் அதிகாரியாக மாறுகிறார். ரகசியமாக இயங்கும் ஒரு சமூக விரோதக் கும்பலை பிடிப்பதற்காக , தானும் ஒரு ரவுடி போல மாறி அண்டர் கவர் ஆபபரேஷனில் ஈடுபடுகிறார் . அங்கே விக்டர் என்ற ஒரு கிரிமினலின் (அருண் விஜய்) நட்பு கிடைக்கிறது . ஆனாலும் தனது பணியை சத்யதேவ் மறக்கவில்லை .
ஒரு நிலையில் விக்டரோடும் தான் தேடி வந்த ம் சமூக விரோதக் கும்பலோடும் நேரடியாக மோதும் சத்யதேவ் எல்லோரையும் அழிக்கிறார் , விக்டரைத் தவிர..!
தொடர்ந்து தனது காவல் துறைப் பணியில் சிறப்பாக இயங்கும் சத்யதேவ் முக்கியமான அதிகாரியாக ஆகிறார் .
இந்த நிலையில் கணவனை விவாகரத்து செய்து விட்டு இரண்டு வயது மகளோடு வாழும் ஹேமானிகா ( திரிஷா)) என்ற பெண்ணோடு அவருக்கு காதல் வருகிறது . நான்கு வருட காதல் வாழ்க்கைக்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். திருமணத்துக்கு முதல்நாள் ஹேமானிகா கொல்லப்படுகிறாள் . அந்த கொலைக்கு பழிவாங்க சத்யதேவ் நினைத்தாலும் , இப்போது தனது மகளாகவே ஆகிவிட்ட அந்த பெண் குழந்தைக்காக, நிதானமடைகிறார்.
அதே நேரம் ஹேமானிகாவின் மரணத்துக்கு காரணமானவர்கள் பற்றி எந்தத் துப்பும் கிடைக்காத எரிச்சலில் அவர் வேகமாக செயலில் இறங்க , அது அவரது உயிருக்கே ஆபத்தான சூழலை ஏற்படுத்துகிறது.
ஒரு நிலையில் போலீஸ் வேலையே வேண்டாம் என்று முடிவு செய்யும் சத்யதேவ் , ஹேமானிகாவின் மகளின் வாழ்வுக்காகவே தனது வாழ்நாளை பயன்படுத்தும் முடிவுக்கு வருகிறார்.
இருவரும் அமைதியாக் வாழ்ந்து கொண்டு இருக்கையில் , ஒரு கடத்தல் வழக்கில் சத்யதேவின் உதவி வேண்டும் என்று ஒரு நண்பர் வற்புறுத்திக் கேட்க, அதில் இறங்குகிறார் சத்யதேவ் .
மீண்டும் விக்டர் !
அப்படி விக்டரை சந்தித்தபோதுதான் இதுவரை தனது வாழ்வில் நடந்த எல்லா இழப்புகளுக்கும் காரணம் விக்டர்தான் என்பது சத்யதேவுக்கு தெரிய வருகிறது.
அதன் பிறகு சத்யதேவுக்கும் விக்டருக்கும் நடக்கும் ஆக்ஷன் விளையாட்டே… என்னை அறிந்தால் .
அஜித் படத்துக்கு கதையா முக்கியம் ? அஜித் தானே முக்கியம் !