ஸ்ரீரங்கா புரொடக்ஷன் சார்பில் டி.என்.ஏ.ஆனந்தன் தயாரிக்க, விஜயா பிக்சர்ஸ் உடன் களம் இறங்க….
அருண் பாலாஜி — லீமா பாபு இணையராக நடிக்க ,
இவர்களுடன் தயாரிப்பாளர் டி.என்.ஏ.ஆனந்தன், அர்ஜுன், பாலா சிங், பாண்டு, ராபர்ட், யுவராணி, கொட்டாச்சி, போண்டா மணி, உதயா, மனோ, ரவி, சுஜித், அம்மு ஆகியோர் நடிக்க…..
காதல் படத்தில் நகைச்சுவை நடிகராக வெளுத்து வாங்கிய காதல் சுகுமார் , டைரக்டராக பதவி உயர்வு பெற்று இயக்கிய தனது முதல் படமான ‘திருட்டு விசிடி’யை அடுத்து ,
இப்போது இரண்டாவதாக இயக்கி இருக்கும் படம் ‘சும்மாவே ஆடுவோம் ‘
இந்த சும்மாவே ஆடுவோம் படத்தில் நாயகனாக அறிமுகமாகும் அருண் பாலாஜி, சர்வதேச அளவில் புகழ் பெற்ற நீச்சல் வீரர்.
அதுவும் தமிழ்நாட்டில் நீச்சல் போட்டியை பிரபலப்படுத்திய குற்றாலீஸ்வரனின் சாதனையையே முறியடித்தவர்.
படத்தின் பாடல் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்ட, படத்தின் பாடல்கள் இனிமையாக இருந்தன .
முன்னோட்டம் ஒரு பக்கம் கிராமிய மணம் மற்றும் மனத்தோடும் இன்னொரு பக்கம் தான் ரசிக்கும் நடிகன் மீது ரசிகர்கள் கொண்டு இருக்கும் வெறித்தனமான பாசத்தையும் சொல்வதாக இருந்தது .
எளிமையாக அதே நேரம் உற்சாகமாக. இயல்பாக அதே நேரம் உயிர்ப்பாக இருக்கும்படி படமாக்கி இருந்தார் இயக்குனர் காதல் சுகுமார் .
நிகழ்ச்சிக்கு நடிகர் மிர்ச்சி சிவா, இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன் தயாரிப்பாளர்- இயக்குனர் சுரேஷ் காமாட்சி,, பத்திரிக்கையாளர் இயக்குனர் ராசி அழகப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர்
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் போண்டா மணி ” இந்தப் படத்தில் சுமார் நாற்பது நகைச்சுவை நடிகர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து உள்ளார் சுகுமார் . நாங்கள் எல்லாம் பல படங்களில் அவரோடு ஒன்றாக நடித்தவர்கள்.
அவர் படம் இயக்கும் நிலைக்கு வந்த போது எங்கள் எல்லோருக்கும் வாய்ப்புக் கொடுத்தார் . அந்த உயர்ந்த மனசு யாருக்கு வரும் ? அவர் மிகச் சிறந்த மனிதர்” என்று வாயார மனதாரப் பாராட்டினார்.
நகைச்சுவை நடிகர் உதயா பேசும்போது ” எனக்கு நடிக்க வாய்ப்புக் கொடுத்தது மட்டுமல்லாமல் ஒரு பாடலை எழுதவும் பாடவும் வாய்ப்பும் கொடுத்துள்ளார் .
அவரது நல்ல மனசைப் பற்றிப் பேசிக்கொண்டே போகலாம் ” என்றார் .
நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி தன் பேச்சில் ” விருமாண்டி படத்தில் நானும் அவரும் சேர்ந்து நடித்தோம் . ஆரமபத்தில் எனக்கும் சுகுமாருக்கும் வேறு வேறு கேரக்டர்கள் கொடுத்து இருந்தார் கமல் சார் .
ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் நாங்கள் ஒன்றாகவே இருப்பதைப் பார்த்து படத்திலும் நண்பர்களாக நடிக்க வைத்தார் . அன்று முதல் தொடரும் நட்பை மறக்காமல்,
எனக்கு இந்த சும்மாவே ஆடுவோம் படத்தில் மிக சிறப்பான ஒரு கேரக்டரைக் கொடுத்துள்ளார் சுகுமார் ” என்றார் .
நடிகர் பாலாசிங் ” எனக்கு சுகுமாரை நடிகராக மட்டுமே தெரியும் . இந்தப் படத்தில் நடிக்க அழைத்தார் . ‘சரி… நடிப்பு அனுபவத்தில் இயக்குனராக ஒரு படம் செய்வார் போலும்’ என்று போனேன் .
ஆனால் சும்மா சொல்லக் கூடாது . மிக அற்புதமாக படத்தை இயக்கினார்.
தயாரிப்பாளரும் அப்படித்தான் . ஆரம்பத்தில் ரொம்ப இறுக்கமாக இருந்தார் . வணக்கம் சொன்னால் ‘ம்ம்ம்….’ என்பார் .
நான் கூட , இது சரி வருமா என்று நினைத்தேன் . ஆனால் படப்பிடிப்புக்காக அவர் ஊருக்குப் போனபோதுதான் அவர் எவ்வளவு சிறந்த மனிதர் என்பது தெரிந்தது. அவ்வளவு நன்றாகப் பார்த்துக் கொண்டார் ” என்றார்
பாடலாசிரியர் முருகன் மந்திரம் பேசும்போது
” இந்தப் படத்தில் நான் நான்கு பாடல்கள் எழுதி இருக்கிறேன் . ஈழத்துக் கவிஞர் அஸ்மின் ‘முத்து முத்து கருவாயா என்று ஒரு பாடல்’ எழுதி இருக்கிறார் .
பொதுவாக தமிழ் சினிமாவில் கல்யாண பாடல்கள் , நிச்சயதார்த்தப் பாடல்கள் எல்லாம் உண்டு . ஆனால் சீமந்தம் பற்றி பாடல்கள் இருப்பதாக தெரியவில்லை .
இந்தப் படததில் சீமந்தத்தை முன் வைத்து ஒரு பாடல் எழுதி இருக்கிறேன் .
என்னைப் பொருத்தவரை சாதிகளை ஒழிக்க முடியாது . சாதிகளுக்குள் சமத்துவத்தை மட்டுமே உருவாக்க முடியும் .
அந்த அடிப்படையில் படத்தில் சாதிப் பிரச்னையை காதல் சுகுமார் மிக நுணுக்கமாக கையாண்டு இருக்கிறார் .
எங்கள் அழைப்பை ஏற்று இந்த நிகழ்ச்சிக்கு வந்து இருக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி , இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன் மற்றும் பலருக்கும் நன்றி ” என்றார் .
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா தன் பேச்சில் “படத்தில் கவிஞர் அஸ்மின் எழுதி இருக்கும் முத்து முத்து கருவாயா பாடல் இப்போதே ஹிட் ஆகி விட்டது .
முருகன் மந்திரம் , உதயா ஆகியோரின் பாடல்களும் சிறப்பாக வந்துள்ளது ” என்றார் .
படத்தின் தயாரிப்பாளர் டி.என்.ஏ ஆனந்தன் பேசும்போது
“படம் தயாரிப்பது என்றால் நல்ல சமூக அக்கறை உள்ள கதைகளையே தயாரிக்க வேண்டும் என்று விரும்பினேன்.
அப்படி ஒரு கதையை அற்புதமாக சொன்னார் காதல் சுகுமார் .
உடனே இந்த படத்தை ஆரம்பித்து விட்டேன் . தவிர படத்தில் என்னை ஒரு முக்கியக் கதாபாத்திரததில் நடிக்கவும் வைத்து விட்டார் ” என்றார்
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி , நடிகர் சிவா இருவரும் காதல் சுகுமாரின் நட்பான குணம் பற்றிக் குறிப்பிட்டு படம் வெற்றி பெற வாழ்த்தினார்கள்.
இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன் தனது பேச்சில்
” ஓர் இயக்குனராக நான் முதன் முதலில் ஆரம்பித்த படம் சிவப்புக் கம்பளம் . அது பின்னர் தொடரவில்லை .
அப்போது முதலே எனக்கு முருகன் மந்திரம் பழக்கம் . தொடர்ந்து உற்சாகமாக இயங்கி தன்னை வளர்த்துக் கொண்டு இருக்கிறார் . அவர் மேலும் மேலும் முன்னேற வாழ்த்துகள் .
எனக்கு இந்தப் படத்தின் டைட்டில் ரொம்ப பிடித்து இருக்கிறது .
களவாணி படத்தில் ‘சும்மாவே ஆடுவோம் . நீங்க சலங்கை வேற கட்டி விட்டுட்டீங்க . இனி என்ன நடக்கும்னு பாருங்க’ என்று ஒரு வசனம் வரும் . அதில் இருந்து படத்தின் பெயரை வைத்து இருப்பது சிறப்பு .
சும்மாவே ஆடுவோம் சூப்பராக வெற்றி பெற வாழ்த்துகள். ” என்றார் .
ராசி அழகப்பன் பேசும்போது
” நான் இந்தப் படத்தை பார்த்து விட்டேன் . படம் சிறப்பாக வந்திருகிறது காதல் சுகுமார் இந்தப் படத்தில் நாற்பது நகைச்சுவை நடிகர்களுக்கு வாய்ப்புக் கொடுத்துள்ளார்,
— என்பதை எல்லோரும் சொன்னார்கள் . அது பெரிய விஷயம் இல்லை .
ஆனால் யாரையும் சும்மா ஓர் ஓரமாக நிற்க வைத்து விடாமல் நாற்பது பேருக்கும் நல்ல கேரக்டர்களை படம் முழுக்க கொடுத்துள்ளார் .
படத்தின் தயாரிப்பாளர் ஆனந்தன் நடிகை யுவராணிக்குக் கணவராக ஒரு முக்கிய வேடததில் நடித்துள்ளார் . நான் கூட ஆரம்பத்தில்,
தயாரிப்பாளர் என்பதற்காக ஆனந்தனை காதல் சுகுமார் நடிக்க வைத்துள்ளார், என்று நினைத்தேன் .
ஆனால் அப்புறம்தான் தெரிந்தது . அவர் ஒரு கூத்துக் கலைஞர் என்பது .
படத்தில் அவ்வளவு இயல்பாக நடித்துள்ளார் . படம் வெற்றி பெற வாழ்த்துகள் ” என்றார்
நிறைவாக ’காதல்’ சுகுமார் பேசும்போது
“கூத்துக் கலை ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தாலும் இப்போது நலிவடைந்துள்ளது.
அந்தக் கலையை நம்பியிருக்கும் கலைஞர்களின் தற்போதைய நிலையைதான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறோம்.
ஆனால் அதை ஒரு டாக்குமெண்டரி போல சொல்லாமல் முழுக்க முழுக்க நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறோம்.
கதைப்படி, மதுரையில் உள்ள ஜமீன் ஒருவர் கூத்து கலைஞர்களுக்காக ஒரு கிராமத்தை இலவசமாக கொடுக்கிறார். கூத்து கலைஞர்கள் வாழும் அந்த கிராமத்திற்கு ‘கூத்துப்பேட்டை’ என்ற பெயர் வருகிறது.
கூத்துக் கட்டும் தொழிலை விட்டால் வேறு ஏதும் தெரியாத அந்த மக்கள், நவீன காலத்து பொழுதுபோக்குகளோடுபோட்டி போட முடியாமல் தடுமாறுகிறார்கள்
இந்த நேரத்தில் ஜமீன் அவர்களுக்கு இலவசமாக கொடுத்த அந்த கிராமத்திற்கும் ஆபத்து வருகிறது. அந்த ஆபத்தை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள், என்பதைத்தான் காமெடியாக சொல்லியிருக்கிறோம்
மூன்று காலகட்டத்தில் நடப்பது போல இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு, கோபி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
படத்தில் சாதிப் பிரச்னையை நுணுக்கமான கையாண்டுள்ளேன் . சாதி அளவில் சமத்துவத்தைக் கொண்டு வரலாம் . ஆனால் சாதியை ஒழிக்க முடியாது என்பதுதான் எனது கருத்தும் .
அவ்வளவு ஏன்…. சினிமாவில் கூட ஜாதி இருக்கிறது .
படத்தில் நான் நடிக்கவில்லை . ஏன் என்று கேட்டார்கள் . எல்லார் நடிப்பிலும் நான் இருக்கிறேன் . எனக்கு அதுவே திருப்தி .
இரண்டு மணி நேரம் ஓடும் இந்தப் படத்தில் நாற்பது காமெடி நடிகர்களுக்கும் ஹீரோ ஹீரோயின் வில்லன் , குணச்சித்திரக் கதாபாத்திரம் என்று எல்லோருக்கும் முக்கியத்துவம் இருக்கும் .
எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இது இருக்கும் ” என்கிறார் உற்சாகமாக !
வாழ்த்துகள் !