தென் தமிழ்நாட்டு கிராமமான சிவலிங்க புரம் என்ற ஊரில் ஒரே சமூகத்தை சேர்ந்த மக்களுக்குள் பகை வளர்ந்து, ஊரை வேலி கட்டி இரண்டாகப் பிரித்ததோடு,
ஐந்து தலைமுறையாக இரு தரப்பாக பிரிந்து ஒருவரை ஒருவர் வெட்டிக் கொன்று கொள்கிறார்கள் .
ஐந்தாம் தலைமுறையில் இந்த இரண்டு தரப்புகளை சேர்ந்த ஜெயவேலுவும் (பிரபு) கீர்த்தி வாசனும் (கை தென்னவன்) மாமன் மச்சான் உறவோடு நண்பர்களாகவும் பழகுகிறார்கள் .
ஜெயவேலுவின் மனைவி ராஜ லக்ஷ்மி (ஊர்வசி) . கீர்த்தி வாசனின் மனைவி வான்மதி (ஸ்ரீரஞ்சனி)
ஜெய வேலுவுக்கு ஒரு மகனும் கீர்த்தி வாசனுக்கு ஒரு மகளும் பிறந்து ஒருவரும் பாலகர்களாக இருக்கும்போது , இரண்டு தரப்புக்கும் மோதல் வெடிக்கிறது .
கீர்த்தி வாசனை ஜெய வேலுவே வெட்டிக் கொல்ல வேண்டிய சூழல் .
ஆனால் ஜெயவேலு அதை செய்யாமல் இருப்பதோடு , ஜெயவேலு , கீர்த்தி வாசன் இருவரும் தங்கள் குடும்பத்தோடு தப்பித்து சென்னை வந்து செட்டில் ஆகிறார்கள் .
ஜெயவேலு சிற்பங்கள் கலைப் பொருட்கள் விற்பனையகம் நடத்துகிறார் .
பிள்ளைகள் வளர்ந்த நிலையில் ஜெயவேலுவின் மகன் சிவாவுக்கும் ( ஆரி) கீர்த்தி வாசனின் மகள் அபிராமிக்கும் (மாயா), திருமணம் செய்து வைக்க ஆசைப்பட,
ஆனால் அவர்கள் இருவரும் சின்ன வயசு முதலே எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்
சிவாவின் நண்பன் பகத்சிங்கும் (பால சரவணன்) மாயாவின் தோழி அழகிய வடிவுடைய சுந்தராம்பாளும் (மிஷா கோஷல்) காதலிக்கின்றனர் . ஆனால் சிவாவும் அபிராமியும் ஆளுக்கொரு ஐடியா தந்து,
பகத் சிங் – அழகிய வடிவுடைய சுந்தராம்பாள், இருவரின் காதலும் கல்யாணத்தில் முடியாமல் தடுத்துக் கொண்டே இருக்கும் அளவுக்கு சிவா – அபிராமி சண்டை வளர்ந்து கொண்டே போகிறது
சுந்தராம்பாளின் அப்பா காசி (மன்சூர் அலிகான்) சிலைகளை திருடி விற்கும் கடததல்காரன் மற்றும் தாதா . ஜெயவேலுவோடு சேர்ந்தால்,
கடத்தல் தொழிலில் இன்னும் கொழுக்கலாம் என்று அவன் விரும்ப , நேர்மையாளரான ஜெயவேலு அதற்கு ஒப்பவில்லை .
இதற்கிடையே சிவலிங்க புரதத்தைச் சேர்ந்த இரண்டு குரூப்பும் ஜெயவேலுவையும் கீர்த்தி வாசனையும் போட்டுத் தள்ளுவதற்காக தேடும் முயற்சியில் வெற்றி அடைந்து இருவரையும் சிவலிங்கபுரத்துக்கு கடத்துகிறது .
அங்கே இருவரும் ஒற்றுமையாக நின்று பகைக்கான காரணத்தைத் தேட , அஞ்சு தலைமுறைக்கு முன்னாள் ஒரு கோழி முட்டை யாருக்கு சொந்தம என்பதில் வந்த சண்டை அது என்பது புரிகிறது .
இரண்டு தரப்பையும் சமாதானப்படுத்தி பகையை முடித்து வைக்கின்றனர் ஜெயவேலு , கீர்த்திவாசன் இருவரும் .
அதே வேகத்தில் இருவரும் சென்னைக்கு போய் எப்படியாவது சம்மந்தி ஆகி விடவேண்டும் என்று திட்டமிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே காசிக்கு தன மகள் சுந்தராம்பாள் பகத்சிங்கை காதலிப்பதை சம்மதமில்லை .
எனவே . அவன் பகத் சிங்கை போட்டுத் தள்ள முடிவு செய்ய, நண்பனைக் காப்பாற்ற சிவா ,
தான் சுந்தராம்பாளை விரும்புவதாக நடிக்கிறான் . அதை நம்பும காசிக்கு சிவா மாப்பிள்ளையாக டபுள் ஒகே .
சிவாவின் இந்த நடிப்பால் ஏற்படும் குழப்பங்களும் தீர்வுமே இந்தப் படம்
படத்தின் முதல் ஹீரோ ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன்தான். வண்ணம், கால கட்டங்களுக்கு ஏற்ப டோன்கள், ஒளி ஆளுமை, கேமரா நகர்வுகள், ஃபிரேமிங் என்று,
எல்லாமும் எல்ல்ல்ல்லாமும் அப்படியே கண்ணில் ஒத்திக் கொள்ளலாம் போல இருக்கிறது.
முதல் பிரேமில் இருந்து கடைசி பிரேம் வரை அந்த ஹீரோயிசம் தொடர்கிறது .பாடல்களை ஸ்லோ மோஷனில் படமாக்கி இருக்கும் விதம் எல்லாம் ஆசம் அட்டகாசம்
எடுத்த உடன் ஸ்லோ மோஷனில் ஒரு கலவரம், அடுத்து ஒரு இளம் ஜோடி ஓடிப் போய்விட்டதாக தகவல் வர , அதைக் கேட்டு இரண்டு குடும்பமும் சந்தோஷப் படுவது.. என்று படத்தின் ஆரம்பம் அமர்க்களம் .
இது லாஜிக் பார்க்கக் கூடாத வசனம் நிறைந்த காமெடி முயற்சிப் படம் என்பதை ஆரம்பத்திலேஎ உணர்த்தி விடுகிறார்கள் .
அதற்கும் முன்பாக , கருவில் இருக்கும்போதே சிவாவுக்கும் அபிராமிக்கு சண்டை என்பதும் சுவாரஸ்யம்தான் .
ஏகப்பட்ட நட்சத்திரக் கூட்டம் நிறைந்து இருந்தாலும் நடிப்பில் முதலிடம் ஊர்வசிக்கே . சின்னச் சின்ன எகஸ்பிரஷன்கள், மலையாள வாசனையை சுத்தமாக வென்றெடுத்த வசன உச்சரிப்பு,
ஏற்ற இறக்கம் எல்லாம் அபாரம . (அட வசன உச்சரிப்பில்தாங்க !)
நடிப்பில் அடுத்த இடம் மாயாவுக்கு . வித்தியாசமான அந்த முகம் சின்னச் சின்ன உணர்வுகளை கூட படார் படர் என்று மாற்றி வசீகரிக்க, உடல் மொழிகளிலும் அசத்துகிறார் மாயா .
மன்சூர் அலிகானும் தனக்கே உரிய பாணியில் கலக்கி இருக்கிறார் .
பிரபு , ஆரி, பால சரவணன், மிஷா கோஷல் , தென்னவன் , எஸ் எஸ் பாஸ்கர், சாம்ஸ், நாராயணன், என்று எல்லோரும் கேரக்டருக்கு பொருத்தமாகவோ,
அல்லது காமெடிக்கு சிரததையோடு முயன்று சில இடங்களில் வெற்றியும் பெறுபவர்களாகவோ இருக்கிறார்கள்
காசியின் அடியாளாக நடித்து இருக்கும் சின்னத்திரை இயக்குனர் நந்தகுமார் ஃபிரஷ்ஷாக கவர்கிறார் வாழ்த்துகள் !
ஒரு காட்சியிலாவது இயற்கையாக நடித்தால்தான் சம்பளம் என்று மட்டும் சொல்லி விட்டால் போதும் .நடிகை ஸ்ரீரஞ்சனி மூலம் தயாரிப்பாளர்களுக்கு நிறைய்ய்ய்ய்ய பணம் மிச்சமாகும் .
இசையமைப்பாளர் சத்யாவின் பாடல்கள் இனிமை .
போன தலைமுறவரை ஏதாவது ஓர் எழுத்தை ஒழுங்காக உச்சரிக்க முடியாத குறைபாட்டோடு சிலர் இருப்பார்கள் . அருட் செல்வர் ஏ பி நாகராஜனின் புராணப் படம் ஒன்றில்,
இப்படி ஒரு கேரக்டரில் பின்னிப் பெடல் எடுத்து இருப்பார் ஆச்சி மனோரமா (திருமால் பெருமை?)
அந்த வகையில் ர என்ற எழுத்தை த என்று உச்சரிக்கும் சிறுமிகளின் குரலில் வரும் ”ஊதே வெதட்டி. வெதட்டி .. ”பாடல் அபாரம் . இப்படிதாங்க எதாவது வித்தியாசமா முயற்சி பண்ணனும்
இரண்டாம் பகுதியில் ஏகப்பட்ட டிராக்குகள் ஒன்று சேர்ந்து ஓவர் லோடு ஆகிறது . சாம்ஸ் கதாபாத்திரம் ஆரம்பம் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது .
ஆனால் கடைசியில் அது கதையில் ஒன்றுமே செய்யாத நிலையில் அதை டோட்டலாக ரிமூவ் பண்ணி இருக்கலாம் .
கேரக்டர்கள் அதிகம் இருக்கும்போது காட்சிகள் ரொம்ப சிம்பிளாக இருக்க வேண்டும் . அது இல்லை
இதுபோன்ற கதைகளில் சுவாரஸ்யத்துக்காக, உற்சாகமாக தறிகெட்டு யோசிப்பதில் தப்பில்லை . அப்படித்தான் திரைக்கதையில் முயன்று இருக்கிறார் ஆர் கே .
ஆனால் அதில் கொஞ்சமாவது யதார்த்தம் இருந்தால்தான் அந்த உற்சாக முயற்சிகள் சுவையாகவும் இருக்கும் .
படத்தின் டைட்டிலில் திரைக்கதை வசனம் இயக்கம் ஆர் கே என்று போட்டு விட்டு அப்புறம் கதை அபிராமி ராமநாதன் என்று போடப்பட்டு கடைசியாக தயாரிப்பு நல்லம்மை ராமநாதன் என்று டைட்டில் முடிகிறது
கல்லானாலும் கணவன் , புல்லானாலும் புருஷன் .. இந்த லிஸ்டில் புதுசானாலும் டைரக்டர் என்ற வாசகமும் சேர்க்கப்பட வேண்டும் .
ஒரு படத்தில் இயக்குனரின் பெயர் ஒன்று முதலில் வர வேண்டும் அல்லது கடைசியாக தலைமை முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரவேண்டும் .
டைரக்டர் பெயருக்குப் பின்னால் ஒரு பெயர் வர வேண்டும் என்றால், அது அந்த டைரக்டரை விட சீனியர் டைரக்டர் ஒருவர் டைரக்ஷன் மேற்பார்வை செய்து இருந்தால் மட்டுமே சாத்தியப்பட வேண்டும்
அதுவும் திரைக்கதை வசனம் இயக்கம் என்று பெயர் போட்ட பிறகு கதை என்ற டைட்டில் வருவது எல்லாம் ஏற்புடையது அல்ல
உன்னோடு கா .. குடும்பக் கனி
மகுடம் சூடும் கலைஞர்கள்
—————————————
சக்தி சரவணன், ஊர்வசி