தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தில் நாயகியாக நடிப்பவர் சம்யுக்தா (மேனன்) . இதுவரை மலையாளம், தமிழ் , தெலுங்கு என்று இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கும் சம்யுக்தா , முதலில் 2016 இல் மலையாளத்தில் பாப்கார்ன் படத்தில் அறிமுகமாகி, பின்னர் 2018 இல் களரி , 2019 இல் ஜூலை காற்றில் ஆகிய இரண்டு படங்களில் நடித்தார் . இரண்டும் பெரிதாக பலன் தரவில்லை 2022 இல் பிம்பி சாரா படம் மூலம் தெலுங்கிலும் காலிபட்டா 2 என்ற படத்தின் மூலம் கன்னடத்திலும் அறிமுகமான நிலையில் இப்போது, தனுஷ் ஜோடியாக வாத்தி படத்தில் தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளில் (தெலுங்கில் படத்துக்குப் பெயர் சார். ) நடித்துள்ளார்

இந்தப் படத்தில் கல்வி முறையில் உள்ள சில பிரச்சனைகள் பற்றி கூறியுள்ளோம்.
இன்ஜினியரிங் படித்த பெண்கூட அதை முடித்துவிட்டு தனக்கு விருப்பமான நடன துறையில்தான் சேர்ந்தார். நானும் பிளஸ் டூ மட்டுமே படித்துள்ளேன். சினிமா மீதான ஆர்வம் இருந்ததால் இங்கே வந்து விட்டேன்.
பெர்சனலாக சொல்லவேண்டும் என்றால் ஒரு டிகிரி இருந்தால்தான் நமக்கு பிடித்த வேலையை பார்க்க முடியும் என்று சொல்லப்படுவதை நான் நம்பவில்லை. அதேசமயம் இந்தப் படத்தில் நடித்தபோது கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு படிப்பு எவ்வளவு பெரிய மாற்றத்தை அவர்களது வாழ்க்கையில் கொண்டு வருகிறது என்பதை உணர முடிந்தபோது எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம் ஏற்பட்டது.
தமிழ் சினிமாவில் எந்தப் படங்களை கமர்சியலாக எடுக்க வேண்டும். எந்த படங்களை ரியலிஸ்டிக்காக எடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். மலையாளத்தில் கூட தமிழ் படங்களுக்கான வரவேற்பு அதிகமாகவே இருக்கிறது.
முதன்முறையாக இந்தப் படத்தில் தான் ஒரு நடன இயக்குனர் சொல்லிக் கொடுத்த அசைவுகளுக்கு நடனம் ஆகியுள்ளேன். தெலுங்கில் விருபாக்சி, டெவில் என இரண்டு படங்களில் நடித்துள்ளேன். எல்லாமே பீரியட் படங்கள்தான். எப்போது ஒரு கதையைக் கேட்டதும், உடனே நான் நடிக்கிறேன் என்று சொல்கிறேனா அந்த படங்கள் எனக்கு நன்றாகவே அமைந்திருக்கின்றன.. யோசித்து சொல்கிறேன் எனக் கூறி பின்னர் ஒப்புக் கொண்ட படங்கள் பெரிய அளவில் பலன் தரவில்லை.
வாத்தி படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்பு வேறொரு படத்திற்காக தென்காசிக்கு சென்றிருந்தபோது, அப்படியே மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் செய்துவிட்டு ஏற்கனவே யூட்யூப் மூலமாக கேள்விப்பட்டிருந்த மதுரை பன் புரோட்டா சாப்பிடலாம் என முகத்தில் மாஸ்க் அணிந்தபடி ஒரு ஹோட்டலுக்கு சென்றேன்.
அப்போதுதான் ‘வா வாத்தி’ பாடல் ரிலீஸ் ஆகியிருந்த நேரம். நான் மாஸ்கை கழட்டியதுமே அங்கிருந்து என்னை பார்த்த சிலர் ‘ஏ நம்ம டீச்சரம்மா’ என்று ஆச்சரியமாக கூவினார்கள். அந்த பாடல் ஏற்படுத்திய மேஜிக்தான் இது. இந்த படத்தின் மூலம் நான் எனக்கென எடுத்துச் செல்வது இந்த பெருமையைத்தான்” என்று கூறினார்.
தமிழ் எனது இளமைக் காலத்தில் இருந்தே எனக்கு மிகவும் பிடித்த மொழி. குறிப்பாக சின்ன வயதில் ‘முஸ்தபா முஸ்தபா’ பாடல் மூலம் தமிழ் மீது ரொம்பவே ஆர்வமானேன். அதன் பிறகு தமிழ் பாடல்களை அதிகமாக கேட்க ஆரம்பித்தேன். இதுவரை நான் கேட்ட பாடல்களில் தமிழ் மொழியை போல வேறு எந்த மொழியிலும் இனிமையான பாடல் வரிகளை கேட்டதில்லை. சினிமா பாடல்களிலேயே அதிகம் இனிமையான பாடல் வரிகளை கொண்டது தமிழ் மட்டும்தான்.
“தயவு செய்து ‘சம்யுக்தா மேனன்’ என்று என்னை அழைக்க வேண்டாம். எந்த ஒரு ஜாதி பெயரையும் சேர்த்துக் கொள்ள நான் விரும்பவில்லை. ‘சம்யுக்தா’ என்றுதான் இந்த ‘வாத்தி’ பட டைட்டில் கார்டில்கூட குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
பள்ளியில் பேர் சேர்க்கும்போது பெரியவர்கள் அப்படி சேர்த்துவிட்டதை நாம் அப்போது ஒன்றும் செய்ய முடியாது. இப்போது மாற்றிக் கொள்வது என்பது நம் விருப்பம்தானே…? வேறு சில நட்சத்திரங்கள் இப்படி தங்கள் பெயருடன் ஜாதிப் பெயரை சேர்த்துக் கொண்டிருப்பதை பற்றி நான் ஒன்றும் சொல்ல முடியாது.” என்றார் சம்யுக்தா .