அவரா இப்படி? இருக்காதே….?— என்றுதான் மேலோட்டமாக யோசிக்கும்போது தான்றுகிறது .
ஆனால் கிடைக்கும் தகவல்களோ நடந்தது உண்மைதான் என்று கட்டிகட்டியாய் கற்பூரம் வைத்து சத்தியம் செய்கின்றன. .
அப்புறம் எப்படி பேசாமல் இருக்க முடியும்?
ஆயிரங்களிலேயே சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்த விஜய் சேதுபதி நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படம் பிப்ரவரி 2013 இல் வெளியான இரண்டாவது நாளில்…
அவரை சந்தித்து ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசி, பத்து லட்ச ரூபாய் பணத்தை அட்வான்சாக கொடுத்தாராம் தயாரிப்பாளர் ஸ்டுடியோ 9 சுரேஷ் . அந்தப் பணத்தையும் ஆர் டி ஜி எஸ் முறையில் வங்கி வழியே பரிமாற்றம் செய்து இருக்கிறார். அதே ஆண்டில் ஜூன் மாசம் கால்ஷீட் கொடுப்பதாக கூறி இருக்கிறார் விஜய் சேதுபதி .
படத்தின் பெயர் வசந்தகுமாரன் . படத்தின் இயக்குனர் ஆனந்த் குமரேசன் விஜய் சேதுபதியின் நண்பரே . எனவே வேக வேகமாக தயாரிப்பு வேலைகளை ஆரம்பித்த சுரேஷ், இயக்குனருக்கு முழு சம்பளத்தையும் கொடுத்தாராம் . கதாநாயகிகளாக வரலட்சுமி மற்றும் பிந்து மாதவி , இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் என்று ஆரம்பித்து, ஆர்ட் டைரக்டர் வரை எல்லோருக்கும் அட்வான்ஸ் கொடுக்க .. இப்படியே 80 லட்ச ரூபாய் செலவானதாம்.
விஜய் சேதுபதி சொன்ன ஜூன் மாச கால்ஷீட்டை அவருக்கு ஞாபகப்படுத்த , “இப்போ நான் சூது கவ்வும் படத்துல நடிச்சுட்டு இருக்கேன் . இதுக்காக கொஞ்சம் தொந்தியும் தொப்பையுமாக இருக்க வேண்டி இருக்கு . உங்க படத்துல காலேஜ் ஸ்டூடன்ட் கேரக்டர்(?). அதுக்கு கொஞ்சம் உடம்பை குறைக்கணும் . அதனால ஜனவரி 2014 இல் கண்டிப்பா கால்ஷீட் தரேன்” என்றாராம் விஜய் சேதுபதி .
வேற வழி ? தேவுடு காத்து விட்டு இந்த வருடம் ஜனவரி மாதம் கால்ஷீட் கேட்க ” நான் இன்னும் கொஞ்சம் ரெடியாகணும் . அதனால மே மாசம் கண்டிப்பா தரேன் ” என்று சொன்ன விஜய் சேதுபதி ….
இதோ நவம்பர் பிறக்கிற இதுவரை பிடி கொடுக்கவில்லை என்கிறார்கள்.
தவிர ‘அந்தப் படத்தில் நடிக்கப் போவது இல்லை’ என்று விஜய் சேதுபதி அரசல் புரசலாக சொன்ன செய்தி சுரேஷ் காதுகளில் விழ, பதறிப் போன சுரேஷ் பேசியபோதும் விஜய் சேதுபதி தரப்பில் சரியான பதில் இல்லையாம் .
இப்போது தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் கொடுத்து விட்டு ரியாக்ஷனுக்காக காத்து இருக்கிறார் சுரேஷ் களஞ்சியம் .
