பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் வழங்க, எழில் மாறன் புரோடெக்ஷன்ஸ் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க , விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி , சூரி, ரவி மரியா நடிப்பில்,
இயக்குனர் எழில் (மாறன்) இயக்கி இருக்கும் படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் .
ஜூன் மூன்றாம்தேதி திரைக்கும் வரும் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இசையமைப்பாளர் சத்யா இசையில் உருவான இரண்டு பாடல்களையும் முன்னோட்டத்தையும் திரையிட்டனர் .
போலீஸ் அதிகாரியாக நிக்கி கல்ராணி , அவரை காதலிக்கிற அரசியல்வாதியாக விஷ்ணு விஷால், நண்பனாக சூரி, வில்லன் கம் காமெடியனாக ரவி மரியா, இன்னொரு காமெடியனாக ரோபோ ஷங்கர் …..
எஸ் இது முழுக்க காமெடி மசாலா படம் .
கடைசி பத்து நிமிடத்தில் பேய்ப் படமாக மாறுவதாகவும் ஓர் அமானுஷ்ய தகவல்
விழாவில் இயக்குநர் எழில(மாறன்) பேசும்போது
“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் எனக்கும் நாயகன் விஷ்ணு விஷாலுக்கும் , இசையமைப்பாளர் சத்யாவிற்கும் 1௦ ஆவது திரைப்படம்.
நான் இப்படத்தின் கதையை நாயகன் விஷ்ணு விஷாலிடம் சொன்னபோது வேறு தயாரிப்பாளரிடம் பேசிக் கொண்டு இருந்தேன்.
ஆனால் அது தாமதமான நிலையில் கதை பிடித்த காரணத்தால் அவரே தயாரிக்க முன்வந்தார். இதுவரை அவர் நடிக்கத பாணியில் பந்தா பண்ணும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் .
படத்தின் நாயகியான நிக்கி கல்ராணியை விஜய் டிவி மகேந்திரன் சார் தான் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். இப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானது.
கயிறு கட்டி தூக்குவது எல்லாம் கொண்ட சண்டைக் காட்சிகளில் நிக்கி பிரம்மாதமாக நடித்து உள்ளார்
சூரியின் காமெடி படத்துக்கு பெரும்பலம். ரவி மரியாவும் அப்படியே . படத்தின் பின்பகுதியில் ரவி மரியா – ரோபோ சங்கர் காம்பினேஷனில் பதினெட்டு நிமிட நான் ஸ்டாப் காமெடி இருக்கிறது.
படம் பார்த்து விட்டு ரவிமரியாவின் நடிப்பை சூரி வெகுவாகப் பாராட்டினார்
இன்றைய காலகட்டத்தில் படத்தை தயாரிப்பதை விட அதை விளம்பரபடுத்துவது தான் கடினமான ஒன்று. அந்த வகையில் விஜய் டிவியின் மகேந்திரனும்
டிஸ்னியும் எனக்கு பெரிய பலமாக இருந்தனர் . அவர்களுக்கு நன்றி என்றார்.
வசனகர்த்தா அரவிந்தன் ” இது மூன்று கதைகள் பின்னிப் பிணைந்து போகும் திரைக்கதை . முழுக்க முழுக்க காமெடி படம் என்னை சுதந்திரமாக இயங்க இயக்குனர் எழில் அனுமதி கொடுத்தார் .
இந்தப் படம் காமெடியில் ஒரு டிரென்ட் செட்டராக வரும் என்று நம்புகிறேன் ” என்றார்.
இயக்குனர் / நடிகர் ரவி மரியா தன் பேச்சில்,
” படத்திற்கு ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ என்று பெயர் வைத்ததற்குப் பதிலாக “ ‘இறங்கி அடிச்சா எப்படி இருக்கும்” என்று தலைப்பு வைத்திருக்கலாம்.
ஏன் என்றால் படத்தில் அனைவரும் அவ்வளவு தூரம் இறங்கி அடித்துள்ளனர்.
நான் இயக்குநராக பெரிய அளவில் மின்னவில்லை என்றாலும் நடிகனாக சாதிக்க வேண்டும் என்று வெறியோடு இருக்கிறேன். அதனால் தான் தேர்ந்தெடுத்து ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறேன்.
எப்போதும் இயக்குநர் எழில் எனக்கு மிக சிறந்த கதாபாத்திரங்களையே கொடுத்து வருகிறார். இப்படத்திலும் அது தொடர்கிறது.. என்னைப் பாராட்டிய சூரியின் பெருந்தன்மைக்கு நன்றி ” என்றார்
விழாவில் இசையமைப்பாளர் சத்யா பேசும்போது
“நான் முதன் முறையாக இப் படத்தில் இயக்குநர் எழிலுடன் இணைகிறேன்.
நான் எப்போதும் ஒரு படத்திற்கு பின்னணி இசையமைக்கும் போது ,முழு படத்தையும் பார்த்துவிட்டு இசையமைக்க மாட்டேன்.
ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு பகுதியாக பார்த்து இசையமைப்பேன். ஆனால் இந்த படத்தை முழுவதும் பார்த்துவிட்டு தான் இசையமைத்தேன்.
காரணம் படத்தில் சூரியின் காமெடி பெரிதும் என்னை கவர்ந்தது” என்றார்.
நிக்கி கல்ராணி பேசும்போது
“இதுவரை நான் நடிக்காத ஒரு கிராமியத்தனமான அதே நேரம் காமெடி நிறைந்த கமர்ஷியல் படம் இது . படப்பிடிப்பு அவ்வளவு ஜாலியாக இருந்தது .
இயக்குனர் எழில்மாறன் அவ்வளவு கூலாக படப்பிடிப்பில் நடந்து கொள்வார் . விஷ்ணு விஷால் நல்ல நடிகர் மற்றும் தயாரிப்பாளராக செயல்பட்டார் . இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும். ” என்றார்
சூரி தனது பேச்சில்
” வெண்ணிலா கபடிக் குழுவில் இருந்தே எனக்கும் விஷ்ணுவுக்குமான நட்பு தொடர்கிறது . அதில் நடித்தபோது,
இரவு ரெண்டு மணிக்கு போன் பண்ணி டயலாக் சொல்லிக் காட்டி , ”ஒழுங்கா சொல்றேனா ?” என்று கேட்பார் .
அந்த அக்கறை இப்போதும் அவரிடம் பார்த்தேன் . ஒரு ஷாட் நடித்து முடித்து டைரக்டர் ஒகே சொன்ன பிறகும் ‘இன்னும் கொஞ்சம் நான் மெதுவா டயலாக் பேசி இருக்கணும் . ஒன மோர் போவோமா?” என்பார் .
நைட்டு மூன்று மணிக்கு ஷாட் வைத்தாலும் கொஞ்சமா கூட சோர்வு இல்லாமல் உற்சாகமாக நடிப்பார் நிக்கி கல்ராணி . அவர் மாதிரி ஒரு சுறுசுறுப்பான ஹீரோயினை நான் பார்த்ததே இல்லை” என்றார்
சூரி பேசும்போது நிக்கி கல்ராணி பேரை நிக்கி கல்யாணி என்றே சொல்ல, மைக் அருகில் வந்து சூரியை இடை மறித்த நிக்கி கல்ராணி,
தன் பெயரை ஒழுங்காகச் சொல்லச் சொல்லி சூரிக்கு கிளாஸ் எடுத்து , சூரி சரியாக சொன்ன பிறகே விட்டார்
நாயகன் விஷ்ணு விஷால் பேசும்போது
“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படம் எனக்கு மட்டும்தான் பத்தாவது திரைப்படம் என்று நினைத்தேன்
ஆனால் நான் இதைப் பற்றி எழில் சாரிடம் கூறும் நேரத்தில்தான் அவரும் எனக்கு இது பத்தாவது படம் என்றார்
அதன் பின் இசை வெளியீட்டு நேரத்தில் தான் இசையமைப்பாளர் சத்யாவிற்கும் இது பத்தாவது படம் என்று தெரியவந்தது.
நீர்ப்பறவை படத்திற்கு பின் நான் படங்களை தேர்வு செய்து தான் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதே போல் இதுவரை எல்லா படங்களையும் தேர்வு செய்து தான் நடித்து வருகிறேன்.
இதுவும் நான் யோசித்து தேர்வு செய்து நடிக்கும் கதைதான்.
படத்தில் ஒரு பாடலுக்கு கலர் கலரான உடைகளை எனக்கு படத்தின் உடை வடிவமைப்பாளர் ஜாய் அளித்தார். இது போன்ற ஆடைகளை இப்படத்தில் தான் அணிகிறேன்.
முதலில் கொஞ்சம் யோசித்த எனக்கு இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.