படம் ரசிகர்கள் பார்ப்பதற்கு வாகா இருக்குமா ? பார்க்கலாம் .
தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கிராமத்து மளிகைக் கடைக்காரரின் மகன் வாசு (விக்ரம் பிரபு) , இந்திய ராணுவத்தின் ஓய்வில்லா படைப் பிரிவான எல்லைப் பாதுகாப்புப் படையில் சேர்கிறான் .
இந்திய பாகிஸ்தானின் முக்கிய நில எல்லைப் பகுதிகளில் ஒன்றான வாகாவில் இந்திய பாகிஸ்தான் எல்லைக் கோட்டில் ,
கம்பி வேலிக்கு அப்பால் முறைத்துப் பார்த்துக் கொண்டு இருக்கும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் , இந்தப் பக்கம் இவன் என்ற நிலையில் பணியாற்றுகிறான். .
தனிமை அழுத்தும் அந்த வாழ்க்கை சூழலில் , அவன் சந்திக்கும் என்ற காஷ்மீர் வாழ் முஸ்லிம் பெண் மீது (ரன்யா ராவ்) அவனுக்கு காதல் வருகிறது
காதலை சொல்ல அவன் முடிவு செய்யும்போது , பாகிஸ்தான் ராணுவம் .தங்களால் கைது செய்யப்பட்ட இந்திய ராணுவ வீரர் ஒருவரின் தலையை துண்டித்து இந்திய எல்லைக்குள் போடுகிறது
காஷ்மீரில் கலவரம் வெடிக்கிறது .
காஷ்மீரின் எல்லையான அந்த ஊரில் பாகிஸ்தான் மக்களும் வந்து தங்கி வசித்து உறவினர்களை பார்த்து வியாபாரம் செய்து வாழும் சூழல் பாதிக்கப்படுகிறது. (இன்று பாகிஸ்தானில் நடப்பதும் இதுவே )
காஷ்மீரில் உள்ள சில அமைப்புகள் பாகிஸ்தானியர்களை தாக்கத் துவங்க , அவர்களை பத்திரமாக மீட்டு பாகிஸ்தானுக்கு அனுப்பும் வேலை எல்லைப் பாதுகாப்புப் படைக்கு கொடுக்கப் படுகிறது .
வாசுவும் அந்த வேலையில் இருக்கும்போதுதான் கானமும் பாகிஸ்தான் பெண் என்பது தெரிகிறது .
அவள் அவர்கள் நாட்டுக்கு பஸ்ஸில் கிளம்ப , அந்த பஸ்சை வழிமறிக்கும் ஒரு கும்பல் அதற்கு தீ வைக்க, அதில் இருந்து கானம் தப்ப , அவளை வாசு மீட்கிறான் .
எல்லை கடந்து அவளை பாகிஸ்தானுக்குள் கொண்டு போய் விட எண்ணி, அவளோடு பாகிஸ்தானுக்குள் ரகசியமாக நுழைகிறான் . அவளை அவளது பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு,
இந்திய எல்லையை நோக்கிக் கிளம்பும்போது, பாகிஸ்தான் ராணுவத்தின் ஒரு கொடூரமான மேஜர் தலைமையிலான படைப் பிரிவிடம் சிக்குகிறான் .
இந்திய வீரர்களை கொடுமை செய்ய என்றே உள்ள ஒரு சித்திரவதைக் கூடத்தில் பல கொடுமைகளை அனுபவிக்கிறான் .
கானத்தின் தந்தையை அழைக்கும் பாகிஸ்தான் மேஜர் , ‘உன் மகளுக்கு விரைவில் ஒரு பாகிஸ்தானியை மாப்பிள்ளை ஆக்கு’ என்கிறான் .
கானம் அதற்கு மறுக்கும் நிலையில் வாசுவை கொன்று விட முடிவு செய்கிறான் பாகிஸ்தான் மேஜர் .
அப்புறம் என்ன நடந்தது (சொல்லவும் வேண்டுமோ ?) என்பதே இந்த வாகா .
தமிழ்நாட்டு ராணுவ வீரன் , BSF பணி, வாகாவில் வேலை , காஷ்மீர் பெண்ணோடு காதல் என்ற அந்த அடிப்படை விஷயம் சுவாரஸ்யமான ஒன்றுதான் .
கானத்தின் இந்தியக் காதலுக்கு உதவும் பாகிஸ்தானிய கிராம மக்கள் சம்மந்தப்பட்ட காட்சி, நெகிழ்ச்சி .
விக்ரம் பிரபு உடல் ரீதியாக கஷ்டப்பட்டு நடித்து இருக்கிறார் . பாராட்டுக்கள் .
சதீஷ் குமாரின் ஒளிப்பதிவு பிரம்மாதப் பிரமாண்டம் . குறிப்பாக ஓடும் காட்டாற்றை குறுக்காக நீந்தி வாசுவும் கானமும் பாகிஸ்தான் எல்லை தொடும் காட்சியை ,
day for night effect — ல் மிக சிறப்பாக எடுத்து இருக்கிறார் சதீஷ் குமார் .
எனினும் இந்த வாகா பல விசயங்களில் இன்னும் நல்ல படமாக வந்திருக்கலாம்.
குறிப்பாக நாயகி ரன்யா கவர்ச்சியாக இருக்கிறாரே தவிர, காதலுக்கு உரிய முகமோ நடிப்போ அவரிடம் இல்லை .
காதலுக்கான காட்சிகளும் குறைவாகவே இருக்கின்றன .
ஆரம்பத்தில் வரும் மளிகைக் கடை , குடும்பச் சண்டை , ஏனோ தானோ என்று எடுக்கப்பட்டு இருக்கும் ராணுவப் பயிற்சிக் காட்சிகள் , இவற்றை எல்லாம் வெட்டிக் கடாசி விட்டு ,
அந்த நீளத்தை அட்டகாசமான காதல் காட்சிகளுக்குக் கொடுத்திருக்க வேண்டாமா குமாரவேலன்?
வசனமும் படு வீக் .
”மூவாயிரத்து கிலோ மீட்டர் தூரத்துல (தமிழ் நாட்டில் ) இருந்து வந்து ஒரு காஷ்மீர் பொண்ணு கிட்ட காதல் சொல்ற தைரியம் உனக்கு இருக்கும்போது,
இருபது கிலோ மீட்டர் தூரம் மட்டுமே இருக்கிற பாகிஸ்தான் ல உள்ள என் ஊருக்கு நான் தனியா போக முடியாதா ?” என்று கேட்கும்போது , வாசு சும்மா பூச்சி பிடித்துக் கொண்டு நிற்கிறான் .
” பெருசா வாகனம் கண்டு பிடிக்கப் படாத காலத்துலேயே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’னு யோசிச்ச பரம்பரை நாங்க . எங்களுக்கு தூரம் ஒரு பிரச்னையே இல்லை ” என்று வாசுவால் சொல்ல முடியாதா?
“இந்தியாவுல பல மொழி பல இனம் பல மதம் .. உங்களால முன்னேற முடியாது” என்று பாகிஸ்தான் அதிகாரி கூறுவது போல வசனம் வைத்து விட்டு,
அதை சமன் சமன் செய்யும் அளவுக்கு இந்திய தரப்பு வசனங்களை வைக்காமல் விட்டு விட்டார்கள் . அநியாயம்
பாகிஸ்தான், சீன , கார்கில் சண்டைகள் அனைத்திலும் இந்திய இராணுவத்தில் மெட்ராஸ் ரெஜிமென்டின் பங்கு மகத்தானது .
அப்படி இருக்க இங்கிருந்து ராணுவத்துக்கு போகும் எல்லாரும் மிலிட்டரி சரக்கு அடிக்கவே போகிறார்கள் என்ற ரீதியில் வசனம் வைத்து இருப்பது, வடக்கத்தியர்கள் நம்மை இன்னும் அநியாயமான அசிங்கப் படுத்தவே உதவும் .
சொல்லப் படும் கதை வெகு ஜன மக்களுக்கு புரிகிற அல்லது அவர்களை கவர்கிற விதமாகவே இல்லை .
குறைந்த பட்சம் நாயகனுக்கு தமிழரசன் , தமிழ்ச் செல்வன் என்ற பெயரையாவது வைத்து , பாகிஸ்தான் பெண்ணை தமிழ்… தமிழ் .. என்று சொல்லவாவது வைத்து,
படத்துக்கும் நம்ம ரசிகர்களுக்கும் ஒரு மனத் தொடர்பைக் கொண்டு வந்து இருக்கலாம் .
படத்தில் லாஜிக்காக இருக்கும் காட்சிகள் சாதரணமாக இருக்கிறது . நன்றாக இருக்கும் காட்சிகள் லாஜிக் இல்லாமல் இருக்கிறது .
அதுவும் கிளைமாக்சை நோக்கிய காட்சிகளில் பாகிஸ்தான் படைப் பிரிவை விக்ரம் பிரபு ஒற்றை ஆளாக அடித்து வீழ்த்துவதும் ,
பாகிஸ்தான் மேஜரோடு சட்டையை கழட்டி விட்டு ஒண்டிக்கு ஒண்டி மோதுவதும்…. முடியல !
வாகா …. இல்லை ஆகா !