வைக்கிங் மீடியா ஆண்டு எண்டர்டெயின்மென்ட் சார்பில் ரைனா ஜோஷி என்பவர் தயாரிக்க, சச்சின், ஈஷா குப்தா, பிரபு , கிஷோர், தன்யா பாலகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில்,
டி.சத்யா என்பவர் எழுதி இயக்கும் படம் யார் இவன்.
சத்யாவின் தாத்தா டி. பிரகாஷ் ராவ் ஏராளமான தெலுங்குப் படங்களை இயக்கியதோடு , உத்தம புத்திரன், படகோட்டி, களத்தூர் கண்ணம்மா போன்ற சரித்திரம் படைத்த தமிழ்ப் படங்களையும் இயக்கியவர் .
சத்யாவின் அப்பா டி எல் வி பிரசாத்தும் தெலுங்கிலும் இந்தியிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் .
வெண்ணிலா கபடிக் குழு உட்பட மூன்று படங்களை தெலுங்கில் ரீமேக் செய்த இந்த டி.சத்யா , தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் இயக்கும் படம் யார் இவன் ? தமிழில் இது இவருக்கு முதல் படம்.
படம் பற்றிக் கூறும் இயக்குனர் சத்யா ” இது ஒரு மர்டர் மிஸ்ட்ரி திரில்லர் படம் .
கபடி விளையாட்டின் பின்னணியில் படத்தை உருவாக்கி இருக்கிறோம் . ஹீரோ ஒரு கபடி வீரன் . கபடியை ரசிக்கும் கோடீஸ்வரப் பெண் ஒருத்தி அவனை நேசித்து ,
மணந்து கொள்கிறார் . ஒரு நிலையில் அந்தப் பெண் கொல்லப் படுகிறாள். கொலைப் பழி ஹீரோ மீது விழுகிறது .
ஹீரோயின் அப்பாவான கோடீஸ்வரர் குற்றவாளியை தண்டிப்பதில் தீவிரமாக இருக்கிறார் . ஹீரோ என்ன செய்தான் என்பதுதான் கதை . ஹீரோயின் அப்பாவாக பிரபு சார் நடிக்கிறார்
மேலோட்டமாக பார்த்தால் இது வழக்கமான திரில் படம் போல இருக்கும் . ஆனால் அப்படி இல்லாமல் மனோவியல் முறையில் படத்தை கொண்டு போகிறோம் .
இது ஒரு மைன்ட் கேம் படமாக அதாவது மூளை விளையாட்டுப் படமாக இருக்கும் வித்தியாசமான காட்சிகள் . வித்தியாசமான சூழல்கள் ரசிகர்களைக் கவரும் .
படத்தின் எல்லாப் பாடல்களையும் மறைந்த நா . முத்துக் குமார் எழுதி இருக்கிறார் அவர் கடைசியாக பாடல் எழுதிய படம் இதுதான் என்று நினைக்கிறேன் .
இசை தமன் . சூர்யா நடித்த 24 படத்துக்கு படத் தொகுப்பு செய்த புடி பிரவீன் படத் தொகுப்பு செய்கிறார் ” என்கிறார்
தாத்தா டி. பிரகாஷ் ராவ் பற்றிப் பேச்சு வந்தபோது ” எம் ஜி ஆர் நடித்த படகோட்டி படம் கிளாசிகல் கமர்ஷியல் . எம் ஜி ஆர் முதல்வர் ஆன உடம் தாத்தாவுடன் ஒரு முறை போய் அவரை சந்தித்துள்ளேன் .
சிவாஜி சார் நடித்த உத்தம புத்திரன் பற்றி சொல்லவே வேண்டாம் . அது ஒரு காவியம்.
கமல் சார் நடித்த வசூல் ராஜா எம் பி பி எஸ் படத்தில் நான் அசோசியேட் இயக்குனராகப் பணியாற்றினேன் . அப்போது கமல் சாரிடம் தாத்தா பெயரை சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்ட போது,
கமல் சார் ரொம்ப சந்தோஷப் பட்டார் .
ஆனால் இதற்கெல்லாம் முன்பாக சிறு வயதில் சென்னை தி நகர் விஜயராகவா தெருவில் உள்ள எங்கள் வீட்டுக்கு மேற் சொன்ன சாதனையாளர்கள் உட்பட வராத ஹீரோக்களே கிடையாது .
அதெல்லாம் மறக்க முடியாத பொற்காலம்.
தாத்தா மற்றும் அப்பாவின் பெயரைக் காப்பாற்ற வேண்டுமே என்ற பொறுப்புணர்ச்சியும் எனக்கு இருக்கிறது. ” என்றார்
யார் இவன் என்ற கேள்விக்கு டி.பிரகாஷ்ராஜின் பேரன் என்ற கெத்தான பதில் கிடைக்க வாழ்த்துகள் !