பயமா இருக்கு @ விமர்சனம்

வசந்தம் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து, கதை திரைக்கதை வசனம் எழுதி ஜவஹர் என்பவர் இயக்க, 

சந்தோஷ், ரேஷ்மி மேனன் , கோவை சரளா, ஜகன், பரணி, நான் கடவுள் ராஜேந்திரன் , லொள்ளு சபா ஜீவா, ஆகியோர் நடித்துள்ள படம் பயமா இருக்கு .
 
நல்லா இருக்கா ? பார்க்கலாம் 
 
நாகர்கோவில் மார்த்தாண்டம் பகுதியில் வாழும் இளம் தம்பதியில் , கர்ப்பமாக இருக்கும் மனைவி லேகாவின் (ரேஷ்மி மேனன்) ஆசைப்படி,
 
யாழ்ப்பாணத்தில் உள்ள அவளது பெற்றோரை அழைத்து வரப் போகிறான் கணவன் ஜெய் (சந்தோஷ்)
 
அந்த சமயத்தில் இலங்கையில் சிங்கள வெறியர்களின் தமிழின அழிப்பு உச்சம் அடைந்து , அந்த அழிப்பில்,
 
 லேகாவின் பெற்றோர்கள் கொல்லப் பட  ஜெய்யும் சிங்கள ராணுவத்தான்களிடம் சிக்கிக் கொள்கிறான் . 
 
ஒரு இடத்தில் அவனையும் , தொழில் விசயமாக இலங்கை போயிருந்த  வேறு  சில தமிழ்நாட்டு தமிழர்களையும்  ( ராஜேந்திரன், ஜீவா , பரணி, ஜெகன்),  
 
கை கால்களை கட்டி மண்டியிட வைத்து சுட்டுக் கொல்ல முயல்கிறான்கள் சிங்கள ராணுவத்தான்கள் . 
 
”நாங்கள் தமிழ் நாட்டில் இருந்து  அண்மையில் வேலை விசயமாக வந்தவர்கள்; (உங்கள் சிங்கள இனம் உருவாவதற்கு முன்பிருந்தே),
 
இந்த மண்ணில் வாழ்ந்து வரும்   பூர்வீக ஈழத் தமிழர்கள் அல்ல” என்று கூறியும் பயன் இல்லை . 
 
எதிர்பாராத சமயத்தில் ஜெய்  அவர்களோடு சண்டை போட்டு , நெருப்பில் சிலர் விழ , ஒரு வழியாக தோணி மூலம் ஐவரும் தமிழகம் வருகிறார்கள் . 
 
கடல்புறத்து தண்ணீர் பரப்பில் உள்ள சிறு நிலத்தில் உள்ள தங்கள் வீட்டுக்கு நண்பர்களோடு வருகிறான் ஜெய் .
 
மனைவியும் பிறந்த குழந்தையும் அங்கு  இருக்கிறார்கள் . ஆனால் லேகாவின் நடவடிக்கைகள் இயல்பாக இல்லை . 
 
இந்த நிலையில் ஜெய் நண்பர்களோடு கடை வீதிக்குப் போக , அங்கு ஜெய்யை பார்க்கும் ஒருவர் பேய் பேய் என்று அலறுகிறார் .  
 
சிங்கள ராணுவத்தான்களுடன் நடந்த சண்டையில் ஜெய்யும் இறந்ததாக வந்த பத்திரிகை செய்தி காட்டப்படுகிறது . 
 
வேறு சிலர் ”லேகா பிரசவத்தில் இறந்து  விட்டாள். அங்கே இருப்பது அவளது ஆவி” என்கின்றனர் . 
 
அதற்கேற்ப அங்கே புதையுண்ட நிலையில் கண்டெடுக்கப்படும் ஒரு எலும்புக் கூட்டின் கையில் ஒரு மோதிரத்தை நண்பர்கள் பார்க்கின்றனர் .
 
அந்த மோதிரம் இப்பொது லேகாவின் விரலில் இருக்கிறது . லேகாதான் பேய் என்று நண்பர்கள் நம்ப , ஜெய் அதை மறுக்கிறான் . 
 
பேய் ஓட்டும் மந்திரவாதி (கோவை சரளா )  சொன்ன முறையைப் பயன்படுத்திப் பார்த்தால்  ஜெய் தான் பேய் என்று நண்பர்கள் நினைக்கின்றனர் . 
 
ஒரு நிலையில் நண்பர்களில் ஒருவரான பரணிதான் பேய் என்று மற்ற நண்பர்கள் நினைக்கின்றனர் .
 
சிங்கள ராணுவத்தான்களுடன் நடந்த சண்டையில் பரணியும் இறந்ததாக வந்த பத்திரிகை செய்தி காட்டப்படுகிறது . 
 
உண்மையில் யார் பேய் ? உண்மை தெளிவாக தெரிய வரும்போது நடந்தது என்ன  என்பதே,  இந்த பயமா இருக்கு .
 
ஒரு பேய்க் கதையில் ஈழத்து இன அழிப்பை ஓரிரு காட்சியே ஆனாலும் சிறப்பாக காட்டிய இயக்குனர் ஜவஹருக்கு பாராட்டுகள் . 
 
லேகாவின் வீடு …. ! வாவ் ! கேரளாவில் எங்கோ பிடித்துள்ளார்கள் அந்த அற்புதமான லொக்கேஷனை ! கடலுக்குள் இருக்கும் சிறு நிலம் .
 
படகில் மட்டுமே போகும் வசதி.. பின்பக்கம் அடர்ந்த காடு என்று,  அந்த லோக்கேஷன் மயக்குகிறது என்றால் ..
 
அதில் நிறைய இரவு நேரக் காட்சிகளை அற்புதமாக ஒளியூட்டி சிறப்பாக ஷாட்கள் வைத்து படம் எடுத்து  வாய் பிளக்க வைக்கிறார்கள் .
 
இந்த பாராட்டில் இயக்குனருக்கு மட்டுமல்லாமல் மகேந்திரனின் ஒளிப்பதிவுக்கும்  முக்கியப் பங்கு உண்டு . சிறப்பு . 
 
சத்யாவின் பாடல் மற்றும் பின்னணி இசையில் செண்டிமெண்ட். திகில் இரண்டும் சிறப்பாக வெளிப்படுகிறது . 
 
காடுகளுக்குள் இரவில் சில காட்சிகளில் நிஜமாகவே மிரட்டுகிறார்கள் .
 
பேய் மேஜிக் விளையாட்டு அரங்குக்குள்  நிஜ பேயும் போலி பேய்களுமான அந்த காட்சி நல்ல ஐடியா . ஆனால் அதை இன்னும் சிறப்பாக அமைத்து இருக்க வேண்டும் 
 
ரேஷ்மி மேனன், சந்தோஷ் , பரணி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர் . ஜெகன் , ஜீவா கூட சேதாரம் இல்லை . 
 
ஆனால் கோவை சரளாவும் ராஜேந்திரனும்தான் காமெடி என்ற பெயரில் படுத்தி எடுக்கின்றனர் .
 
காஞ்சனா ஸ்டைல் கிளிஷே நடிப்பை விட்டுடுங்க சரளா … புண்ணியமா போகும் . 
 
ஈழப் பிரச்னை பற்றி காட்சி அமைத்தவர்கள் ஏதாவது ஒரு வகையில் கடைசியில் அந்த விசயத்தை மீண்டும் கொண்டு வந்து கனம் கூட்டி இருக்கலாம் .
 
இன்னும் கவனத்தை ஈர்த்து இருக்கலாம் . அநியாயமா மிஸ் பண்ணிட்டீங்களே !
 
எனினும் பேயானாலும் நிஜ காதல் போகாது என்று சொல்லும் அந்த கிளைமாக்ஸ் பாஸ் ஆகிறது . 
 
இன்னும்  உழைத்து  சிரத்தை  மற்றும் செய் நேர்த்தியோடு திரைக்கதை  அமைத்து, இருந்தால் பாக்ஸ் ஆபிசில் படம் இடம் பிடித்து இருக்கும் இந்தப் படம்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *