எம் ஜி கே மூவி மேக்கர்ஸ் சார்பில் ரவிசங்கர் என்பவர் தயாரிக்க, வெங்கி பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில்,
வெங்கடேஷ் ராஜாவும் எஸ் 2 என்ற நிறுவனமும் சேர்ந்து வெளியிட,
கதிர் , வம்சி கிருஷ்ணா , குஷி, மு.களஞ்சியம் , செந்தில் , ரேணுகா நடிப்பில் கிருஷ்ணஷாமி என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் களவுத் தொழிற்சாலை .
எப்படி இயங்குது தொழிற்சாலை ? பார்க்கலாம் .
சர்வதேச சிலைக் கடத்தல் முக்கிய அமைப்பின் முக்கிய நபர் ஒருவன் (வம்சி கிருஷ்ணா ) , கும்பகோணம் பகுதியில் உள்ள ராஜ ராஜபுரம் என்ற ஊரின் கோவிலில் உள்ள,
ஆயிரக் கணக்கான ஆண்டுகள் பழமையான மருத்துவ குணம் மிக்க, சுமார் அறுநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சிலையை திருடத் திட்டமிட்டு வருகிறான் .
கோவிலை நன்கு ஆராய்ந்து , பழங்கால கல்வெட்டுகள், வரலாற்று நூல்களை படித்து கோவிலுக்கு போகும் சுரங்கப் பாதையைக் கண்டு பிடிக்கிறான் .
கொள்ளையடிக்கும் போது துணைக்கு ஓர் ஆள் வேண்டி தேடுகிறான் .
அதே ஊரில் பிள்ளையார் சிலைகளை மட்டும் திருடி விற்கும் பழக்கம் உள்ள ஒருவனை (கதிர்) தேர்ந்தெடுக்கிறான் . அவனுக்கு ஒரு காதலி (குஷி) .
அவள் ”உழைத்துக் கிடக்கும் சொற்ப வருமானமே போதும்” என்று சொன்னாலும் அவளை வசதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது அவன் ஆசை .
‘ஒரே திருட்டு ; பெரிய தொகை’ என்ற சர்வதேச கடத்தல்காரனின் நிபந்தனைக்கு பிள்ளையார் சிலை திருடன் அடிபணிகிறான்.
திட்டப்படி சிலை திருடப்படுகிறதா ?
ஆம் எனில் நடந்தது என்ன ?
இல்லை எனில் நடந்தது என்ன என்பதே களவுத் தொழிற்சாலை . 
மிக மெதுவாக நகரும் திரைக்கதை . வசனங்களை எல்லோருமே யோசித்து யோசித்துப் பேசுகிறார்கள் . யதார்த்தம் மிஸ்ஸிங் .
பிள்ளையார் சிலை திருடனுக்கும் அவன் காதலிக்கும் பெண்ணுக்குமான காதல் காட்சிகள் வெகு சவ சவ .
ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுரங்கத்துக்குள் சர்வ சாதரணமாக போகிறான் கடத்தல்காரன். .ஆயிரம் ஆண்டு அடைப்பை ஜஸ்ட் தட்டித் திறக்கிறான் .
சுரங்கத்துக்குள் கடத்தல்காரன் தம் அடித்து விட்டுப் போட அந்த சிகரெட்டை வைத்து குற்றவாளியை நெருங்குகிறது போலீஸ் .
போலீசின் கோணத்தில் கடத்தல் வழக்கின் முதல் குற்றவாளியான பிள்ளையார் சிலைத் திருடன் ‘என் லவ்வரோட வாழணும் சார்’ என்று கெஞ்சியதும்,
அவனை ஜில்லோ என்று அனுப்பி வைக்கிறார் போலீஸ் அதிகாரி .
கடைசிக் காட்சியில் சர்வதேச சிலை கடத்தல்காரனும் போலீஸ் அதிகாரியும் ஒத்தைக்கு ஒத்தை சண்டை போடுகிறார்கள் .
இப்படி படம் முழுக்க ஏகப்பட்ட காமெடிகள் !
நடிகர் செந்தில் பேசும் ஒரு காட்சி கூட நகைச்சுவையாக இல்லை .
பின்னணி இசை ஆர்க்கெஸ்ட்ரா வாசிப்பது போல இருக்கிறது .
தியாகராஜனின் ஒளிப்பதிவு பாரட்டும்படி சிறப்பாக இருக்கிறது
கடத்தப்படும் சிலைகளை மீட்கப் போராடும் போலீஸ் அதிகாரி( மு.களஞ்சியம்) , பிறப்பால் ஓர் இஸ்லாமியர் என்று கதாபாத்திரப் படுத்தப்பட்டு இருப்பதும் ,
குடும்பம் குழந்தைகளை கூட கவனிக்காமல் சிலை கடத்தலை தடுக்க போராடுகிறார் என்பதும்,
மத நல்லிணக்க நோக்கில் சொல்லப்பட்டு இருப்பது படத்தின் சிறப்பு . பாராட்டுக்குரிய ஒன்று .