சாமி முதல் பாகத்தில் வில்லன் பெருமாள் பிச்சையை ஆறுச்சாமி (விக்ரம்) செங்கல் சூளையில் வைத்து எரித்தது…
ஆறுச்சாமி தவிர யாரும் அறியாத மர்ம மரணமாக முடிவுக்கு வர படம் முடிந்தது.
இரண்டாம் பாகத்தில் பெருமாள் பிச்சையின் மனைவி ( சுதா சந்திரன்) மற்றும் பிள்ளைகள் தேவேந்திர பிச்சை ( ஜான் விஜய்), மகேந்திர பிச்சை (ஓ ஏ கே தேவர்),
ராவண பிச்சை ( பாபி சிம்ஹா) ஆகியோர் ஈழத் தமிழ் பேசிக் கொண்டு இலங்கையில் கடத்தல் தாதாக்களாக இருக்கின்றனர் .
அப்பாவின் மர்ம மரணத்துக்கு காரணம் கண்டு பிடிக்க, ராவண பிச்சை திருநெல்வேலி வருகிறான் . கூடவே சக சகோக்களும் !
அப்பா மரணம் அடைந்த விதம் அறிகிறான் .
இந்த நிலையில் திண்டுக்கல்லில் பணியில் இருக்கும் ஆறுச்சாமியை மீண்டும் திருநெல்வேலிக்கு பனி மாறுதல் தந்து அனுப்புகிறது காவல் துறை
ஆறுச்சாமியை கொல்ல ராவண பிச்சை கிளம்ப , ஆறுச்சாமியும் வர …
28 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் கதை மீண்டும் துவங்குகிறது .
ஐ ஏஸ் படித்துக் கொண்டு இருக்கும் இளைஞன் ராமசாமி ( விக்ரம்) தமிழ் நாட்டு அமைச்சரின் (பிரபு) வீட்டில் பணியிலும் இருக்கிறார் .
தாத்தாவோடு (டெல்லிகணேஷ்) கல்யாணத்துக்கு போய் மந்திரம் சொல்கிறார் .
அமைச்சரின் மகள் தியா(கீர்த்தி சுரேஷ்) ராமசாமியை காதலிக்கிறார் . அதை அமைச்சரின் மனைவியும் ( ஐஸ்வர்யா ) ஆதரிக்கிறார் .
கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை முறையற்ற முறையில் பல்வேறு நாடுகளுக்கு கடத்திக் கொடுத்து,
பத்து சதவீதம் கமிஷன் வாங்குவதன் மூலம் கோடி கோடியாய் பணம் குவிக்கிறான் ராவண பிச்சை .
கட்சிக்கு பணம் வந்த வகையில் தனக்கு வர வேண்டிய பத்து சதவீத கமிஷனை அமைச்சரிடம் ராவண பிச்சை கேட்க ,
அதற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்று அமைச்சர் மறுக்க, நம்பாத ராவண பிச்சை அமைச்சரின் தியாவைக் கடத்துகிறான்
அமைச்சர் பணத்துக்கு பதில் சொத்துப் பத்திரம் தர ஒத்துக் கொள்ள, அதற்குள் ராமசாமி தியாவைக் காப்பாற்றுகிறான் .
அமைச்சர் பத்திரத்தை கொடுக்காமல் காத்துக் கொள்கிறார் .
ராமசாமிக்கு போலீஸ் அதிகாரிகளை பார்த்தால் தன்னை மீறி ஓர் உத்வேகம் வருகிறது . எனவே ஐ ஏ எஸ் பதவி வந்தும் விரும்பி ஐ பி எஸ் ஆக மாறுகிறான் .
திருநெல்வேலிக்கு போஸ்டிங் கிடைத்து கிளம்ப , மறுக்கும் தாத்தா , ராம சாமி யார் என்பதையும்,
ஆறுச்சாமிக்கும் அவன் மனைவிக்கும் (இந்த படத்தில் திரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா ராஜேஷ் ) என்ன ஆனது என்பதை சொல்கிறார் .
திருநெல்வேலிக்கு ராமசாமி ஐ பி எஸ் ஆக வர, ராமசாமி, அமைச்சர் அவரது மகள் மூவரின் உயிருக்கும் குறி வைக்கிறான் ராவண பிச்சை
ராவண பிச்சை செய்யும ஒரு மெகா பணக் கடத்தல் மற்றும் ராவண பிச்சை, தேவேந்திர பிச்சை , மகேந்திர பிச்சை ஆகியோரின் உயிருக்கு ராமசாமி குறி வைக்க ,
அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த சாமி 2.
முன்படச் சுருக்கம் சொல்லி , ராவண பிச்சை இலங்கையில் இருந்து கிளம்பி வந்து தனது அப்பாவை கொன்றது ஆறுச்சாமி என்பதை கண்டு பிடிப்பதில் துவங்குகிறது படம்
பர பர படபட சல்சல் டமால் டுமீல் டம் டமார் என படத்தைக் கொண்டு போகிறார ஹரி
தியா ராமசாமியிடம் காதல் சொல்லும் அந்த ஏரியா அழகோ அழகு .
திட்ட மிட்ட பட்டாசு வெடிக் கொலையில் இறந்து போன கர்ப்பிணிப் பெண்ணின் குழந்தையைப் பார்க்கையில் ராமசாமி தன் வரலாறு நினைத்துப் பார்ப்பது கனம்.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை பரபரப்பு. பாடல்கள் ஜஸ்ட் ஒகே .
வெங்கடேஷ் அங்கு ராஜின் ஒளிப்பதிவில் எக்ஸ்ட்ரீம் லாங் ஷாட்கள் அட்டகாசம் . அதிலும் அந்த கிளைமாக்ஸ் பாலைவன ஏரியா .
வி டி விஜயன் மற்றும் டி எஸ் ஜெய் தந்திருக்கும் படத் தொகுப்பு விறுவிறுப்பைக் கூட்டுகிறது . சில்வாவின் சண்டைப் பயிற்சி அதிரடி சரவெடி .
சாமி முதல் பாகம் வந்து பதினைஞ்சு வருஷம் ஆச்சு . ஆனால் பெரிதாக மாறாமல் தன்னை கட்டிக் காத்துக் கொள்ளும் விக்ரம் ஒரு அதிசயம். அதே நேரம் நடிப்பில் இன்னும் பக்குவம் .
வரும் ஒவ்வொரு காட்சியிலும் வசீகரிக்கிறார் கீர்த்தி சுரேஷ். குரல் ரொம்ப பிளஸ்
வில்லனாக அதிரடி காட்டுகிறார் பாபி சிம்ஹா . சிறப்பு .
என்ன ஆச்சு ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ?
பிரபு ஐஸ்வர்யா இருவரும் இயல்பான நடிப்பு .
சூரி ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார் .
அந்த பிரசவம் … ஹாரிபிள் என்றும் சொல்லலாம் . ‘ஹரி’பிள் என்றும் சொல்லலாம்
வில்லன்கள் இலங்கைத் தமிழ் பேசுவதாக காட்டுவது தேவையா ? அவங்க படுற பாடு போதாதா ? நாம வேற கல்லை தூக்கி போடணுமா ?
அதே போல டெல்லியில் ஒரு முட்டாள் தனமாக தமிழன் நடந்து கொள்வதாகவும் ஒரு மலையாளி அவனை கண்டிப்பது போலவும் காட்சி வைத்திருப்பதெல்லாம் …. நியாயமா ஹரி ?
எனினும் சாமி 2…. காதல் காமெடி கமர்ஷியல் அதிரடி ஆக்ஷன் மசாலா