ஆதி மனிதனான ஆதித் தமிழனின் வேட்டைக் கருவி மரத்தால் ஆன கோல்தான் , அதே நேரம் ஒரு வேட்டைக்காரன் தன்னை விட சில சக்தி வாய்ந்த உயிர்களை பழக்கி வைக்கவேண்டும் என்பதன் அடையாளம்தான் முருகனிடம் கோழியும், ஒரு உதவியாள உயிராக இருந்தது என்ற அமைவு.
உலோக காலம் துவங்கிய பிறகு கோல் வேல் ஆனது . கோழி மயில் ஆனது .
தமிழகத்தின் வேட்டை சமூகத்துக்கு என்று வேறெங்கும் பார்க்க முடியாத ஒரு மாபெரும் கண்ணியம் உண்டு . உணவுக்காக விலங்குகளை பறவைகளை வேட்டையாடினாலும் அவற்றை ரொம்பவே மரண வலியில் துடிக்க விடாமல் சட்டென்று கொல்லும் உத்திகள் இங்கு இருந்தன .
பின்னாளில் இங்கு வந்த ஆங்கிலேயர்கள் இந்த உத்திகளை இங்கிலாந்தில் உள்ள தன் நாட்டுக் கைதிகளைக் கொல்லவும் கருணைக் கொலை செய்யவும் பயன்படுத்தினார்கள் என்று கூறப்படுவதும் உண்டு .
அப்படிப்பட்ட வேட்டை சமூகம் இன்றைக்கு இல்லை! அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை நிஜத்துக்கு மிக நெருக்கமாக நின்று சொல்லும் படமாம் இது.
படத்தைப் பற்றிக் கூறும் கரு.பழனியப்பன் “
சந்திரா என்னிடம் இந்தக் கதையைக் கூறிய உடன் வியந்து போனேன் . முதல் காரணம் அந்தக் கதை . இரண்டாவது காரணம் பல ஆண் இயக்குனர்களாலேயே யோசிக்க முடியாத தெறிப்பான கதையை, பெண் இயக்குனரான சந்திரா சொன்னார் . இது நாம் தவறாமல் இடம்பெற வேண்டிய திரைப் பதிவு என்று தோன்றியது . உடனே நடிக்க ஒத்துக் கொண்டேன் ” என்கிறார்
ஒளிப்பதிவு எம்.எஸ்.பிரபு , இசை கே, பாடல்கள் நா.முத்துக்குமார் என அடுத்தடுத்து ஒவ்வொரு துறைக்கும் அர்த்தமுள்ள ஆட்களை தேர்ந்தெடுத்து அழகு சேர்த்துக் கொண்டிருக்கும் சந்திராவின் இப்படத்தை எட்செட்ரா என்டர்டைன்மென்ட் சார்பாக வி.மதியழகன் மற்றும் ஆர்.ரம்யா இருவரும் தயாரிக்கிறார்கள்.
வாகாகச் சொல்லப்படும் வரலாறுகள், வளமான படைப்புகள் ஆகும் !