ஒளி ரெவல்யூசன் நிறுவனம் சார்பில் தயாரித்து கதை, திரைக்கதை வசனம் எழுதி அறிமுக இயக்குநர் ப.ஜெயகுமார் இயக்கி இருக்கும் படம் ‘வா பகண்டையா’
படத்தின் ஹீரோவாக அறிமுக நடிகர் விஜய தினேஷ் நடிக்க, அறிமுக நடிகை ஆர்த்திகா ஹீரோயினாக நடித்திருக்கிறார். வில்லனாக அறிமுக நடிகர் நிழன் நடிக்க, மற்றொரு வில்லனாக மும்பை நடிகர் யோகி ராம் நடிக்கிறார். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, மீரா கிருஷ்ணன், ‘வெண்ணிலா கபடி குழு’ புகழ் நித்திஷ் வீரா, பவர் ஸ்டார் சீனிவாசன், மனோபாலா, காதல் சுகுமார், பிளாக் பாண்டி, போண்டா மணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்து பாடல்கள் எழுதியுள்ளார். ஆரி ஆர்.ஜே.ராஜன் ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்கிறார். சிவசங்கர், அக்ஷை ஆனந்த், விஜி ஆகியோர் நடனம் அமைக்க, இடி மின்னல் இளங்கோ சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார்.
’வா பகண்டையா’ படத்தின் இசை வெளியீட்டு விழா அதிரடியாக இருந்தது. , வெளியிடப்பட்ட டிரைலர் பலரது புருவத்தை உயர்த்தியது. தற்போது வெளியாகியிருக்கும் புது டிரைலரால் தமிழகத்தின் முக்கிய பிரமுகர்களின் பார்வை இயக்குநரும், தயாரிப்பாளருமான ப.ஜெயகுமார் மீது விழுந்திருப்பதோடு, படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி முடிந்து படம் திரைக்கு வரத் தயாராக இருக்கும் நிலையில் படம் பற்றி பேசினார் ஜெயக்குமார் .
” இது ஒரு கிராமத்துக்கு கதை . அதன் மூலம் நாட்டு நலனை நாட்டின் ஒருமைப்பாட்டை பேசும் கதை . விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் எங்கள் கிராமம்தான் கதைக்களம் ஊர் அடையாளம் முக்கியம் என்பதால் ஊரின் பெயரால் நபரைக் குறிப்பிடும் பாரம்பரியத்தின் அடிப்படையில் பகண்டையன் என்று பொருள் பட, வா பகண்டையா என்று வைத்து இருக்கிறேன் .
பகண்டையன் வந்து மக்களுக்கு நல்லது சொல்வான் செய்வான் ” என்று கூறும் ஜெயகுமார்,” சமூகத்தில் நடக்கும் அவலங்களைதான் இப்படம் பேசுகிறது என்றாலும், காதல், காமெடி, நகைச்சுவை என அனைத்து ஜனரஞ்சகமான அம்சங்களும் நிறைந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக இருக்கும்” என்கிறார்.
படம் குறித்து மேலும் கூறியவர், “இன்று சாதியை மையப்படுத்திய திரைப்படங்களின் வருகை அதிகரித்துள்ளது.
இன்று சில குறிப்பிட்ட சாதி சார்பாக படம் எடுக்கும் பலரும் தங்கள் சாதியின் நியாயங்களை தங்கள் பாதிப்புகளை மட்டும் சொல்கிறார்கள். தங்கள் தரப்பு செய்யும் தவறுகளை அநியாயங்களை சொல்வது இல்லை .
ஆனால் என் படம் அப்படி இல்லை . இரண்டு தரப்பின் நியாய அநியாயங்களை தவறுகளை பாதிப்புகளை சொல்கிறேன் . அந்தக வகையில் நடுநிலைமையோடு நேர்மையான படைப்பாக என் படம் இருக்கும் ஒரு தரப்பினர் தாங்கள் அனுபவித்த இன்னல்களை சொல்லி படம் எடுக்கிறார்கள். மற்றொரு தரப்பினர், ஒடுக்கப்பட்டவர்களை காப்பாற்ற போடப்பட்ட, வன்கொடுமை தடுப்பு சட்டம் வேண்டாம், என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி படம் எடுக்கிறார்கள்.
இதன் மூலம் சாதி பாகுபாடே இல்லாத ஒரு இடமாக இருந்த சினிமாவில் சாதி பிரிவினையை உருவாக்கிய இவர்களை முதலில் ஒழிக்க வேண்டும். இவர்களின் கருத்துக்களை மக்கள் மனதில் இருந்து அழிக்க வேண்டும், என்பதுதான் என் கருத்து. அந்த கருத்தை அழுத்தமாக படத்தில் பேசியிருக்கிறோம்,
அதே நேரம் நான் சாதியை பற்றி மட்டும் பேசவில்லை. இந்து கடவுள்களால்தான் சாதி பிரிவினை உருவானது என்ற பொய்யான குற்றச்சாட்டை உடைத்தெறி ந்திருக்கிறேன். இங்கு சாதியை காட்டி இந்துக்களை மதம் மாற்றம் செய்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இங்கு மாறவேண்டியது மதம் அல்ல மக்கள் தான். மக்களின் மனங்களில் இருக்கும் சாதி உணர்வை மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர, மதத்தை அல்ல. நம் இந்து மதம் மிகவும் புனிதமானது. ஆனால், அதை சிலர் கொச்சைப்படுத்தும் வகையில் பேசிக்கொண்டிருப்பதோடு, மக்கள் மனதில் பல தவறான கருத்துக்களை விதைக்கிறார்கள். அவர்களுக்கு என் படம் சவுக்கடி கொடுப்பது உறுதி,
வன்கொடுமை தடுப்பு சட்டம் வேண்டாம், என்று சொல்லும் கருத்தை நான் ஏற்க மாட்டேன். அதே சமயம், வன்கொடுமை தடுப்பு சட்டத்தால் சில அப்பாவிகள் பாதிக்கப்படக்கூடாது. அதனால், அந்த சட்டத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களை பாதுகாப்பதற்காக இயற்றப்பட்ட அந்த சட்டத்தைக் கொண்டு,
உயர் சாதி என்று சொல்லக்கூடிய சில அப்பாவிகளை, பலர் பழிவாங்குவது, மிரட்டுவது போன்றசம்பவங்கள் நடக்கின்றன. அதை தடுக்க வேண்டும், என்று என் படம் வலியுறுத்தியுள்ளது. ஏனென்றால் நூறு குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதுதான் இந்திய அரசியல் சட்டத்தின் இதயம் போன்ற கருத்து

அதோடு இன்று பலர் எதிர்க்கும் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தால், இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என்ற தவறான கருத்துக்களை மக்கள் மனதில் பலர் பரப்புகிறார்கள். ஆனால், அந்த சட்டங்களால் இஸ்லாமியர்களுக்கும், நம் நாட்டுக்கும் எத்தகைய பாதுகாப்பு கிடைக்கிறது, என்பதை மிக தெளிவாக பேசியிருக்கிறேன். அதற்கு தீவிரவாதிகள்தான் பயப்பட வேண்டும். எந்த மத சாதியைச் சேர்ந்த தேசப் பற்றாளர்களும் பயப்படத் தேவை இல்லை என்பதை விளக்குகிறேன் .
நீட் தேர்வு வேணும் தான் . ஆனால் அதற்கான படிப்பை , வாய்ப்புகளை எல்லோருக்கும் கொடுத்து விட்டு அப்புறம் வையுங்கள் என்கிறேன் .
பிரதமர் மோடி மற்றும் அவர் கொண்டு வரும் திட்டங்களை தமிழகத்தில் தொடர்ந்து எதிர்த்து வருவதோடு, அதை தவறாகவும் சித்தரித்து வருகிறார்கள். ஆனால், என் படம் வெளியான பிறகு பிரதமர் மோடியையும், அவருடைய திட்டத்தையும் தமிழக மக்கள்
கொண்டாடுவார்கள்,” என்கிறார்
“அப்படியானால் இந்த படம் பா.ஜ.க-வுக்கு ஆதரவான அல்லது அவர்களுடைய கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லும் படம் தெரிகிறதே…அப்படிப்பட்ட படம் தானா? என்று கேட்டதற்கு ,
” நிச்சயம் இல்லை. மக்களுக்கு நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும். அவர்களை முட்டாளாக்கும் சிலரின் முகத்திரை யை கிழிக்க வேண்டும், என்பதே என் நோக்கம். அதற்கான விஷயங்களை மட்டுமே படத்தில் பேசியிருக்கிறோம். இப்போது எதையும் விரிவாக சொல்ல முடியாது. படம் பார்த்தால் உங்களுக்கே புரியும்.
குறிப்பாக பெண்களுக்கு ஆதரவாகவும், தனிமனித பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே தீண்டாமை உருவாகிறது, என்பதை பற்றி படம் பேசும். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் மட்டும் அல்ல, உயர் சாதியில் இருந்தால் கூட, இங்கு பெண்களை ஒருவித அடிமைகளாகத்தான் நடத்துகிறார்கள். அப்படி இருக்க கூடாது, என்று படம் குரல் கொடுக்கும். மொத்தத்தில், ‘வா பகண்டையா’ சமூகத்திற்கான ஒரு படம்

இந்தப் படத்துக்கு எப்படிப்பட்ட எதிர்ப்புகள் வந்தாலும், அதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். சர்ச்சையை உருவாக்கி அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. என் படம் ஓடவில்லை என்றால் கூட நான் கவலைப்பட மாட்டேன், காரணம் நான் பணத்திற்காக படம் எடுக்கவில்லை. மக்களை நல்வழிப்படுத்தவும், என் இந்து சமயத்தை காப்பாற்றவும்தான் படம் எடுக்கிறேன்.
அதை தொடர்ந்து செய்துக்கொண்டு தான் இருப்பேன். இதற்கு தடையாக வருபவர்களை நிச்சயம் எதிர்த்து நிற்பேன். அதே சமயம், எனக்கு ஆதரவு கொடுப்பவர்களை பின்னாடி வைத்துக்கொண்டு என் படத்தை வியாபாரம் செய்யும் வேலையை என்றும் செய்ய மாட்டேன். மொத்தத்தில் நான் மக்களுக்காக படம் எடுக்கிறேன். இது என் படம் என்பதை விட, மக்கள் படம் என்று தான் சொல்வேன்,
நான் பாஜக தொண்டன் . எல்லோரும் பாஜக கொடி கட்ட பயந்த காலத்திலேயே நான் பாஜக கொடி கட்டி இருந்தவன் . இன்று பலரும் பாஜக கொடியை தைரியமாக காட்டுகிறார்கள் . நான் இன்றும் பாஜக தொண்டன்தான் .
எனது அடுத்த படம் ஆளுமை. அது இன்னும் தைரியமாக பல உண்மைகளை சொல்லும் வகையில் இருக்கும்
தொடர்ந்து படங்கள் எடுப்பேன் “என்றார்.
படத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தோற்றத்தில் மத்திய அமைச்சர் கதாபாத்திரம் ஒன்று வருகிறதாம். அது பேசும் விஷயங்கள் பரபரப்பாக இருக்குமாம்