நிழற்குடை @ விமர்சனம்

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிக்க, தேவயானி, விஜித், கண்மணி, நிஹாரிகா, நிலா,  ராஜ்கபூர், இளவரசு , வடிவுக்கரசி, மனோஜ் குமார் நடிப்பில் ஹிமேஷ் பாலாவின் வசனத்தில் சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம். 

தனது தன்னலமற்ற சேவையால்,  தான் பணிபுரியும் முதியோர் இல்லத்துக்கு அரசின் உயரிய விருது ஒன்றை வாங்கித் தரும் அளவு சிறப்பாகப் பணியாற்றும் பெண்மணி ஜோதிம்மா (தேவயானி)

காதல் கம்  மதக் கலப்புத் திருமணம் செய்து கொண்ட இந்து கணவன் (நிரஞ்சன்) – கிறிஸ்தவ மனைவி (கண்மணி) தம்பதியின் மகள் (முதலில் நிலா, அப்புறம் நிஹாரிகா) , அதிகம் அழுதால் வலிப்பு வரும் உடல் குறை உடையவள். 
திருமண சமயத்தில் இந்த தம்பதியை அவர்கள் பெற்றோர் திட்டிய காரணத்தால் , இப்போது அவர்கள் மனம் மாறி சமாதானத்துக்கு வந்தாலும் இவர்கள் புறக்கணிக்கிறார்கள் . 

நிறைய சம்பாதிக்க வேண்டும் . சுக போக வாழ்க்கை வேண்டும் . முக்கியமாக அமெரிக்காவில் செட்டில் ஆகி டாலரில் குளிக்க வேண்டும் என்பது இந்தத் தம்பதியின் லட்சியம் . 

இருவரும் வேலை செய்யும் நிலையில் குழந்தையை பார்த்துக் கொள்ள ஒரு பணிப்பெண்ணை நியமிக்க , அவள் குழந்தையை கவனிக்காமல் காதலனை வீட்டுக்கு வர வைத்து சரக்கடித்து சரசமடுகிறாள் . 

விஷயம் தெரிந்து அவளை வேலையை விட்டு தூக்கிய நிலையில், மகளின் பிறந்த நாளைக் கொண்டாட இந்தத் தம்பதி , ஜோதிம்மா இருக்கும் முதியோர் இல்லம் செல்ல, அங்கே ஜோதிம்மாவுடன் குழந்தை ஒட்டிக் கொள்ள, குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஜோதிம்மாவை வீட்டுக்கே கொண்டு வந்து விடுகிறார்கள் . 

கணவன் மனைவி இருவரும் கடும் வேலை, குடி , பார்ட்டி என்று ஜாலியாக இருக்க , ஜோதிம்மாவும் குழந்தையும் தாயும் சேயுமாய் மகிழ்கிறார்கள் . 

இவர்களின் பிளாட்டில் பக்கத்து பிளாட்டில் இருக்கும் ஒருவன் சைக்கோ போல இருக்கிறான் . வீட்டுக்குள் விதம் விதமான குழந்தை பொம்மைகளை அடித்து உடைத்து கிழிக்கிறான் . 

இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் அமெரிக்கா விசா கிடைத்து விட , மகளோடு  அவர்கள் கிளம்ப,  மகளால் ஜோதிம்மாவை பிரிய முடியவில்லை. 

அமெரிக்க கிளம்பும் முதல் நாள் இரவு  குழந்தை காணாமல் போக பழைய வேலைக்காரி , சைக்கோ நபர் , கணவனின் கம்பெனி முதலாளி ஆகியோர் மீது கணவனும் மனைவியும்  சந்தேகத்தின் பேரில் போலீசில் புகார் செய்ய , போலீஸ் ஜோதிம்மாவையே சந்தேகப்பட, கூடவே ஒரு  நெகிழ வைக்கும் விஷயத்தை சொல்லி படத்தை முடிக்கிறார்கள்.

எனினும்,  ஒரு ஒகே லெவல் கதையாகவே கருதப்படும் இந்தப் படத்தை அடுத்த கட்டத்துக்கு தூக்கி நிறுத்துவது ஜோதிம்மா கதாபாத்திரத்தின் பின்னணி . 

ஆம் அவர், ஈழப்போரில் சிங்கள காட்டுமிராண்டி ராணுவத்தால் தன் கணவன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இழந்து தனிமரமான அனாதைப் பெண்மணி ! 

இந்தத் தம்பதியின் மூன்று வயது மகளை அவர் முதன் முதலில் பார்க்கும்போது,  இறந்து போன தனது மூன்று வயது மகளின் தோற்றத்தில் இந்த சிறுமியும் இருந்தது தான்,  அவர் முதியோர் இல்லப் பணியையும் விட்டு விட்டு குழந்தையைப் பார்த்துக் கொள்ள வரக் காரணம் . 

இரண்டாவது முறை மகளை அவரால் எப்படி இழக்க முடியும் ? கடைசியில் என்ன ஆனது என்பதே இந்தப் படத்தின் சிகரம் . 

வயரிங் வேலைகளை எல்லாம் முடித்து விளக்குகள், மின் விசிறி சுவிட்சுகள் எல்லாம் ஆன் செய்யப்பட நிலையில் இருக்கும் வீட்டுக்கு முதன் முதலில் மின்சாரம் வந்தால் எப்படி இருக்கும்?

அப்படி ஜோதிம்மாவின் கதாபாத்திரப் பின்னணிதான்  இந்தக் கதைக்கு தனி பிரகாசத்தைத்  தருகிறது. படத்தின்  உயிரே இந்த ஈழப் பின்னணிதான். 

கருவறைக்கும் இருட்டு அறைக்கும் நெகிழ வைக்கும் விளக்கம் தருவது உள்ளிட்ட சில இடங்களில் ஹிமேஷ் பாலாவின் வசனம் சிறப்பு. 

தப்பான வேலைக்காரி,  முதலாளி ஆகிய கதாபாத்திரங்களை பயன்படுத்திய விதம் சிறப்பு. சைக்கோ நபர் விஷயம் ஆரம்பத்தில் ஓவராக பயமுறுத்தியது . பிறகு பலன் தரவில்லை. அதில் படக் குழுவின் நோக்கம் நிறைவேறவில்லை.  

வடிவுக்கரசியின் கதை நெகிழ வைக்கிறது . 

எனினும் இரண்டாம் பகுதியில் திரைக்கதை படத் தொகுப்பு ஆகியவை சரியாக இல்லாத காரணத்தால் படம் முடிந்து விட்டது என்ற உணர்வு வந்து பலரும் வெளியே கிளம்பிய பிறகும் படம் பதினைந்து நிமிடம் ஓடுகிறது . அதில்தான் சில முக்கிய விசயங்களும் வருகிறது . Too bad . 

சிறப்புக் காட்சிகளில் படம் இன்னும் இருக்கிறது என்று சொல்லி வெளியே போகிறவர்களை இழுத்து உட்கார வைக்கலாம் . எல்லா ஊரின் தியேட்டர்களிலும் என்ன செய்வீர்கள் . 

புதிய பாதை படத்துக்கு பார்த்திபன் , ‘படம் இன்னும் ஐந்து நிமிடம் ஓடும்’என்று சிலைடு போட்டது போல படம் இன்னும் பத்துப் பதினைந்து நிமிடம் ஓடும் என்று இந்தப் படத்துக்கும் சிலைடு போட முடியுமா? 

கடைசியில் ஜோதிம்மாவை மீண்டும் பழைய இடத்துக்கோ அல்லது தேவையுள்ள இன்னொரு வீட்டுக்கோ அனுப்பி இருந்தால் இது கிளாஸ் படம். ஆனால் என்னமோ அவரை சாமுராய் மாதிரி சில் அவுட்டில் நடக்க விட்டு இருப்பது எல்லாம்  ரொம்பவே குழந்தைத்தனம் . 

இன்னொரு பக்கம் குழந்தை ஜோதிம்மாவை சேர்ந்ததா நிரந்தரமாகப் பிரிந்ததா என்பதுதான் கதை . அதோடு முடித்துக் கொண்டிருக்க வேண்டும்.

இவர்கள் ஊர்க்கதை உறவுக் கதை சொல்கிறேன் என்ற பெயரில் எங்கெங்கோ போகிற ஓணான்களை எல்லாம் இவர்களே இழுத்துக் கொண்டு வருகிறார்கள். அதுவே வேண்டாத வம்புதான்.

தேவயானி கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார் . ஈழத் தமிழை அவர் பேசும் விதம் அழகு . வாழ்த்துகள் தேவயானி. 

நிஹாரிகா தோற்றமும் நடிப்பும்   சிறப்பு . .  நிலாவும் பட்டொளி வீசுகிறாள் 

கண்மணி கவனிக்க வைக்கிறார் . எனினும இவரும் விஜித்தும்  நடிப்பில் தெரியும் ஒரு வித பிளாஸ்டிக் தன்மையைத் தவிர்த்து இருக்கலாம் 

ராஜ்கபூர் , இளவரசு, வடிவுக்கரசி சிறப்பு. 

குருதேவின் ஒளிப்பதிவில் குறையும் இல்லை.  நரேன் பாலகுமாரின் இசை ஓகே ராகம் . 

படம் ஆரம்பம் முதலே ரொம்ப சீரியசாக மட்டுமே போவதும் அவர்கள் காமடி என்று நினைத்த ஏரியாவும் புஸ்வாணமாக நமத்துப் போனதும் .ஒரு பெரும் குறை . காரணம் அந்தக் காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் . 
எனினும் மொத்தத்தில் படம் பெரிதாக ஏமாற்றவில்லை என்பதே ஒரு பலம்தான் . 

டூரிஸ்ட் பேமிலி பார்த்தவர்கள் அந்தப் படம் பிடித்தது என்பவர்கள் இதையும் பார்க்கலாம் . 

டூரிஸ்ட் ஃபேமிலியைத் தொடர்ந்து இந்தப் படமும்  வெற்றி பெற்றால் ஈழப் பின்னணி உள்ள படங்கள் இன்னும் வர வாய்ப்பு இருக்கும் . 

ஈழ அழிவுக்கு துரோகத்தால் துணைபோன தமிழக இந்திய  அரசியல்வாதிகளால் ஏற்பட்ட ஆறாக் காயத்துக்கான வலி குறைப்பு மருந்தையாவது  தமிழ்த திரையுலகம்தானே போடவேண்டும். 

ஒரு ஓரமாக சற்றே இளவெயில் அடிக்கும்தான்.  எனினும் நிழற்குடையின் அடியில் … நம்பிக்கையோடு  உட்கார்ந்து விட்டு வரலாம் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *