ஆருத்ரா சினி புரடக்சன் கம்பெனி மற்றும் மதுரை ஸ்ரீ மீனாக்ஷி கிரியேசன் சார்பில் நாகராஜ் மற்றும் ஞானோதயம் தயாரிப்பில் ,
மணிகண்டன் , ரஃபியா ஜாஃபர் , எஸ் எஸ் கே ஜே மனோகரா, ராஜா ஆகியோர் நடிப்பில் நாகா என்கிற நாகராஜ்,
பாடல்கள் உட்பட எழுதி இயக்கி இருக்கும் படம் வன்முறைப் பகுதி . முறையான பகுதியா? பேசலாம் .
உசிலம்பட்டிப் பக்கம் உள்ள ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் முனியசாமி ( மணிகண்டன்) மிகுந்த கோபக்காரன் .
தவிர அடாவடி ஆள் கூட . அவன் பெண்களைக் கிண்டல் செய்து வம்பிழுத்த காரணத்தால் ,
சுத்துப் பட்டு கிராமங்கள் சம்மந்தப்பட்ட ஒரு திருவிழாவே நின்று கிடக்கிறது .
தாய் மாமன் உட்பட யாரும் அவனுக்கு பெண் தர மறுப்பதால் அவனுக்கு கல்யாணம் ஆகலையே என்பது அவனது அம்மா சின்னத்தாயின் (திண்டுக்கல் தனம்) கவலை.
பக்கத்து ஊரில் சொத்துப் பிரச்னையில் ஒருவர் அண்ணனைக் கொன்று இருக்க, செத்தவரின் பிள்ளைகள் , கொலை செய்த சித்தப்பனை குத்துகின்றனர் .
எனினும் உயிர் பிழைக்கும் அந்த நபர், மனைவியின் (சுமதி ராம கிருஷ்ணன்) எதிர்ப்பையும் மீறி , மதனி பாண்டியம்மாளிடமும் ( உசிலம்பட்டி பாண்டியம்மாள் ),
அண்ணன் பிள்ளைகளிடமும் சமாதானமாகப் போக விரும்புவதாக சொல்கிறார் . அவர்களும் ஏற்கின்றனர் .
பாண்டியம்மாளின் மகள் தவமணி ( ரஃபியா ஜாஃபர் ) கல்லூரியில் படிக்கிறாள் .
தவமணியின் அப்பாவின் சகோதரி வேலம்மாள் (பாண்டியம்மாள்) சின்னத்தாயும் முனியசாமியும் வாழும் கரட்டுப்பட்டியில் வாக்கப்பட்டு குழந்தை இல்லாமல் இருக்கிறாள் .
வேலம்மாளும் சின்னத்தாயும் தோழிகள் . மகனுக்கு கல்யாணம் ஆகாதது கண்டு புலம்பும் சின்னத்தாயின் கண்ணீர் கண்டு வருந்தும் வேலம்மாள் ,
தன் அண்ணன் மகள் தவமணியை முனியசாமிக்கு பேசி முடிக்கிறாள் .
என்னதான் அடாவடிப் பேர்வழியாக இருந்தாலும் கல்யாணம் ஆனால் முனியசாமி திருந்துவான் என்பது அவளது நம்பிக்கை .
திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் முனியசாமிக்கு வேலம்மாளின் கணவன் (ராஜேந்திரன்) புத்தி சொல்ல , அவனையே அடிக்கிறான் முனியசாமி .
வெகுண்டு எழும் வேலம்மாள் , அவன் திருந்த மாட்டான் என்று சொல்லி கல்யாணத்தை நிறுத்தி விடுகிறாள் .
இதற்கிடையில் முனியசாமிக்கும் தவமணிக்கும் காதல் வந்து விடுகிறது .
தவமணியின் அண்ணன்கள் பெண் தர மறுக்க, அவளை தூக்கிக் கொண்டு போய் கட்டுவதாக முனியசாமி சவால் விடுகிறான் .
தவமணி கல்லூரி ஹாஸ்டலுக்கு அனுப்பப்பட , அவளிடம் முன்பே சொல்லி திட்ட மிட்டபடி, ஓடிப் போய் கல்யாணம் செய்து கொள்ள,
அழைத்துக் கொண்டு வர முனியசாமி ஹாஸ்டலுக்கு போக, அங்கே ஓர் விபரீதம் நிகழ்ந்து ஓர் உயிர் போகிறது .
அப்புறம் நடந்தது என்ன என்பதே இந்த வன்முறைப் பகுதி.
உசிலம்பட்டி பகுதி மக்களின் பேச்சு வழக்கை மிக சரியாக சுத்தி சுத்தமாக பதிவு செய்துள்ள படம் இது .
அந்தப் பகுதி மக்களின் நிறம், நடை உடை பாவனை உண்மைக்கு மிக நெருக்கமாக பதிவு செய்யப்பட்டு உள்ளது .
மண்ணும் புழுதியும் வெக்கையும் வறட்சியும் அப்படியே பதிவு செய்யப்பட்டு இருக்கும் படம் இது . சபாஷ் . அருமை .
துணைக் கதாபாத்திரங்களை உருவாக்கிய விதத்தில் அசத்தி இருக்கிறார் இயக்குனர் நாகா . குறிப்பாக சித்தப்பா கதாபாத்திரம். அது அடிக்கும் யூ டர்ன் எதிர்பாராதது . அருமை
அந்தப் பகுதி மாந்தர்களே மிக இயல்பாக சிறப்பாக நடித்துள்ளார்கள்
மிக எளிய ஒளிப்பதிவு வலிமையுடன் ஜொலிக்கிறது .
அது போலவே பின்னணி இசையின் எளிமையே படத்துக்கு சிறப்பு . ”சதிகாரியே….. ” பாடல் மிக இனிமை .
மணிகண்டன் சிறப்பாக நடித்துள்ளார் . தனமும் அப்படியே .
மிக சிக்கலான – கொஞ்சம் குழப்பமான வேலம்மாள் கேரக்டரில் மிக சிறப்பாக நடித்துள்ளார் பாண்டியம்மாள் . அருமை . பாராட்டுகள் .
நடிப்பில் யாருமே சோடை போகவில்லை . காரணம் யாருமே தனியாக நடிக்காமல் இயல்பாக வளைய வருகிறர்கள் . எல்லோருக்கும் பாராட்டுகள் .
படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களான முனியசாமி, சின்னத்தாயி , வேலம்மாள் கதாபாத்திரங்களை வடிவமைத்த விதத்தில் குளறுபடிகள்.
தாய்மாமன் குடும்பத்துக்கு முனியசாமி செய்யும் அராஜகம் மன்னிக்க முடியாதது . அவனை எப்படி ஏற்றுக் கொல்ல முடியும் ?
எனினும் இரண்டு மணி நேரம் , படம் பார்ப்பவர்களையும் அந்த மனிதர்களில் ஒருவராக உலவ விடுகிறார்கள் .
வன்முறைப் பகுதி … மண் மணம்