வில் மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் பாடலாசிரியர் பா விஜய் நாயகனாக நடித்து, தயாரித்து இயக்க ,
கே பாக்யராஜ் எஸ் ஏ சந்திரசேகர், பேராசிரியர் கு ஞானசம்பந்தன், நடிகைகள் சஞ்சனா சிங், தக்ஷிதா குமாரி,
மேகாலீ,யுவா, சோனி சிரிஸ்டா ஆகியோர் நடித்திருக்கும் படம் ‘ஆரூத்ரா ’. படம் ருத்ரமா ? இல்லை டிக்கட் காசு பத்திரமா ? பேசலாம் .
பெண் சிலை போல முக மூடி அணிந்த ஒரு உருவம் , ஒரு நகைக் கடை அதிபர் உட்பட ஐந்து பேரை , காற்று, நெருப்பு , நீர் உள்ளிட்ட பஞ்ச பூதங்களைப் பயன்படுத்தி கொல்கிறது.
அவற்றை தடுக்க பிரைவேட் டிடக்டிவ் மூலம் ( கே. பாக்யராஜ்) முயலும் போலீஸ் துறை ஒவ்வொரு முறையும் தோற்கிறது .
நகரில் மிகப் பெரிய புராதனப் பொருட்கள் விற்பனைக் கடை வைத்து இருக்கும் ஓர் இளைஞர் ( பா . விஜய்),
பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வை சிறுமிகளுக்கு தரும் பணிக்காக பல ஊர்களுக்கும் பயணித்து சேவை செய்கிறார்.
சிலை வடிவ முகமூடி அணிந்த உருவம் நான்கு பேரைக் கொன்றநிலையில் நகைக்கடை அதிபரை (ஜோ மல்லூரி),
கொல்ல முயலும்போது பிரைவேட் டிடக்டிவ் மற்றும் போலீஸ் அந்த உருவத்தை மடக்குகின்றனர் .
அது யாரென்று பார்த்தால் ……
சிலை வடிக்கும் ஸ்தபதி (எஸ் ஏ சந்திர சேகர்) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியை அவர்கள் வீட்டில்,
நல்லவன் போல் பழகிய ஒரு மலையாளத்தான் ( நடிகர் விக்னேஷ்) பாலியல் தொந்தரவு செய்வதை ,
நகைக் கடைக்காரர் பார்த்து விட .. அதற்குப் பிறகு நடக்கும் விபரீதங்கள் சோகங்கள் இழப்புகளே இந்த கொலைகளுக்கு காரணம் என்பது தெரிகிறது .
கொலையாளி யார் ? சிறுமி விசயத்தில் நகைக்கடைக்காரர் உள்ளிட்ட கொலைகாரர்கள் எப்படி சம்மந்தப் பட்டார்கள் ?
கொலையாளியால் நகைக் கடைக்காரரையும் கொன்று பழி தீர்க்க முடிந்ததா என்பதே இந்தப் படம் .
புனே அருகே அருவி சீறிப் பாயும் மலை உச்சியில் ஒரு குற்றவாளியை பெண் முகமூடி அணிந்த உருவம் கொல்லும் நிலையில் படம் துவங்குகிறது .
பா. விஜய் ஆர்வத்தோடு உற்சாகமாக நடித்திருக்கிறார்
அடுத்தடுத்து கொலைகள் நடக்க, கவர்ச்சிகரமான மனைவி (சஞ்சனா சிங்) , கவர்ச்சி மச்சினி ,
ஜொள்ளு விடும் அசிஸ்டன்ட் ( நான் கடவுள் ராஜேந்திரன் ) புடை சூழ வாழ்ந்தபடி விசாரணை செய்கிறார் டிடக்டிவ் .
அந்த காட்சிகளில் சற்றே பழைய பாணி பாக்யராஜை பார்க்க முடிகிறது .
கொலைகளும் விசாரணைகளும், கொஞ்சம் கிளாமரும் கொஞ்சம் காமடியுமாக முதல் பாதி சிதறலாக முடிகிறது .
இரண்டாம் பகுதியில் கதைக்கு வருகிறார்கள் .
கோவில்களுக்கு சிலை வடிக்கும் ஸ்தபதி குடும்பம் , நம்பி வீட்டுக்குள் ஒருவனாக பழக விட்ட ஒரு மலையாளத்தான் (நடிகர் விக்னேஷ்) நயவஞ்சகத்தோடு,
சொந்த அண்ணனைப் போல எண்ணிப் பாசம் காட்டும் பெண்ணிடம் தவறாக நடக்கும் காட்சிகள் பதைபதைக்க வைக்கின்றன என்றால்
பணத்துக்காக மற்றோருக்கு விருந்தாக்கும் காட்சிகள் துடிதுடிக்க வைக்கின்றன என்றால் கடைசியில் அந்த பெண்ணை நெஞ்சில் மிதித்து,
ரத்தம் சிதற சகதித் தரையில் அழுத்திக் கொல்லும் காட்சிகள் விதிர்விதிர்க்க வைக்கின்றன .
அந்த கேரக்டரை ஒரு மலையாளியாக பா . விஜய் படைத்து இருப்பது மிக மிக யதார்த்தம் .
குற்றவாளிகளை கொல்வதற்கு சிலை வடிக்கும் களப் பின்னணியை பயன் படுத்திக் கொண்ட விதம் சிறப்பு .
பா விஜய் மற்றும் மீனாட்சி சுந்தரம் எழுதி இருக்கும் பாடல் வரிகள் மிக அருமை . வித்யாசாகரின் இசை பாடல்களுக்கு பலம் சேர்க்கிறது .பி எல் சஞ்சய் ஒளிப்பதிவு ஜஸ்ட் ஒகே .
முதல் பகுதி கொஞ்சமாவது அக்கறையோடு உருவாக்கப் பட்டிருந்தால் படம் சிறப்பாக அமைந்திருக்கும்.
எனினும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை கொடூரத்துக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,
விளக்கமாக விரிவாக தெளிவாக காட்சிகள் வைத்திருக்கும் விதத்தில் மரியாதை பெறுகிறது படம் .