60 வயது மாநிறம் @ விமர்சனம்

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, 

விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ் ,சமுத்திரக்கனி,   இந்துஜா, குமாரவேல்,  சரத், மதுமிதா, மோகன்ராம் ,  அருள் ஜோதி, பரத் ரெட்டி நடிப்பில், 
 
ராதா மோகன் எழுதி இயக்கி இருக்கும் படம் ’60 வயது மாநிறம்’.  மாநிறம் மங்குமா ? இல்லை தங்கமா ? பார்க்கலாம். 
 
மனைவி இறந்த நிலையில் ஒற்றை மகனோடு (விக்ரம் பிரபு) வாழும் முதியவர் கோவிந்தராஜ்  (பிரகாஷ் ராஜ்) அல்சீமர் என்ற, 
 
நினைவிழத்தல் நோயால் பாதிக்கப்படுகிறார் . 
 
வேலை தொழில் என்று பறக்கும் மகன் அவரை மேற்படி நோயாளிகளுக்கான பராமரிப்பு இல்லத்தில் சேர்த்து விடுகிறான் .
 
‘பணம் கொடுக்கிறோமே பிறகென்ன ?’ என்ற எண்ணம் அவனுக்கு 
 
அங்கே முதியோர் இல்லத்தில் பெண் மருத்துவர் ஒருவர் (இந்துஜா) கோவிந்தராஜை நன்றாக பார்த்துக் கொள்கிறார் . 
இந்த நிலையில் மகனின் அஜாக்ரதை காரணமாக கோவிந்தராஜ் தொலைந்து போகிறார் . 
 
தொடர்ந்து நினைவு படுத்தாவிட்டால் தான் யார் என்பதையே மறந்து விடும் அவருக்கு என்ன ஆகுமோ என்ற பதற்றத்தில் மகனும் மருத்துவரும் அவரைத் தேடுகிறார்கள் . 
 
அப்பாவைத் தேடும் பணியில் இணையும் பெண் மருத்துவரோடு , நாயகனுக்கு காதல் வருகிறது .  
 
கன்ஸ்ட்ரக்ஷன் தொழில் விதி மீறல்களுக்கு ஒத்துழைப்புத் தராத ஒரு நல்ல அதிகாரியை கொலை செய்ய முடிவு செய்யும் முதலாளி ஒருவன் ( அருள் ஜோதி ), 
 
அந்த வேலையை காசுக்கு கொலை செய்யும் அடியாள் ஒருவனிடம்   (சமுத்திரக்கனி ) ஒப்படைக்கிறார் . 
 
சம்மந்தப்பட்ட அதிகாரியை அவர்கள் கொல்ல முயல ,அந்த வண்டியில் கொவிந்தராஜ் ஏறுகிறார் . ஒரு நிலையில்  போலீசுக்கு பயந்து   அடியாளும்  அவனது உதவியாளும் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தை( குமார வேலு-  மதுமிதா) மிரட்டி, 
 
அந்த வீட்டில் ரகசியமாகத்  தங்குகின்றனர் . உடன் கோவிந்தராஜும் !
 
போலீஸ் ஒரு பக்கம் தேட , இன்னொரு பக்கம் முதலாளி அடியாளிடம்  அவன்   மிரட்டி தங்கி இருக்கும் வீட்டில் உள்ள அனைவரையும் கொல்லச் சொல்கிறார் . 
 
ஆனால் அதற்குள் கோவிந்தராஜ் மற்றும் மிரட்டப்பட்ட குடும்பத்தினர் காட்டும் அன்பால் மனம் மாறும் அடியாள் அவர்களை  கொல்லத் தயங்குகிறான் . 
 
கொந்தளிக்கும் முதலாளி அடியாளையும்  சேர்த்து எல்லோரையும் கொல்ல ஆள் அனுப்ப , நடந்தது என்ன ? நல்லவர்கள் தப்பினார்களா ?
 
கோவிந்தராஜ் தன் மகனுடன் இணைந்தாரா என்பதே இந்த 60  வயது மாநிறம் 
 
கன்னடத்தில் வந்த ‘kothi bannaa sadhaarana maaykattu என்ற படத்தின்  கதைக்கு மிக சிறப்பான திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் ராதாமோகன் .
அன்பு , பாசம், மனிதாபிமானம், உறவின் வலிமை, பிரிவின் துயர் , முதுமையின் சிரமம் , அதை இளமை தாங்கிப் பிடிக்க வேண்டிய கடமை  அனைத்தையும் அடிக்கோடிட்டு வலியுறுத்தும் திரைக்கதை . 
 
தொழில் நுட்ப ரீதியாக பார்த்தாலும் ஒரு காட்சியில் இருந்து பிணைப்பாகவும் இணைப்பாகவும் இன்னொரு காட்சி ,
 
அதன் நீட்சியாக பிறிதொரு காட்சி என்று செய்நேர்த்தி மிக்க திரைக்கதை . 
 
அந்த திரைக்கதைக்கு தனது வசனங்களால் உயிர்க் காற்று கொடுத்து இருக்கிறார் விஜி . நகைச்சுவை, சீரியஸ் , இரண்டு ஏரியாவிலும் விஸ்வ ரூபம் எடுக்கிறது வசனம். 
 
ஒரு காட்சியின் வசனத்தில் இருந்து பிறிதொரு காட்சியோ வசனமோ உருவாகும்படி பின்னிப் பிணைந்து இருக்கின்றன திரைக்கதையும் வசனமும் . 
 
விவேக் ஆனந்தின் ஒளிப்பதிவு சிறப்பு .  
எல்லோரும் சேர்ந்து சிறப்பான படமாக்கலை சாத்தியப் படுத்த மிச்சம் உள்ள விசயங்களை தன் இசையால் உணர வைக்கிறார் இளையராஜா . அருமை . 
 
படத்தின் பிரகாஷ் ராஜ் தோன்றும் முதல் காட்சியில் அவரது தோற்றமே , மனசுக்குள் சிம்மாசனம் போட்டு உட்காருகிறது .
 
அந்த சிம்மாசனத்தில் இருந்து கடைசி வரை இறங்காத அற்புத நடிப்பால் மனசின் ஆழப் பக்கங்களை வருடிப் போகிறார் பிரகாஷ் ராஜ் . 
 
படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு இம்மியும் மாறாமல் ஒரே   மாதிரியாக அவர் வழங்கும்  பளீர் பளீர் என்று  சிரிப்பில் இருக்கும் ஒரு ரிதம் அபாரம் . 
 
விருதுக்கு விருந்து வைக்கும் நடிப்பு . 
 
இதுவரை விக்ரம் பிரபு நடித்த படங்களிலேயே சிறப்பான நடிப்பு இந்தப் படத்தில்தான் . மெல்லிய நுண்ணிய உணர்வுகளை ஜஸ்ட் லைக் தட் காட்டி உணர்ந்து நடித்திருக்கிறார் . இந்துஜா அழகு.  நடிப்பில் இன்னும் அழகு . சில குளோசப் சிரிப்புகள்தான் கொஞ்சம் ….. பட் இட்ஸ் ஒகே . 
 
அடியாள்  கேரக்டரில் சமுத்திரக் கனி நிதான நடிப்பை வழங்கி இருக்கிறார் .  அவரது பொடியாளாக வரும் தம்பியின் கதாபாத்திர அமைப்பு நடிப்பு இரண்டும் நைஸ் 
 
மதுமிதவோடு சேர்ந்து குமாரவேல் இந்தப் படத்தில் காமெடியிலும் ரகளை செய்கிறார் . ( பாராட்டில் பாதிப்பங்கு வசனத்துக்கு!) . 
 
அப்பாவின் காதலை தான் காதலிக்கும் பெண் சொல்லி நாயகன் அறிந்து கொள்ளும் அந்த ஏரியா அபாரம் .  அதை வைத்து இவர்கள் காதலுக்கு இணைப்பு  எடுப்பதும் அழகு . 
 
இன்னொருவரை கணவன்  என்று எண்ணி  அன்பு காட்டும் மறதி  நோய் மனைவியை தாங்கும் அந்த வயதான கதாபாத்திரம் அன்பின் சிகரம் . . 
 
இப்படி பகுதி பகுதியாக பிரித்துப் பாராட்ட படத்தில் நிறைய  விஷயங்கள் உண்டு .அடியாள் கேரக்டருக்கு சமுத்திரக் கனியைப் போட்டதாலேயே அவர் அந்த நடுத்தரக் குடும்ப நபர்களை கொல்லப் போவதில்லை என்பது புரிந்து விடுகிறது .
 
எனவே ஒரு முக்கியமான பதைபதைப்பு ஏரியா சப்பென்று ஆகி விடுகிறது . 
 
அடியாளின் பொடியாள் காதலிக்கும் பெண்  திடீரென  எம் ஜி ஆர் படத்து நம்பியாருக்கு ஒத்தாசை செய்யும் பெண் போல ஏன் மாறினார் ? புரியல . 
 
இப்படி சொல்ல இன்னும் ஒரு  சில விஷயங்கள் இருந்தாலும் … 
 
அதை எல்லாம் விடுவோம் ….. 
 
மனிதப் பண்புகளுக்கு மகுடம் சூட்டும் சிறந்த படம் இது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .  உலகம் போகிற போக்கில் இது போன்ற படங்கள் கட்டாயம் தேவை 
 
மொத்தத்தில் … 
 
60 வயது மாநிறம்’…. பொன் நிறம் !
 
 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *