சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் டி.ராஜேந்தர் தயாரிக்க, சிம்பு, நயன்தாரா , சூரி, ஆண்ட்ரியா நடிப்பில் பாண்டிராஜ் எழுதி இயக்கி இருக்கும் படம் இது நம்ம ஆளு . இது நம்ம படமா ? பார்க்கலாம் .
ஓர் ஆண் குழந்தை பிறந்த நிலையில் பொண்டாட்டி ஓடிப் போய்விட , பிள்ளையை வளர்க்க தன் வாழ்க்கை அர்ப்பணித்த ஒரு அப்பன் ( ஜெயப்பிரகாஷ்) .
சிவா என்ற பெயர் கொண்ட அந்தக் குழந்தை வளர்ந்து இளைஞனாகி (சிம்பு) சென்னை வந்து ஒரு ஐ டி நிறுவனத்தில் வேலை பார்க்கிறது . நெருங்கிய நண்பன் ஒருவன் (சூரி)
சிவாவுக்கும் பிரியா என்ற தெலுங்குப் பெண்ணுக்கும் (ஆண்ட்ரியா) காதல் . அனால் அந்தப் பெண்ணின் தந்தையோ தனது தங்கை மகனுக்கு மகளை கல்யாணம் செய்து வைக்க விரும்பிக் கெஞ்ச ,
காதலை தனது அப்பாவின் துணியோடு தியாகம் செய்கிறான் சி……வா . (அடேய்.. அடேய்… ! நீ ர்ர்ரர்ர்ர்ரொம்ப நல்லவன்டா )
இந்த நிலையில் ஊரில் அப்பா பார்த்த மைலா என்ற பெண்ணை (நயன்தாரா) , பெண் பார்க்கப் போகிறான் சிவா . ரொம்ப பக்குவமாகவும் யதார்த்தமாகவும் இருக்கும் அவளுக்கு,
சிவா- பிரியா காதல் விவகாரம் தெரிகிறது . எனினும் சிவா உண்மையை சொல்வது அவளுக்குப் பிடிக்கிறது .
மூன்று மாதம் ஆன பிறகுதான் கல்யாணம் என்று பெற்றோர்கள் முடிவு செய்கின்றனர்
இதற்கிடையே மைலாவுக்கு டேவிட் என்று ஒரு காதலன் முன்பே இருந்ததாக சிவாவுக்கு தெரிய வர, அது பற்றி அவளை சந்தேகப்பட்டுக் கேட்க, அவள் கோபப்பட்டு போகிறாள் .
அந்த ஊடல் மாறி இருவரும் திகட்ட, திகட்ட காதலிக்க ,இனி எல்லாம் சுகமே என்ற நிலையில் , எதிர்பாராத வகையில் இவர்கள் காதலுக்கு ஒரு சிக்கல் வருகிறது . அப்புறம் என்ன ஆனது என்பதே இது நம்ம ஆளு .
இப்படி ஒரு பதவிசான கதை படத்தில் இருந்தாலும், திரைக்கதை ரீதியாக இந்தப் படத்தின் நோக்கம் வேறு .
சிம்பு, நயன்தாரா இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பியவர்கள் என்பது மட்டுமின்றி, இருவரின் வாழ்விலும் இருந்த பல ‘காதல்’கள் எல்லாம் மீடியாக்கள் மூலமாக வெகுஜன மக்களுக்கும் நன்றாக தெரியும் அல்லவா?
அது போன்ற ஒரு கதையில் அவர்களையே சேர்ந்து நடிக்க வைப்பதன் மூலம் , திரைக்கதையும் வசனமும் கொடுக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் ,இருவரின் நிஜ வாழ்வை பிரதி பலித்து,
ரசிகர்களை ஆரவாரம் செய்ய வைத்து ….
அதன் மூலம் வெற்றியை அடைய வேண்டும் என்ற, இயக்குனர் பாண்டிராஜின் திட்டமே இந்தப் படத்தின அஸ்திவாரம்
வணிக ரீதியாக அது புத்திசாலித்தனமான விஷயம்தான்.
அதற்கேற்ப வெகு ஜன மக்களிடம் சிம்பு — நயன்தாரா உறவும்- பிரிவும் குறித்த சுவாரஸ்யம் குறையாது இருந்த காலகட்டத்தில் இந்தப் படம் பம்பர் ஹிட் ஆகி இருக்கும் .
ஆனால் அநியாய தாமதம காரணமாக சிம்பு .நயன்தாரா விவகாரம் வெகு ஜன மக்களுக்கு பழைய விஷயம் ஆகிவிட்ட நிலையில்,
பசி மரத்துப் போன நிலையில் வரும் ஆறிய பிரியாணி போல, படம் ஒருவழியாக இப்போதுதான் வந்திருக்கிறது என்பதால் …….
பாண்டிராஜ் திட்டமிட்ட மேஜிக், மிஸ் ஆகி விட்டது .
எனினும் சேதாரம் பெரிசாக இல்லாமல் இருக்க வசனங்கள் மற்றும் காமெடி மூலம் ஊடாடிப் போராடி இருக்கிறார் பாண்டிராஜ் .
சிம்பு நயன்தாரா நிஜ வாழ்வு பிரதிபலிப்பு விசயங்களை வெட்டியோ, ஒட்டியோ அல்லது பொதுவாகவோ சூரி அடிக்கும் காமெடி ‘பஞ்ச்’கள் படத்தை காப்பற்றுகின்றன
சிம்பு ஆண்ட்ரியா சம்மந்தப்பட்ட அந்த பேமிலி பஜார் விளம்பர ஐடியா பண்டிராஜ் டச் !
பால சுப்பிரமணியெமின் ஒளிப்பதிவு வழக்கம்போல….. வண்ணங்கள், குளிர்ச்சி, , துல்லியம் , காட்சியின் உணர்வுக்கு பலம் சேர்ப்பது என்று… எல்லா வகையிலும் ஆசம் அட்டகாசம் .
குறளரசன் இசையில் ‘காத்தாக வந்த பொண்ணு’ பாட்டு அடிக்கடி முணுமுணுக்க வைக்கிறது . யம்மாடி ஆத்தாடி பாணியில் வரும் பாட்டு உட்பட மற்ற எல்லா பாடல்களும் சுமார் ரகமே.
பின்னணி இசையில் இன்னும ஆழம் தேவை
சிம்பு ஆடும் ஒரு கால் நடனம் ரொம்ப கஷ்டமான விசயமாக இருக்கலாம் . ஆனால் பார்ப்பதற்கு அவ்வளவு சுவாரஸ்யமாக எல்லாம் இல்லை .
நயன்தாரா கொஞ்சம் டல் அடித்து இருந்தாலும் பளீர் சிரிப்புக;ளிலும் உதட்டு முறுக்கிலும் பேலன்ஸ் செய்கிறார்
இப்படித் தோன்றினால் அழகாக இருப்போமா என்பது பற்றி எல்லாம் கவலைப்படாமல் நடித்துள்ளார் ஆண்ட்ரியா . அந்த பாசாங்கின்மையே அழகாக இருக்கிறது
வசன காமெடியில் ஸ்கோர் செய்கிறார் சூரி
சந்தானம் ஒரு கெஸ்ட் ரோலில் வந்து போகிறார்
பொரிகடலை சாப்பிட்டுக் கொண்டே பேசுகிற போக்கில் கேட்பது போல பிரியாவின் அப்பா தன் மகளின் காதலை விட்டுத்தரச் சொல்வதும் ,
பழைய பேப்பரைக் கடைக்கு போடும் தோரணையில் சிவாவும் அவன் அப்பாவும் பிரியாவை விட்டுக் கொடுத்து விட்டு வருவதும் போங்கோ போங்கு.
அதே போல சிவாவும் மைலாவும் உருகி உருகி காதலிக்க ஆரம்பித்த பிறகு , வரும் பிரச்னையில் சம்மந்தப்பட்டவர்கள் நடந்து கொள்ளும் விதம் யதார்த்தம் இல்லாத குழந்தைத்தனம் .
அல்லது அந்தக் காட்சிகளை நியாயப்படுத்தும் வகையில் சம்மந்தப்பட்ட கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்படவில்லை . மைலா எடுக்கும் முடிவுக்கும் இது பொருந்தும் .
எப்படிப்பட்ட பக்குவமான நபரையும் காதல் இப்படி மாற்றும் என்பதுதான் கதை எனில் , மைலாவின் அந்த மாற்றம் ரசிகர்கள் ஏற்கும்படி சொல்லப் படவில்லை
கிடைக்கிற கால்ஷீட்டில் கிடைக்கிற இடங்களில் கிடைகிற நேரங்களில் எல்லாம் பாண்டிராஜ் ஷூட்டிங் நடத்தி என்பது , படத்தின் கடைசியில் அவர் சொல்லும் வசனத்தில் இருந்தே தெரிகிறது .
கடைசியாக அந்த மூன்று கல்யாண மேட்டரும் அதை அடுத்து வரும் காட்சியும் மீண்டும் பாண்டிராஜின் ரியல் மேஜிக் டச் .
இது நம்ம ஆளு …பொதுவில் கொஞ்சம் பழைய ஆளு .
ஆனால் சிம்பு நயன்தாரா விவகாரங்கள் இப்போதும் உங்களுக்கு ஹாட் டாபிக் என்றால் ,
உங்களுக்கு, இது பலே ஆளு !