ஜீவா, காஜல் அகர்வால், சுனைனா, ஆர் ஜே பாலாஜி, மயில்சாமி, பாலசரவணன், மனோபாலா, ஸ்ருதி ராமகிருஷ்ணன், மதுமிதா , மந்த்ரா ஆகியோர் நடிப்பில்
‘யாமிருக்க பயமே’ படப் புகழ் டீகே இயக்கி இருக்கும் படம் ‘கவலை வேண்டாம்’.
கவலை வேண்டாமா ? பார்க்கலாம் .
படிக்கிற காலத்தில் மேஜிக் போல காதலில் விழும் ஜோடிக்கு (ஜீவா – காஜல் அகர்வால் ) கல்யாண சமயம் முதலே கருத்து வேறுபாடுகள் . ஒரு நிலையில் அது வெடித்துப் பெரிதாக பிரிந்து வாழ்கின்றனர் .
இந்நிலையில் நாயகனை அவனது தோழி ஒருத்தி (சுனைனா) விரும்புகிறாள் .
கணவனை தேடி வரும் மனைவி இரு தரப்பு விவாகரத்துக்கு சம்மதம் கேட்கிறாள் . ஒரு வாரம் என்னோடு தங்கி விட்டுப் போனால் தருகிறேன் என்று கணவன் கூறுகிறான் .
வேண்டா வெறுப்பாக அவளும் தங்க இருவருக்கும் இடையில் நல்லதொரு நெகிழ்வுப் புரிதல் வருகிறது .
அதே நேரத்தில்தான், மனைவி விவாகரத்துக்குப் பிறகு இன்னொருவனை (பாபி சிம்ஹா ) திருமணம் செய்ய முடிவு செய்து இருப்பது கணவனுக்குத் தெரிய வருகிறது .
மனம் உடையும் அவன் மனைவியை நிரந்தரமாக பிரிய முயல , அந்த மன உடைவை வளர்த்து, அவனை மணக்க தோழி விரும்ப….. ,மனைவி கணவனை நெருங்க ,
நண்பர்கள் , தோழி , , நாயகி கல்யாணம் செய்து கொள்ள விரும்பும் நபர் எல்லோரும் தங்கள் வசதிக்கு ஏற்ப கணவன் – மனைவியை பிரிக்கவோ சேர்க்கவோ முயல…
இதுக்கு மேல கதை என்னன்னு கேப்பீங்களா? கேப்பீங்களா ? கேப்பீங்களா ? ம்ம்ம்ம்… அந்த பயம் இருக்கட்டும் !
என்னத்தைச் சொல்ல ? முதல் காட்சியில் காஜலும் தோழியாக வரும் சுருதி ராமகிருஷ்ணனும் பேசிக் கொண்டே போக , நீளும் அந்தக் காட்சியிலேயே கொட்டாவி வருகிறது .
அப்புறம் இஷ்டத்துக்கு ஓடுகின்றன காட்சிகள் . ஏன் சேருகிறார்கள் . எதற்கு பிரிகிறார்கள் ? கதா பாத்திரங்கள் எல்லோருமே லூசா ? இல்லை படம் எடுத்தவர்களும் பார்ப்பவர்களும் லூசா ? யாரை யார் நோவது ? கொடுமை !
ஜீவா ,காஜல் எல்லோருமே கடமைக்கு நடித்துள்ளனர் . காஜலை சகிக்க முடியவில்லை . ஒரு கேரக்டரும் இயல்பாக படைக்கப் படவில்லை .
நாயகனின் அம்மா பிரிந்ததற்கும் , அதன் பிறகு அவனது அப்பா வேறு பெண்ணை மணப்பதற்கும் கூறப்படும் காரணத்தைக் கேட்கும் போது, கழட்டி அடித்து……க் கொள்ள வேண்டும் போல தோன்றுகிறது
ஜீவா, காஜல் ஆர் ஜே பாலாஜி பால சரவணன் உட்பட எல்லோரும் . வாயைத் திறந்தால் இரட்டை அர்த்தத்தில் ..ம்ஹும் \, ஆபாசமான ஒரே அர்த்தத்தில் பேசுகின்றனர் . கேவலம் .
நல்ல படங்களுக்கு எல்லாம் தேவை இல்லாத காரணம் சொல்லி டார்ச்சர் கொடுக்கும் சென்சார் போர்டு என்ன புல் பிடுங்கிக் கொண்டு இதை எல்லாம் அனுமதிக்கிறது என்றே தெரியவில்லை .
இந்த ஈனப் பிழைப்புக்கு , வேறு வேலை பார்க்கலாம் . அட தூ …. !
வசனத்தை விட்டால் , ஒருவனின் பிறப்புறுப்பில் ஒரு கும்பலே வரிசையாக வந்து உதைப்பது , இரு ஆண்கள் சண்டை போட சமாதானப்படுத்த வரும் பெண்ணை இருவரும் நடுவில் போட்டு நசுக்குவது…
இதெல்லாம் காமெடியாம் ! மானங்கெட்ட பிழைப்பு !
தயாரிப்பளர்களை விடுங்க .. அவங்க வியாபாரிகள் .!
யாமிருக்க பயமே என்ற வித்தியாசமான காமெடி படம் கொடுத்த இயக்குனர் டிகே … ஏன் இப்படி கேவலமா போனீங்க ?
மொத்தத்தில் கவலை வேண்டாம் … கவலைக்கிடம் !
..