
வாவ் 4 ஸ்டுடியோஸ் சார்பில் மேகலா தயாரிக்க, சஞ்சய், அருந்ததி நாயர் , தம்பி ராமையா ஆகியோர் நடிக்க, வின்சென்ட் செல்வா கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம் விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்.
சரி.. இவர்களால் ரசிகர்களுக்கு என்ன ? பார்க்கலாம்
இரண்டு ஊர்களுக்கு இடையே தண்ணீர் பிரச்னை . தண்ணீர் விட வேண்டிய ஊரின் தலைவர் (பாலா சிங்) , தண்ணீர் கேட்கும் ஊரின் தலைவரிடம் (ஜோ மல்லூரி ),
”உங்கள் மகள் நந்தினியை ( அருந்ததி நாயர் ) என் மகனுக்கு பெண் கொடுத்தால் தண்ணீர் தருகிறேன்” என்கிறார் . மகளின் விருப்பத்தைக் கேளாமல் , அப்பாவும் சம்மதிக்கிறார் .
இந்த நிலையில் , சினிமாவில் ரொம்ப நாள் இருந்தும் சாதிக்க முடியாத ஓர் இயக்குனர் (தம்பி ராமையா ) அந்த ஊருக்கு வருகிறார் . உடன் கேமரா மேன் ஒருவனும் ( கும்கி அஷ்வின்)
கிராமத்துப் பெண் ஒருத்தியின் நடை உடை பாவனைகள், போக்கு வரத்து , பழக்க வழக்கம் ஆகியவற்றை அவளுக்கே தெரியாமல் படம் எடுத்து,
அதற்கு ஏற்ப மற்ற காட்சிகளை அமைத்து , மற்ற கதாபாத்திரங்களை நடிக்க வைத்து , படம் எடுப்பது அவரது ஐடியா .
அதே ஊரில் படித்து வேலை இல்லாமல் இருக்கும் இளைஞன் சிவாவும் (சஞ்சய்), அவனது நண்பன் தாசும் (முருக தாஸ் ) , தொழில் துவங்குவதற்காக கொடூர கந்து வட்டிக்காரன் ஒருவனிடம் ,
ஆறு லட்சம் பணம் வாங்குகின்றனர் . பணத்தை ஒருவன் திருடி விட்ட நிலையில் கந்து வட்டிக்கார தாதா பணத்தைக் கேட்டு மிரட்டுகிறான்.
அந்த இளைஞர்களை பார்க்கும் இயக்குனர் , ”தன் படத்தில் ஆறு நாள் நடித்தால் ஆறு லட்சம் தருகிறேன்” என்கிறார் .
இருவரும் சம்மதிக்க, அவர் ரகசிய கதாநாயகியாக இயக்குனர் முடிவு செய்வது , தண்ணீருக்கு பணயம் வைக்கப்பட்ட கதாநாயகியை !
அவளுக்கு தெரியாமலேயே அவளது நடை உடை பாவனைகளை மற்றும் செயல்பாடுகளைப் படம் பிடித்து அதற்கு ஏற்ப ஹீரோவுக்கு காட்சி அமைத்து நடிக்க வைத்து படம் எடுக்கிறார் .
படம் முடிந்து ஆறு லட்ச ரூபாய்க்கு செக்கும் கொடுக்கிறார் .
அவர் போன அடுத்த நாள் , இரண்டு ஊர்களின் ஊர்த்தலைவர்கள் மற்றும்ம் அவர்களது ஆட்கள் சிவா வீட்டுக்கு வந்து அவனை அடித்துத் துவைக்கின்றனர் .
காரணம் நந்தினி ஓடிப் போய் விட்டதுதான் . யூ டியூப்பில் சஞ்சயும் நந்தினியும் நடித்த படம் வெளியாகி இருக்க, சஞ்சய்தான் நந்தினியை கடத்தி விட்டன என்பது அவார்களது முடிவு .
இரண்டு நாட்களுக்குள் நந்தினியை கொண்டு வராவிட்டால் , சிவாவின் அம்மா , அப்பா , தங்கை மூவரையும் உயிரோடு கொளுத்தி விடுவோம் என்று அனைவரும் சொல்ல, நந்தினியை தேடி நண்பர்கள் கிளம்புகின்றனர் .
இதற்கிடையே கந்து வட்டி தாதாவுக்கு தரப்பட்ட ஆறு லட்ச ரூபாய் செக் , போலி செக் என்பதை அறியும் தாதா , பார்த்த இடத்தில் நண்பர்கள் இருவரையும் வெட்டிக் கொல்ல ,
தனது வலதுகரமான சங்கிலியுடன் (யோகி பாபு ) கிளம்புகிறான்.
ஒரு வார்த்தை கூட இதுவரை தங்களிடம் பேசாத- எங்கே போனாள் என்று தெரியாத– நந்தினியை சிவாவால் கண்டு பிடிக்க முடிந்ததா ? அவன் குடும்பத்தின் கதி என்ன?
நந்தினி எங்கே போனாள் ? என்ன ஆனாள்? என்பதே இந்த விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் படம் .
இயல்பாக ஆரம்பிக்கிற ஒரு கிராமத்துக் கதை . ஊருக்குள் டைரக்டர் வந்த உடன் வித்தியாசமான எல்லைக்குள் நுழைகிறது திரைக்கதை .
கதாநாயகி வழக்கமாக செய்யும் செயல்பாடுகளை வைத்தே அதற்கு தோதான காட்சிகளை அமைத்து, அவளுக்கு சுத்தமாக தெரியாமல்
நடிகர்களை நடிக்க வைத்து அவள் நடிப்பது போல காட்சிகளை அமைத்து படமாக எடுக்கும் அந்த உத்திகள் அபாரம் .
டிக்கட்டில் லவ் லெட்டர் அமைக்கும் காட்சியும் மறுநாள் கோலம் போடும் காட்சியும் அந்த உத்திகளின் உச்சம் .
அதுவும் பச்சை சேலையை கிரீன் மேட் ஆகப் பயன்படுத்தி நந்தினிக்கே தெரியாமல் அவளும் சிவாவும் பேசுவது போல காம்பினேஷன் ஷாட்கள் எடுப்பது அட்டகாசம்
சாத்தியத்துக்கான லாஜிக் பற்றி சில கேள்விகள் எழுந்தாலும் , இந்த ஏரியாவில் சும்மா பின்னிப் பெடல் எடுத்து இருக்கிறார், திரைக்கதையாளர் – இயக்குனர் வின்சென்ட் செல்வா .
ஆசம்! ஆசம்!! அழுத்தமான கை குலுக்கல்கள், சபாஷ் சார் .
இளையராஜா மற்றும் ஏ ஆர் ரகுமானின் பாடல்களைப் பயன்படுத்தி காதுக்குள் தேன் ஊற்றுகிறார்கள்
இரண்டாம் பகுதியில் படம் பாதுகாப்பான காமெடி என்ற ஏரியாவில் நுழைகிறது .
நிறைய நட்சத்திரங்கள் மிதமான காமெடி என்று படம் நகர்கிறது .
மனோபாலா தம்பதியின் பீரோவுக்குள் முருகதாஸ் சிக்கிக் கொள்வது லக லகக் கலகல !
நியாயமான கந்து வட்டி தாதா குணாதிசயம் கவனிக்க வைக்கிறது .
முக நூலில் காதல் என்று சொல்லும் இளைஞர்களை நம்பி ஓடி வந்து ஏமாறும் பெண்களுக்கு நல்ல பாடமும் சொல்லும் வகையில் மரியாதையை பெறுகிறது படம்.
காதலின் தகுதி சொல்லும் கிளைமாக்ஸ் நெகிழ்ச்சி .
சஞ்சய் இயல்பாக நடிக்கிறார் . அருந்ததி நாயர் முதிர் அழகியாக தெரிகிறார் . தம்பி ராமையா நடிப்பில் அசத்துகிறார் .முருகதாஸ் சிரிக்க வைக்கிறார் .
மயில்சாமி, மனோ பாலா, ரோபோ ஷங்கர் , டி பி கஜேந்திரன் ஆகியோர் ஆங்காங்கே லேசாக புன்னகைக்க வைக்கிறார்கள்
ரஜின் மகதேவின் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது .
இரண்டாம் பகுதியில் நிறைய கேரக்டர்கள் இருந்தும் பல கேரக்டர்கள் வீணே திரிவதை தவிர்த்து இருக்கலாம் .
1980 களில் வரும் படங்களை நினைவூட்டும் படமாக்கல் அழகு என்றாலும் இன்றைய வெகுஜன ரசனைப் பாணியில் ஒரு பின்னடைவே .
மேக்கிங்கில் சமகால பாணியை பின்பற்றி , நந்தினியை அவ்வளவு சீக்கிரம் கண்டு பிடிக்கவில்லை என்பது போல கதை அமைத்து அதை சீரியஸ் ஆக்கி ,
அதில் பேஸ்புக் காதலனை நம்பி இளம்பெண்கள் ஓடுவதன் விபரீதம் சொல்லி,
இரண்டாம் பகுதியில் இன்னும் வித்தியாசமான ஃபிரெஷ்ஷான காமெடி காட்சிகளை அமைத்து இருந்தால் இந்தப் படம் பட்டையைக் கிளப்பி இருக்கும்
ஆனாலும் என்ன …
இந்த வாரம் வெளியான ஐந்து படங்களிலும் கொஞ்சமாவது சுவாரஸ்யமான படம் என்றால் அது இந்தப் படம்தான் .
மொத்தத்தில் விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் …. விஷயம் இருக்கு; இன்னும் விசேஷமாக இருந்திருக்கலாம்