ஹோம்பேல் பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகன்டூர் தயாரிப்பில் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் விஷால் வெளியிட,
யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, அனந்தநாக் , மாளவிகா நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கன்னடத்தில் உருவாகி
, தமிழ் , தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் படம் கே ஜி எஃப் (KGF) 1 .
கோலார் தங்க வயல் என்பதன் சுருக்கம் . படம் தங்கமா ? தகரமா ? பேசலாம் .
1978-ல் ஈரானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நடந்த பனிப் போரால் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்குமான பகை அதிகமாகியது.
அதன் பாதிப்பு மொத்த உலகத்தையும் ஆட்டிப் படைத்தது. எண்ணெய், காபி, இரும்பு , இவற்றோடு சேர்ந்து தங்கத்தின் விலையும் விண்ணைத் தொட்டது

எனவே தங்கத்தின் தேவை அதிகரித்தது . புது தங்க சுரங்கங்களுக்கான தேடல் பெருகியது .
அன்றைய சென்னை மாகாணம் இன்றைய கர்நாடகாவில் உள்ள கோலாரில் தங்கம் எடுக்கப்பட்டது .
மொழிவாரி மாநிலப் பிரிவினையின் போது நியாயமாக தமிழ் நாட்டுக்கு வரவேண்டிய இந்த பகுதி ,
நமது தேசிய திராவிட அரசியல் வாதிகளின் அலட்சியம் மற்றும் பதவி சுயநலத்தால் அநியாயமாக கர்நாடகாவுக்குப் போனது .
70 இறுதி மற்றும் 80 தொடக்கங்களில் K.G.F-ல் கிடைக்கும் தங்கத்தால் அந்த இடத்தை கைப்பற்ற
மாஃபியாக்கள் இடையே பெரிய போட்டி நடந்தது . (பின்னரே அரசு வசம் போனது )
அந்த பின்னணியில் உருவாக்கப்பட்ட கதை .
அங்கே வேலை செய்யும் கூலித் தொழிலாளிகளை கொத்தடிமைகளாக வைத்து கொடுமை செய்து,

ஆரோக்கியம் இழந்தவர்களை கொன்று குவித்து அநியாயம் செய்கிறது முதலாளி வர்க்கம்
அங்கே பிறந்து சிறுவனாக தப்பித்த ஒருவன் ( யஷ் ) மும்பை வந்து பெரிய தாதாவாகிறான் .
ஒரு நிலையில் தங்க வயலில் அடுத்த முதலாளி யார் என்பதில் சண்டை வர, முதலாளிகளில்,
ஒருவன் கொடுக்கும் வேலைப் படி இன்னொருவனை கொல்ல அங்கே போகிறான் நாயகன் .
ஈயெறும்பு கூட நுழைய முடியாத கட்டுப்பாடுகள் நிறைந்த ரத்த வெறி பிடித்த மிருகத்தனமான காவலர்கள் அடங்கிய அந்த இடத்துக்குப் போகும் நாயகன்,
தன் வேலையை செய்வதோடு எப்படி கொத்தடிமை மக்களையும் மீட்கிறான் என்பதே இந்த கே ஜி எஃப் (KGF) 1.

கன்னடத் திரையுலகம் இதுவரை கண்டிராத பிரம்மாண்டமான படமாக்கல் !
தங்க சுரங்கம் சம்மந்தப்பட்ட காட்சிகளை உண்மைக்கு மிக நெருக்கமான எடுத்து இருக்கிறார்கள் .
சபாஷ் இயக்குனர் பிரஷாந்த் நீல் . சுரங்கம் சம்மந்தப்பட்ட காட்சிகளில் மிக மிக மனம் கவர்கிறார் .
படத்தில் பத்து அடி உயர கரும் புழுதிப் புயலை உருவாக கம்ப்ரெஸ்ர்கள் மட்டும் போதாத நிலையில்
கரும்புகையை உருவாக்க பழைய மண்ணெண்ணெய் மெஷின்களை வாங்கி அதன் மூலம் புழுதி புயலை உருவாக்கி இருக்கிறார்கள்.
எழுபதுகளின் இறுதி என்பதுகளின் தொடக்கத்தில் கதை நடப்பதால் பிளாக் மற்றும் பிரௌன் கலர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
தங்கச் சுரங்கத்துக்கான அரங்குகளை கோலார் தங்க வயலிலேயே அமைத்து படமாக்கி இருக்கிறார்கள் .
யஷ் தெறிப்பாக இருக்கிறார் . நடிக்கிறார்

சுரங்கக் காட்சிகளில் நடித்துள்ள துணை நடிகர்கள் அனைவரும் மிக சிறப்பாக நடித்துள்ளார்கள் . நல்ல வேலைவாங்கல்!
ஒரு பாட்டுக்கு வந்து நடனம் ஆடி விட்டுப் போகிறார் தமன்னா .
புவன் கவுடாவின் ஒளிப்பதிவு இந்தப் படத்துக்கு பலம் . அட்டகாசமான லைட்டிங் மற்றும் வண்ணப் பயன்பாடு . சிறப்பு
நம்ம ஊரு அன்பறிவின் சண்டைக் காட்சிகள்தான் இந்தப் படத்துக்கு உயிர் கொடுக்கிறது . சபாஷ்
ரவி பர்சூரின் இசையும் ஒகே
மற்றபடி லாஜிக் எல்லாம் பார்த்தால் நடக்கறதே வேற . ஆமாம் !
இந்த கற்பனைக் கதைக்கு பின்னால் ஒரு நிஜமான சோக வரலாறு உண்டு.
ஆரம்பம் முதலே கோலார் தங்க வயலில் உழைக்கும் தொழிலாளர்கள் தமிழர்களே .

ஆனால் முதலாளிகள் மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்கள் கன்னடர்களே.
அந்த தமிழர்களை கன்னடர்கள் காலம் காலமாக கொடுமைப் படுத்தியே வந்துள்ளனர் . வருகின்றனர் .
இன்றும் கோலார் தங்க வயல் பகுதியில் வாழும் மக்கள் தமிழர்களே .
அந்த சட்டமன்றத் தொகுதியில் தமிழர்கள் ஓட்டை வாங்காமல் யாரும் ஜெயிக்க முடியாது என்பதால் ஒவ்வொரு முறையும்
கன்னட அரசியல்வாதிகள் அவர்களுக்கு நல்லது செய்வதாக வாக்குக் கொடுப்பதும் ஆனால் செய்யாமல் ஏய்ப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது .

(எல்லா வேட்பாளருமே தமிழின விரோத கன்னட வெறி வேட்பாளர்கள்தான் . அப்புறம் யாருக்கு போட்டால் நல்லது நடக்கும் ?)
இதுதான் அங்கே இன்றும் அநியாயமான உண்மை .
ஆக, நிஜத்தில் அந்த தமிழர்களின் கண்ணீர் / ரத்த வரலாற்றைதான் கொத்தடிமைகளின் சோகமாக காட்டி இந்தப் படத்தை எடுத்துள்ளனர்
படத்தில் வரும் கொத்தடிமைகளுக்கு சுதந்திரம் தருகிறார் யஷ் .
ஆனால் நிஜத்தில் அந்த தமிழர்கள் இன்னும் அடிமைகளாகவே ! பலர் இன்னும் கொத்தடிமைகளாகவே !