பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ் ஆர் பிரபு தயாரிக்க,
சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா , சார்லி, முனீஸ்காந்த், மதுசூதனன் ஆகியோர் நடிக்க,
அறிமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் மாநகரம் . நம்பி கால் வைக்கலாமா? பார்க்கலாம் .
சென்னையில் பிரபல நிறுவனம் ஒன்றில் மனிதவள அதிகாரியாக பணியாற்றும் ஒரு பொறுப்பான இளம்பெண்ணை (ரெஜினா) ,
அவளது பள்ளிக் கால மாணவனும் வேலை வெட்டி இல்லாதவனும் , அடிதடிக்கு அஞ்சாத நபருமான ஓர் இளைஞன் (சந்தீப் ) காதலிக்கிறான் .
காதலனின் நடவடிக்கைகள் காரணமாக, அவளிடம் பச்சை விளக்கு எரியவில்லை.
திருச்சியில் இருந்து சென்னைக்கு மேற்படி பிரபல நிறுவனத்திற்கு வேலைக்கு வரும் ஒரு இளைஞனுக்கு (ஸ்ரீ) சென்னையே பிடிக்கவில்லை.
உடம்பு சரி இல்லாத மகனின் சிகிச்சை மற்றும் செலவுக்காக சென்னைக்கு வந்து ஒரு மோசமான தாதாவுக்கு ( மது சூதனன் ) சொந்தமான டிராவல்ஸில்,
கார் டிரைவராக சேரும் ஒரு நடுத்தர வயது அப்பாவி மனிதருக்கு (சார்லி) சூழலே பயமுறுத்துவதாக உள்ளது .
இந்த நிலையில் அடாவடி இளைஞனை அடிக்கக் குறி வைத்த கும்பல் ஒன்று அடையாளக் குழப்பம் காரணமாக சென்னையை வெறுக்கும் இளைஞனை அடிப் பின்னி எடுக்கிறது .
குழந்தை கடத்தும் கும்பல் ஒன்றுஆள் மாறாட்டமாக தாதாவின் மகனைக் கடத்தி விடுகிறது . விசயம் தெரிந்த பின்னரும் பயம் இல்லாமல் பணத்துக்குப் பேரம் பேசுகிறது .
இந்த களேபரத்தில் விஷயம் தெரியாமல், கடத்தல் கும்பலுக்கு உதவிய ஓர் அப்பாவி நபரும் (முனீஸ்காந்த்) சிக்குகிறார்.
நிலமை தீவிரம் அடையும்போது , மேற்சொன்ன எல்லா கதாபாத்திரங்களுக்குள்ளும் நட்போ அல்லது பகையோ சில சூழல்களில் இரண்டுமோ கொண்ட தொடர்புச் சிக்கல்களும் வில்லங்கங்களும் விளைகின்றன .
அடாவடி இளைஞனின் சித்தபாவான ஒரு சப் இன்ஸ்பெக்டரும் இந்த சுழலுக்குள் இறங்கி தன் பங்குக்கு சுழற்றுகிறார் .
அப்புறம் நடந்தது என்ன ? சென்னையைப் பற்றிய பல்வேறு கதாபாத்திரங்களின் மதிப்பீடுகள் என்ன ஆனது என்பதே இந்த மாநகரம் .
மேற்சொன்ன பல்வேறு கதா பாத்திரங்களும் ஒரு டாஸ்மாக்கில் நள்ளிரவில் சந்திக்க, கேஷுவலாகத் துவங்கும் படம் மெல்ல மெல்ல தனது பரிமாணங்களைக் காட்டுகிறது .
பல்வேறு கதாபாத்திரங்கள், நான்கு கதைப் போக்குகள் கொண்ட திரைக்கதையை அழகாகப் பின்னிய வகையில் திரைக்கதையிலும் ,
அதை மிக நிதானமான அழுத்தமான படமாக்கலில் ஈர்க்கும்படி சொன்ன வகையில் இயக்கத்திலும் கவர்கிறார் அறிமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் .
பாத்திரங்களுக்கான நடிகர் தேர்வுகள் அருமை .
வசனம் மிக இயல்பாக இருக்கிறது . சபாஷ்
அறிமுக ஒளிப்பதிவாளர் செல்வகுமார் மிக அட்டகாசமான ஒளிப்பதிவின் மூலம் படத்துக்கு பக்கா பலம் சேர்த்து இருக்கிறார் .
அறிமுக இசை அமைப்பாளர் ஜாவீத் ரியாசின் இசையும் குறிப்பாக பின்னணி இசையும் அருமை .
பல கதாபாத்திரங்கள், பல்வேறு கதைப் போக்குப் பின்னல்கள் கொண்ட திரைக்கதை குழப்பமில்லாமல் வெளிப்படுவதில் அறிமுக படத் தொகுப்பாளர் பிலோமின் ராஜ் பாராட்டும்படி பணியாற்றி இருக்கிறார் .
குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதியின் இரண்டாம் பாதியில் இருந்து கிளைமாக்ஸ் வரை மேலே நான்கு பேருமே அசத்தி இருக்கிறார்கள் . சபாஷ் .
அடாவடி இளைஞன் கேரக்டரை அசத்தலாக நடித்து உள்ளார் சந்தீப் . சீரியசான நல்ல இளைஞன் கேரக்டரில் ஸ்ரீ பொருத்தம் பெண் அதிகாரி கேரக்டரில் ரெஜினா நைஸ்.
எப்போதும் பரிதவிப்பில் இருக்கிற ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாத பக்குவமான கேரக்டரில் பிரம்ம்மாதப்படுத்தி இருக்கிறார் சார்லி .
சீரியசும் திகிலுமாக போகும் கதையில் அவ்வப்போது சிரிப்பு வெடிகளை வெடித்துக் கலகலக்க வைக்கிறார் முனீஸ் காந்த் . கல கல லக லக கலாட்டா !
அட்டகாசமான ஹைக்கூ கவிதைகளை அடுத்ததடுத்து படிக்கிற உணர்வைத் தருகின்றன கிளைமாக்சில் சின்னச் சின்னதாக வரும் சம்பவங்கள் .கிளாஸ் !
நம்ம சென்னை ஒன்னும் இப்போது அவ்வளவு மோசமாக இல்லையே என்ற கேள்வி வெகுஜன ரசிகனுக்கு வருவதை மட்டும் தவிர்க்க முடியாது .
கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளுக்குக் காரணமான சம்பவங்களில் இன்னும் கொஞ்சம் சிந்தித்து வித்தியாசமான விசயங்களைச் சொல்லி இருந்தால் படம் இன்னும் கூட நன்றாக இருந்திருக்கும் .
ஆனாலும் என்ன…. ஓர் அழுத்தமான சினிமா பார்க்கும் திருப்தியான உணர்வை தருகிறது படம் .