நோட்டா (NOTA) @ விமர்சனம்

ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க, தெலுங்கில் வெற்றிகரமாக வளர்ந்து வரும்  விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்க,

உடன் சத்யா ராஜ், நாசர், எம் எஸ் பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், மெஹ்ரீன் பிர்சாடா, சஞ்சனா நடராஜன், யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடிக்க, 

அரிமா நம்பி படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கி தமிழ் தெலுங்கு இருமொழிகளில் ஒரே பெயரில் வந்திருக்கும் படம் நோட்டா (NOTA). 
 
 மேலே இருப்பதில் எதுவும் இல்லை ( None Of The Above ) என்ற விரிவாக்கம் கொண்ட இந்த வார்த்தை ,
 
தேர்தலில் , எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை என்று சொல்லக் கிடைக்கும் வாய்ப்பு . 
 
சரி , இந்த படமான நோட்டா (NOTA) ரசிக்க கிடைக்கும் லட்டா ? இல்லை டிக்கெட் நோட்டுக்கு வேட்டா? பேசலாம் . 
 
ஊழல் குற்றச் சாட்டில் சிக்கிய முதல்வர் வினோதன் ( நாசர்)  நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்படலாம் என்ற சூழ்நிலையில் ,
ஆட்சியை தன்கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடிவு செய்து, 
 
அயல்நாட்டில் வீடியோ கேம்ஸ் தயாரிக்கும் வேலை, மது , மாது , நட்பு என்று ஜாலியாக  சுற்றிக் கொண்டு இருக்கும், 
 
தன் மகன் வருணை ( விஜய் தேவரகொண்டா) வரவழைத்து முதல்வர் ஆக்குகிறார் 
 
விநோதனின் ஊழல் அரசியலை கிழிக்கும் பத்திரிகையாளர் மகேந்திரன் ( சத்யராஜ்) வருணை அறிந்தவர் . அவரது மகள் சுவாதி ( மெஹ்ரீன் பிர்சாடா) 
 
எதிர்க்கட்சித் தலைவர் வரதராஜனின் (கே எஸ் ஜி வெங்கடேஷ்) மகளும் ,வருணோடு கல்லூரியில் படித்தவளும் , 
 
அரசியலில் வளர ஆசைப்படுபவளுமான கயல் வரதராஜன் (சஞ்சனா நடராஜன்),  எப்படியாவது, 
 
வினோதன் மற்றும் வருணை தோற்கடித்து ஆட்சியைப் பிடித்து அப்பாவை முதல்வர் ஆக்க துடிக்கிறாள் . 
வினோதனின் நமபிகைக்குரிய அடுத்த கட்ட தலைவர் பாய் ( எம் எஸ் பாஸ்கர்) . விநோதனின் மைத்துனன் ராம சாமி ( மொட்டை ராஜேந்திரன்)
 
வருணின் தோழர்கள் ரேக்ஸ் (கருணாகரன்) மற்றும் ஷில்பா (யாஷிகா ஆனந்த்)
 
வினோதன் ஊகித்தபடியே அவருக்கு ஜெயில் தண்டனை கிடைக்கிறது . 
 
அந்த நிலையில் கட்சியின் பவரைக் காட்ட,  பாய் மூலம் அவர் கலவரத்தை தூண்டி விட , வெடித்த கலவரத்தில் எரிக்கப்பட்ட பஸ் ஒன்றில் ஒரு பள்ளிச் சிறுமி கருகிப்  போகிறாள் . 
 
அதைப் பார்த்து பதறும் வருண் அப்பாவின் பாதையில் இருந்து விலகி நல்லாட்சி தர முடிவு செய்கிறான் . அதற்கு மகேந்திரன் உதவுகிறார். 
 
அதே நேரம் வருணின் பழைய தவறுகளை மக்களிடம் கொண்டு போய் அவனை அசிங்கப்படுத்தி, 
 
தங்கள் கட்சியை ஜெயிக்க வைத்து ஆட்சி பிடிக்க நினைக்கிறார்கள் வரதராஜனும் கயலும். 
மகன் தன் இஷ்டத்துக்கு ஆட்சி செய்வதை அறிந்து கொந்தளிக்கும் வினோதன் ஜெயிலில் இருந்து விடுதலை ஆகிறார் . 
அப்பா வந்தால் என்ன செய்வது என்று வருண் பதறும் வேளையில் ஒரு கொலை முயற்சியில் சிக்கும் வினோதன் கோமா நிலைக்குப் போகிறார் . 
 
வருணின் நல்லாட்சி தொடர்கிறது . 
 
அதிக மழை மற்றும் அதுவரை செய்யப்பட தவறான நீர் மேலாண்மை காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து சென்னையே மூழ்கும் நிலை வர, 
 
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மக்களைக் காக்கிறான் வருண் . 
 
இந்த நிலையில் கோமா நிலையில் உள்ள வினோதனுக்கு நினைவு வந்து, தனது  மகனை வீழ்த்த பாய் மூலம் அவர்  திட்டமிட,
 
நடந்தது என்ன ? அதில் எதிர்க்கட்சியின் பங்கு என்ன? வினோதனை கொல்ல முயன்றது யார்? ஏன் ? என்பதே இந்த நோட்டா (NOTA).
ஷன் கருப்பசாமி என்பவர் எழுதிய வெட்டாட்டம் என்ற நாவலின் திரை வடிவமே இந்தப் படம் என்கிறார்கள் .
 
அதற்கேற்ப படத்தின் கதை என்று அவரது பெயர் வருகிறது . திரைக்கதையாளர்களிலும்  அவர் பெயர் வருகிறது . 
 
ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு செம்பரப்பாக்கம் ஏறி திறக்கப்பட்டு,  சென்னை நீரில் மூழ்கிய விஷயத்தை எப்படி தடுத்திருக்கலாம் என்ற,  அந்த ஏரியா பிரமாதம் . 
 
” யோவ் என் காலைப் பார்த்தே கும்பிடாதீங்கய்யா . முகத்தையும் பாருங்க . இல்லன்னா எனக்கு நீங்க வைக்கிற சிலையின், 
 
முகத்த  வேற மாதிரி வச்சிடுவீங்க” என்ற ரீதியில் நாசர் பேசும் வசனம் கரண்ட் அரசியல் கரண்ட் . செம செம . 
 
பிலிம் மேக்கிங்கில் ரசித்து செய்திருக்கிறார் இயக்குனர் ஆனந்த் ஷங்கர்  
 
சந்தான கிருஷ்ணன் ரவிச்ச்சந்திரனின் ஒளிப்பதிவு மிக சிறப்பு . படத்துக்கு பெரும் பலம் சேர்க்கிறது சாம் சி எஸ் சின் பின்னணி இசை.
ரேமன்ட் டெரிக் கிறிஸ்டாவின் படத் தொகுப்பும் நேர்த்தி .
 
மிகுந்த பில்டப்புடன் தமிழில் அறிமுகம் ஆகி இருக்கும் விஜய் தேவரகொண்டா உற்சாகமாக சிறப்பாக நடிக்கிறார் . 
 
சத்யராஜ். நாசர், எம் எஸ் பாஸ்கர் சிறப்பாக செய்துள்ளனர் . 
 
மற்றவர்கள் ஜஸ்ட் ஒகே .
 
ஓர் அரசியல் படத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இன்னும் நிறைய விசயங்களை எடுத்துக் கொண்டு காட்சி அமைத்து பரபரப்பாக படத்தை கொண்டு போயிருக்கலாம் . 
 
எனினும் அரசியலின் உள் உலகம் பற்றி அதிகம் பேசி இருக்கிறது இந்தப் படம்  
 
சத்யராஜ் நாசர் இருவருக்குமான உறவை இன்னும் அழுத்தாமாக சொல்லி இருக்கலாம் .
 
மொத்தத்தில் நோட்டா (NOTA-None Of The Above)… ஊட்டா ((OOTA-One Of The Above)

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *