
பல வியாபார நிறுவனங்களின் உரிமையாளரும் பெரும் பணக்கரியுமான பேரிளம் பெண் மாயா (மனிஷா கொய்ராலா),
தன்னை விட வயது குறைந்த அக்ஷய் என்ற மருந்து ஆராய்ச்சியாளன் (ஷாம்) மீது ஆசைப்பட்டு காதலித்து மணந்து கொள்கிறாள் .
அதீதமான அவளது ஆளுமை குணமும் பணிகளுக்கும் அப்பாற்பட்டும் பொழுது போக்குகளில் அவள் காட்டும் ஆர்வமும்,
அவனுக்கு அவள் மீது எரிச்சலை அதிகப்படுத்துகிறது . குடி கும்மாளம் என்று எல்லாம் கிடைத்தும் ஒரு நிலையில் மாயா மீது அக்ஷய்க்கு வெறுப்பு மண்டுகிறது.
இந்த நிலையில் பூமிகா என்ற இளம்பெண்ணை (அக்ஷா பட்) சந்திக்கிறான் அக்ஷய் . அவளை காதலிக்கிறான் .அவளும் சம்மதிக்கிறாள் .
ஆனால் தான் திருமணம் ஆனவன் என்று சொல்லும்போது, அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறாள். அவனைப் பிரிகிறாள் .
அவளைத் தேடித் போகும்போது ”உனக்கு அவள் வேண்டுமா? நான் உனக்கு வேண்டுமா?” என்கிறாள் .
அதி புத்திசாலியான மாயாவுக்கு அக்ஷயின் வெறுப்பு புரிகிறது . தன் தரப்புக்கென சில வேலைகளை செய்கிறாள்
இது அக்ஷய்க்கும் புரிய வர , அக்ஷய் , பூமிகா இருவரும் திட்டமிட்டு மாயாவை மருத்துவ விஞ்ஞான முறைப்படி கொலை செய்கிறார்கள் .
பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனை வந்த மாயாவின் உடல், மார்ச்சுவரியில் இருந்து காணமல் போகிறது
மாயாவின் மரணத்துக்கான விசாரணை அதிகாரியாக வருகிறார் ஷக்தி வேல் (அர்ஜுன்). கால்கள் பாதிக்கப்பட்ட தன் காதல் மனைவி சந்தியாவை (நேஹா சக்சேனா ) ஒரு விபத்தில் இழந்தவர் அவர் .
சக்தி வேலின் விசாரணையோடு படம் வளர்கையில் இறுதியில் முற்றிலும் வேறு மாதிரியான முடிவுக்குள் படம் போகிறது .
இயக்குனர் ரா. பார்த்திபனின் குரலில் சமூக அக்கறையோடு கூடிய ஒரு நல்ல எச்சரிக்கை படத்தில் விடப்படுகிறது .
இதுதான் ஒரு மெல்லிய கோடு.
AMR’s Game என்ற பெயரில் பிப்ரவரி 26 ஆம் தேதி கன்னடத்தில் வெளியான படத்தின் மொழி மாற்று வடிவமே இந்தப் படம் .
(ஆனால் மிக சிறப்பாக உதட்டசவை ஒத்திசைவு செய்து மொழி மாற்றுப் பின்னணி வசனங்களை பேசி இருக்கிறார்கள் . படத்தில் விரவிக் கிடக்கும் ஆங்கிலமும் அதற்கு வசதியாக இருக்கிறது )
2012 ஆம் ஆண்டு வெளிவந்த El Cuerpo ( THE BODY என்று பொருள்) என்கிற ஸ்பானிஷ் படமே இந்தப் படத்துக்கு மூலம் .
அதே தினத்தில் மலையாளத்தில் வெளிவந்த வேட்டா என்ற படமும் மேற்படி El Cuerpo படத்தின் லவட்டலே .
படத்தில் சற்று முதிர்ந்த போலீஸ் அதிகாரியாக தனக்கே உரிய பாணியில் அர்ஜுன் மஸ்து காட்டுகிறார் .
(எத்தனையோ படங்களில் எத்தனையோ முறை அம்மா, அப்பா , அண்ணன் , தம்பி, மனைவி , குழந்தை , நண்பன் ஆகியோர் பிணமாகக் கிடக்கும் காட்சியில் நின்றும்…..
இன்னும் கூட அர்ஜுனுக்கு அழுகைக் காட்சியில் நடிக்க வரலியே .. இறைவா !)
அர்ஜுனையும் தாண்டி படம் முழுக்க ஆக்கிரமித்து இருப்பவர் ஷாம்தான் .
இளம் ஆராய்ச்சியாளனாக , வயதில் பெரிய பெண்ணின் முரட்டுக் காதலுக்கு ஆட்படுபவராக , அவர் செய்யும் அடாவடிகளை ரசிக்க முடியாமல் தவிப்பவராக, கல்லூரிப் பெண்ணைப் பார்த்து காதல் வயப்படுபவராக ,
காதலியுடன் வாழ்வதற்காக மனைவிக்கு விஷம் கலந்து கொடுத்து விட்டு ஒரு துளி கண்ணீர் விடும் கொஞ்ச மனசாட்சிக் கணவனாக,
கடைசியில் செய்த தவறை விடவும் அதிக தண்டனைக்கு ஆளாகும் துரதிர்ஷ்டசாலியாக ….படம் முழுக்க ‘ஷாம்’ராஜ்யம்தான்.
என்ன … இவரும் இன்னும் கொஞ்சம் கேரக்டரை உணர்ந்து மேலும் சிறப்பாக நடித்து இருக்கலாம் .
வாவ் மனிஷா கொய்ராலா ….!
கொடிய கேன்சரில் இருந்து மீண்டு வந்த மனுஷியா இவர் ? வயதும் வந்து போன நோயும் முகத்திலும் உடலிலும் முதுமைக் கோடுகளை அதிகம் வரைந்து விட்டு இருந்தாலும்,
அந்த ஸ்டைல் என்ன? நடிப்பு என்ன ? அலட்டல் என்ன ? ஷார்ப்னஸ் என்ன ? மானசீகக் கைதட்டல்கள் மனிஷாவுக்கு .
HEARTY WELCOME FOR YOUR ROYAL COME BACK, DEAR MANISHA !
ஒரு பாடல் காட்சியில் சூடேற்றுகிறார் அக்ஷா பட்.
இளையராஜாவின் பின்னணி இசை படத்துக்கு பெரிய சத்து டானிக் . ஒரு பாடலுக்கு பா. விஜய் எழுதி இருக்கும் ”ஒரு மெல்லிய கோடு…” என்ற பல்லவி முதல் வரியே, படத்துக்குப் பெயராகவும் ஆகி இருக்கிறது
சேது ஸ்ரீராமின் ஒளிப்பதிவு படத்த்துக்கு பெரும் பலம் . குறிப்பாக ஒளிப் பயன்பாடு அட்டகாசம் ! ஆடை வடிவமைப்பும் நைஸ் நைஸ் .
ஆனால் ஸ்கிரிப்ட்தான் , சிக்கலில் விக்கிக் கொண்டு நிற்கிறது
என்னதான் ஆங்கிலப் படத்தின் உல்ட்டா என்றாலும் மனைவி மீது வெறுப்பு , இன்னொரு பெண் மீது காதல், மனைவியைக் கொலை செய்வது எல்லாம் நமக்கு அரதப் பழசான கதை .
கடைசியில் வரும் அந்த கிளைமாக்ஸ் டுவிஸ்ட் சமூக அவசியமான ஒன்று என்றாலும், அதை செய்யும நபர் யார் என்பதும அதற்கு அவர் சொல்லும் காரணமும் அவர் அளவில் நியாயமாக இருக்கலாம் .
ஆனால் பொதுவில் அதில் நியாயம் இல்லை . தவிர, மகள் மூலமே அதை அவர் செய்யும் முறையும் யதார்த்தத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருக்கிறது .
இவ்வளவு திட்டம போட்டு மனைவியைக் கொல்லும் கணவனுக்கு, போலீஸ் முன் சோகத்தில் இருப்பது போல நடிக்கக் கூடவா தெரியாது இயக்குனர் ரமேஷ்? .
அக்ஷய் அழகாக டிரெஸ் போட்டுக் கொண்டு ஸ்டைலாக தம்மடித்துக் கொண்டு போலீஸ் முன் நான் சீக்கிரம் வீட்டுக்கு போகணும் . உச்சா வருது என்ற ரீதியில் பேசிக் கொண்டு இருப்பாராம் .
அதை வைத்து அர்ஜுன் அவர் மீது சந்தேகப்படுவராம் .
அட, ஷெர்லக் ஹோம்சுக்கு சித்தப்புகளா ஆ ஆ ஆ … ! சித்தப்புகளா !!
டாய்லெட்டில் கிழித்துப் போட்ட பேப்பரின் அக்ஷய் எடுத்து திங்கும் காட்சி உவ்வே .உவ்வே ஏஏஏஏ…..!
கடைசியில் அக்ஷய்க்கும் மாயாவுக்கும் ஒரே தண்டனை என்பது நியாயம் இல்லை .
படத்தைப் பார்க்கும் ஒரு வெகு ஜன ரசிகனுக்கு ,
மாயா மார்ச்சுவரி வரும் முன்பே முழுக்க முழுக்க செத்து விட்டாளா? எனில் அவள் அக்ஷய் முன்னால் உருவமாக வந்து நிற்பது எப்படி ?
அவளை கிருஷ்ண பிரசாத் மார்ச்சுவரியில் காப்பாற்றுவது உண்மை என்றால் அப்புறம் அவளை கொன்றது யார்? எப்போது செத்தாள்?
என்று பல கேள்விகள் எழ வாய்ப்பு உள்ளது .
அவற்றை எல்லோருக்கும் புரியும் வகையில் இன்னும் விளக்கமாக சொல்லி இருக்கலாம் . அட வசனத்திலாவது சொல்லி இருக்கலாம் என்றால் சொல்ல முடியாமல் போனதற்கு காரணம் மாற்று மொழி உதட்டசைவு!
சலங்கை ஒலி , பிரதிகட்னா, மயூரி எல்லாம், இங்கே டப்பிங் படம் என்று தண்டோரா போட்டு சொல்லியும் பிச்சுகிட்டு ஒடுச்சே கண்ணுகளா !
தமிழ் ரசிகன் பொதுவில் செட்டியார் முறுக்கா என்று பார்ப்பது இல்லை . சரக்கு முறுக்கா என்றுதான் பார்ப்பான் .
சரக்கு முறுக்கா இருந்தா போதும் …
முறுக்கே சரக்கா இருந்தா கூட ,
சைட் டிஷ்ஷா மட்டும் இல்ல மெயின் டிஷ்ஷாவே மெயின்டைன் பண்ணிக்குவான் . விஷயம் அம்புட்டுதேங் !
ஆக,
ஒரு மெல்லிய கோடு… ரொம்ப ரொம்ப மெலிசு !