
தாதாக்களை தனது கண்ட்ரோலில் வைத்துக் கொண்டு பல கிரிமினல் செயல்களில் ஈடுபடும் தொழிலதிபர் ஒருவர் ,
அமெரிக்க டாலரும் இந்திய ரூபாயுமாய் நூறு கோடி ரூபாய் பணத்தை,
போலீஸ் ரெய்டுக்கு பயந்து ஒரு வாட்டர் புரூஃப் பண்டலாகக் கட்டி ,
சென்னை அசோக் நகர் பக்கம் காசி தியேட்டர் அருகில் உள்ள சாக்கடை ஓடும் அடையாறில் மூழ்கடித்துப் பதுக்கி வைக்கிறார்.
அந்தப் பகுதியில் குப்பை பொறுக்கி வாழும் சிறுவர்களில் ஒருவன் (பசங்க ஸ்ரீராம்) கையில் அந்த நூறு கோடி ரூபாய் பண பண்டல் கிடைக்கிறது .
டிபார்ட் மெண்டல் ஸ்டோரில் வேலை செய்யும் ஒரு சிறுமியுடனான ( ஆரா ) அவனது காதல் , நண்பர்களுடனான அவனது இயல்பான வாழ்க்கை…. இவை எல்லாம் அந்த பணம் வந்த பிறகு கெடுகிறது .
ஒரு நிலையில் தொழில் அதிபர் பணத்தை மேலே எடுக்கத் திட்டமிட, அப்போதுதான் பணம் காணமல் போனது தெரிகிறது .
தொழிலதிபரின் அடியாட்கள் கும்பல் ஒரு வழியாக போராடி , பணத்தை திருடிய அந்தப் பையனைக் கண்டு பிடிக்கிறார்கள் .
நண்பர்கள் , காதலி எல்லாம் பிரிந்த நிலையில் , அவனைக் கொன்று அந்தப் பணத்தை அபகரிக்க அடியாட்கள் முயல, அப்புறம் என்ன என்பதே இந்தப் படம் .
நாயகனாக நடித்து இருக்கும் ஸ்ரீராம் கஷ்டப்பட்டு நடிக்கிறார் .
நாயகியாக நடித்து இருக்கும் ஆரா நன்றாக நடித்து இருக்கிறார் . அழகாகவும் இருக்கிறார் .
முதல் பாடலில் குழு நடனப் பெண்களின் நடன அசைவுகள் சிறப்பாக இருக்கின்றன . டூயட் பாடலும் ஜஸ்ட் ஓகே .
இவற்றை தவிர படத்தில் குறிப்பிட்டுப் பாராட்டும்படி எதுவுமே இல்லை .
குப்பை பொறுக்கிப் பிழைப்பது என்பது ஒன்றும் தப்பான தொழில் இல்லைதான் . அதற்காக குப்பை பொறுக்கும் வேலையை ஐ டி வேலைக்கு இணையாக பேசுவதும் ,
சாகும்வரை குப்பை பொறுக்குபவனாகத் தான் வாழ்வேன் என்பது அரைவேக்காட்டுத்தனம் .
படம் முழுக்க இப்படி செயற்கையான நாடகத்தனமான ஆர்வக் கோளாறான முட்டாள்தனமான யதார்த்தம் இல்லாத எரிச்சலூட்டும் இட்டுக்கட்டிய காட்சிகள் மண்டிக் கிடக்கின்றன .
படத்தில் வரும் ரவுடி கேரக்டருடன் , எப்போதும் கஞ்சா அடித்த மாதிரி ஒரு டிக்கெட் திரியுதே … அந்த ஐட்டம் கேரக்டர் எல்லாம் (படத்துக்குள் ) என்னத்துக்கு என்றே தெரியவில்லை .
பைசா .. பைசா பெறாது .