
தேனாண்டாள் பிலிம்ஸ் லிமிடெட் சார்பில் என். ராமசாமி மற்றும் ஹேமா ருக்மணி இருவரும் தயாரிக்க, உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன், சூரி, மயில்சாமி, நிவேதா பெத்துர்தாஜ் நடிப்பில்,
தளபதி பிரபு இயக்கி இருக்கும் படம் பொதுவாக என் மனசு தங்கம். பத்தரை மாற்றா ? ரோல்டு கோல்டா ? பார்ப்போம் .
கிராமத்து அறிவாளி வாத்தியாருக்கு மக்குப் பிள்ளையாகப் பிறந்து படிப்பு வராத நிலையில் ஊரிலேயே கிடந்தாலும் ஊருக்கு நல்லது நினைக்கும் இளைஞன் கணேஷ் (உதயநிதி) அவனுக்கு ஒரு நண்பன் (சூரி )
பக்கத்து ஊரை பிறப்பிடமாகக் கொண்டு இந்த ஊரில் குடி கொண்டு இருக்கும் தெய்வமான திரவுபதி அம்மன், வருடம் ஒரு முறை திருவிழா சமயத்தில் சொந்த ஊருக்குப் போய் வரும் .
மற்ற நாட்களில் எல்லாம் சாமி இந்த ஊரில்தான் இருக்கும் . எனவே அம்மனை குல தெய்வமாகக் கொண்ட அந்த ஊர் ஆட்கள் இங்கே வந்துதான் சாமி கும்பிட வேண்டும் .
இந்த நிலையில் அப்படி ஒரு முறை தன் மகளுக்கு மொட்டை அடிக்க வந்த ஊத்துக்காட்டானை (பார்த்திபன்) , ஊரில் சாவு நடந்து இருப்பதால்,
ஊர்ப் பெரியவர்கள் அனுமதி மறுக்க, பாதி மொட்டை அடித்த நிலையில் அவமானத்தோடு வெளியேறுகிறார் .
அதனால் வஞ்சம் கொண்டு , காவிரி டெல்டாவையே காலி செய்யும் மோடி பாணியில், ஊரையே பாலைவனமாக்கி ,
காவிரி தண்ணீர் முழுக்க கர்நாடகாவுக்கே கொடுப்பது போல சாமியை எப்போதும் தன் ஊரில் வைத்துக் கொள்ள திட்டம் இடுகிறார் .
கணேஷின் ஊருக்கு வரும் குடிநீர் மருத்துவம் போன்ற வசதிகளை தன் செல்வாக்கால் தடுக்கிறார் . அந்த ஊர்க்காரர்களை வெளியூருக்கு வேலை வாங்கிக் கொடுத்து அனுப்புகிறார் .
ஆனால் கணேஷின் ஊர்ப்பாசம் இப்போது அவருக்கு தடையாகிறது .
ஊத்துக்காட்டானின் நோக்கம் கணேஷுக்கும் புரிய வருகிறது .
ஊத்துக்காட்டானின் தங்கையை ஒரு சாதாரண ஆள் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்ள , வாழும் இடத்தில் தங்கைக்கு எந்த கஷ்டமும் இருக்கக் கூடாது என்பதால் ,
அந்த ஊருக்கே எல்லா அடிப்படை வசதிகளையும் செய்து தருகிறார் ஊத்துக்காட்டான்
இதை அறியும் கணேஷ் , தனது ஊரை ஊத்துக்காட்டானிடம் இருந்து காப்பாற்ற ஒரே வழி அவரது மகளை (நிவேதா பெத்துராஜ்) காதலித்து மணப்பதே என்ற முடிவுக்கு வருகிறார் .
காதல் கை கூடுகிறது . அதே நேரம் கணேஷின் காதலும் நோக்கமும் ஊத்துக் காட்டானுக்கு புரிகிறது .
காதலைப் பிரிக்க அவர் முயல , காதலில் வென்று ஊரைக் காக்க கணேஷ் முயல , இடையில் சாமி , திருவிழா சமாச்சாரங்கள் சேர , அப்புறம் என்ன நடந்தது என்பதே படம் .
முதல் பாதி சாதுவாகக் கடக்கிறது .
இரண்டாம் பாதியில் சூரியின் காமெடி வெடிகள் படத்தைக் காப்பாற்றுகின்றன .
சூரி மட்டுமல்ல , போட்டோ எடுப்பவர்கள் பற்றி கமென்ட் அடிக்கும் பாட்டி, காது கேட்கும் திறன் குறைந்த மூத்த தம்பதி ஆகியோர் உட்பட பலரும் அவ்வப்போது நகைச்சுவைப் பட்டாசு கொளுத்தி கலகலக்க வைக்கிறார்கள்
இமான் இசையில் அம்மணி, சிங்கக் குட்டி பாடல்கள் இனிமை . வசனம் ஆக்கிரமிக்கும் படம் என்பதால் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கம்மி .
பாலசுப்ரமணியெமின் ஒளிப்பதிவு வழக்கம் போலவே வெகு சிறப்பு
உதயநிதி வழக்கம் போல வருகிறார் . நடிக்கிறார். முதன் முதலாக கிராமத்து நாயகனாக பொருந்தி இருக்கிறார் . பார்த்திபன் வழக்கம் போல லொள்ளு .
சில இடங்களில் சூரி பார்த்திபனையே டபாய்க்கிறார் . மயில்சாமியும் காமெடிக்கு உத்தரவாதம் தருகிறார்
“என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ‘ அப்படின்னு எங்க ‘பள்ளிக் கூட’ வாத்தியார் சொல்லிக் கொடுத்து இருக்காரு” என்று ஒரு வசனம் . ஹா ஹா ஹா . ஏன் சார், ஏன் ?
இந்தப் படத்தில் உதயநிதி நடித்து இருப்பது கூட படகோட்டி படத்தில் அந்த ‘பள்ளிக் கூட’ வாத்தியார் நடித்த அதே கேரக்டர்தானே ? அடையாளங்களை அழிக்கவே முடியாது சார் .
அடிப்படைக் கதையில் இருக்கும் அளவுக்கு திரைக்கதையையும் கவனமாக செலுத்தி இருக்கலாம் .
கிராமக் கதையை சொன்னவர்கள் கொஞ்சம் லாஜிக் பார்த்து இருக்கலாம் . (பாதி மொட்டை அடித்த நிலையிலா நிறுத்துவார்கள் ?)
கிளைமாக்ஸ் ஏரியா இன்னும் கிளியராக இருந்திருக்கலாம் .
சாமி மீது சத்தியம் செய்த பிறகு அதை மீறுவதை சும்மா பார்த்திபனின் வழ வழ கொழ கொழ சமாதானத்தில் நியாயப் படுத்தாமல் உணர்வுப் பூர்வமாக யோசித்து இருக்கலாம் .
எனினும் சொந்த ஊர் பற்றிய பாச உணர்வை இளைஞர்களுக்கு வலியுறுத்தும் வகையில் கதை அமைத்த வகையில் படத்தைப் பாராட்டலாம்
பொதுவாக என் மனசு தங்கம்…. ‘நகை’ செய்யலாம்