தரமணி @ விமர்சனம்

thara 8

ஆண்ட்ரியா ஜெரிமியா, அஞ்சலி , வசந்த் ரவி, அழகம்பெருமாள் நடிக்க ,

கற்றது தமிழ், தங்க மீன்கள் போன்ற சிறந்த படங்களைத் தந்த ராம் இயக்கி இருக்கும் படம் தரமணி . இது தரமான மணியா ? பார்க்கலாம் .  

பல்வேறு மொழிகள் , பல்வேறு மாநில மக்கள் , பல்வேறு நாட்டினரின் இருப்பால் , இன்று கான்கிரீட் காடாக மாற்றப்பட்டு விட்ட அன்றைய அற்புத விவசாய நிலமான சென்னை தரமணியில் நடக்கும் கதை . 
காதலியால் (அஞ்சலி) ஏமாற்றப்பட்டு மனம் நொந்து தாடியும் சிகரெட்டுமாக காலம் கடத்தும் ஒரு மிகை உணர்ச்சிக் கொண்ட இளைஞனுக்கும் (வசந்த் ரவி) ,
thara 3
கணவனின் ஓரினச் சேர்க்கை பழக்கத்தை மன்னித்து விடுதலை கொடுத்து, தான் கெட்டவள் என்ற அவச்சொல் சுமந்து,
ஆரம்பப் பள்ளி செல்லும் மகனோடு வாழும் ஆங்கிலோ இந்தியப் பெண்ணுக்கும் ( ஆண்ட்ரியா ஜெரிமியா) ஒரு மழை நாளில் நடு ரோட்டில் வரும் அறிமுகம் ஏற்படுகிறது . அறிமுகம் நட்பாகிறது . 
அமெரிக்க செல்ல ஆசைப்பட்ட காதலிக்கு மூன்று லட்ச ரூபாய் திருடிக் கொடுத்ததையும் திருட்டைக் கொடுத்தவர் , திருட்டு கொடுத்த இடத்திலேயே செத்துக் கிடந்ததையும்  அவன் சொல்கிறான் . 
ஓரினச் சேர்கைக் கணவனை சமுதாயத்திற்கு முன் காட்டிக் கொடுக்காமல் தான் பழி சுமந்த கதையை அவள் சொல்கிறாள் . 
thara 99
ஒரு நிலையில் அவனும் அவளும் அவளது பிள்ளையும் ஒரே வீட்டில் வாழ ஆரம்பிக்கிறார்கள் . நட்பு உறவாகி ‘உறவாக’வும் ஆகிறது . 
உறவுக்குப் பிறகு அவளது அலுவலக ஆண்களோடு அவள் பழகும் விதத்தை அவன் சந்தேகப் படுகிறான். மிருகத்தனமான அவன் நடத்தையை பொறுக்க முடியாமல் அவனைப் பிரிகிறாள் . 
மேலும் மிருகமாகும் அவன் குடும்பப் பெண்கள் பலரை சபலப் படுத்தி  வீழ்த்தி காசு பறிக்கும் செயலை செய்கிறான் . 
அதனால் அவன் சில தண்டனைகளுக்கு ஆளாகிறான் . அது அவனுக்கு அவள் எவ்வளவு நல்லவள் என்பதை உணர்த்துகிறது. 
thara 5
மீண்டும் அவளைத் தேடி வரும் அவனை அவள் எப்படி எதிர்கொண்டாள் என்பதே இந்தப் படம் . 
இப்படி ஒரு கதையில்  ராம் சொல்லி இருக்கும் சமூக பிரச்னைகள்தான் அபாரம் !
இந்தியா இலங்கை கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஜெயித்தால் தமிழக மீனவன் இலங்கை ராணுவத்தால் கொல்லப் படுவதை சொல்லி புத்தம் சரணம் கச்சாமி என்று சொல்லும் இடத்திலேயே  ராம் ஆஜர் . 
கதையில் நடக்கும் — இயல்புக்கு அப்பாற்பட்ட சம்பவங்களைப் பற்றி கேள்வி வருவதை பார்வையாளனுக்கே கேள்வியாக வைக்கும் ராம் ,
அடுத்து ”தரமணி ஏரியில் இவ்வளவு பில்டிங் கட்டினது எப்படி என்ற கேள்வி வராத உங்களுக்கு மேலே உள்ள கேள்விகளை கேட்கும் உரிமை இல்லை” என்று,
thara 999 
பார்வையாளனையே விமர்சனம் செய்து அவனிடமே கைதட்டல் வாங்கும் இடத்தில்  வியக்க வைக்கிறார் . 
அதே போல தான் பணம் திருடிய நபரின் குடும்பத்தை நாயகன் போராடி கண்டு பிடித்து மூணு லட்ச ரூபாயை கொடுத்த அன்று மோடி ,
பழைய நோட்டுக்களை செல்லாததாக அறிவித்ததாக சொல்லும் இடத்தில் அரங்குகள் அதிர்ந்து திடீர் டீமானிடைசெஷனை செருப்பால் அடிக்கும் விதம் அருமை . 
வெட்ட வெளி என்று எண்ணிப் பறந்து கண்ணாடியில் மோதி உயிரிழக்கும் புறா , மனித இனத்தையே குற்ற உணர்ச்சியில் கூனிக் குறுக வைக்கிறது . அருமை ராம்  அருமை . 
thara 1
வசனங்களில் அர்த்தமும் மாற்று சிந்தனையும் பொருள் பொதிந்த நவீனமும் இருப்பது பிரம்மாதம் 
இந்தப் படத்துக்கு என்று துள்ளல் எள்ளல் நெகிழ்வு கலந்து அட்டகாசமான இசையைக் கொடுத்துள்ளார் யுவன் சங்கர ராஜா . 
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு  படத்துக்கு யானை பலம் தருகிறது .
மிகப்பிரம்மாதமாக நடித்துள்ளார் ஆண்ட்ரியா . வசந்த் ரவி கடுமையாக உழைத்துள்ளார் . அழகம்பெருமாள் இயல்பு . மற்ற எல்லோரும் கூட சிறப்பே . 
வேலை , சூழல் , சம்பாத்தியம் , அமையும் புதிய கலாச்சாரம் , பாலியலில் கொடுக்கும் சுதந்திரம் மேலோட்டமாகப் பார்த்தால் பெண்ணுக்கும் இருப்பது போலவே தோணும்.
thara 6
ஆனால் இன்னும் பெண்களுக்குத்தான் பிரச்னை என்று சொல்லும் விதம் அருமை . 
ஆணின் சபலமே தவறு என்று அல்லவா சொல்ல வேண்டும் ? ஆணுக்கு சபலம் இருக்கும்போது பெண்ணின் சபலத்தை மன்னிக்கலாம் என்பது என்ன நியாயம் ராம் ?
இது எல்லோருக்கும் சபலத்துக்கு ஆளாகும் உரிமையை அல்லவா தருகிறது ? இது நல்லதா ?
விவரிக்கப்படும் கதாபாத்திரங்களின் குணாதிசயம் என்பது அந்தக் கதாபத்திரங்களையே குறிக்கும் . ஆனால் ஒரு போன் மூலம்,
 எல்லா மொழி இன கலாச்சார பண்பாட்டைக் கொண்ட பெண்களையும் வீழ்த்த முடியும் என்று, முகமறியா பெண்களை எல்லாம் ஒட்டுமொத்தமாகச் சித்தரிப்பதன்  மூலம்,
 thara 2
ஒரு சமூகத்தையே — அது பல்வேறு கலாச்சாரங்கள் கலந்த இடம் என்றாலும் — கேவலப் படுத்துவது என்ன  நியாயம் ?. 
காமுகன் வலை விரித்த பெண்களில் ஒருத்தியாவது அவனை செருப்பால் அடித்து விரட்டினாள் என்று சொல்லி இருக்க வேண்டாமா ராம் ?
தரமணி .. புறம் புறநானூறு  ; அகம் அசிங்கம் ! 
மகுடம் சூடும் கலைஞர்கள் 
———————————————
வசனகர்த்தா ராம், யுவன் சங்கர் ராஜா, தேனீ ஈஸ்வர், ஆண்ட்ரியா ஜெரிமியா , வசந்த் ரவி 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *