
கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் மற்றும் தனுஷின் விண்டர் பார் பிலிம்ஸ் இணைந்து வழங்க , தனுஷ் , அமலா பால், சமுத்திரக்கனி, காஜல் அகர்வால் நடிப்பில் ,
தனுஷின் கதை வசனத்தில் சவுந்தர்யா ரஜினிகாந்த் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம் வி ஐ பி 2 . இந்த வி ஐ பி 2 முக்கியப் பிரமுகரா ? வெட்டி ஆபீசரா ? பார்க்கலாம் .
வி ஐ பி என்கிற வேலை இல்லாப் பட்டதாரி படத்தின் இரண்டாவது பாகமாக நீட்சியாக வந்து இருக்கும் படம் இது
நாயகன் ரகுவரனின் ( தனுஷ்) அம்மா (சரண்யா ) இறந்து விட்ட நிலையில் காதலித்து மணந்த பெண் (அமலா பால்) , அப்பா (சமுத்திரக்கனி ), தம்பி ஆகியோரோடு வாழ்கிறான் ரகுவரன் .
அலுவலக நண்பராக விவேக் . போனில் மட்டும் வரும் அவரது மனைவி தங்க புஷ்பம் . நண்பராக செல்முருகன் எல்லாம் அப்படியே இந்தப் பாகத்திலும் இருக்கிறார்கள் .
முதல் பாகத்தில் போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து ரகுவரனால் மீட்கப்பட்ட அனிதாவின் தந்தையின் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் பணியாற்றும் ரகுவரன்,
வேலை இல்லாமல் இருக்கும் இன்ஜினியர்களை பயன்படுத்தி பெரும் கட்டிடத் திட்டம் ஒன்றை செயல்படுத்தி வெற்றி பெற்று இருக்கிறார் .
நடப்பு ஆண்டின் சிறந்த பொறியாளருக்கான விருதை ரகுவரன் பெற, நிகழ்ச்சிக்கு வரும் – தென்னிந்தியாவின் சிறந்த கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் அதிபரான
வசுந்தரா (கஜோல்) , ரகுவரனை தன் கம்பெனிக்கு இழுக்க முயல,
அனிதா அப்பா மீது கொண்ட நன்றி உணர்ச்சி காரணமாக ரகுவரன் மறுக்கிறார் .
கொந்தளிக்கும் வசுந்தரா , அனிதா கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் ரகுவரனை தொழிலில் இருந்தே துடைத்து ஏறிய முயல, அப்புறம் என்ன ஆனது என்பதே இந்த வி ஐ பி 2 .
முதல் பாகத்தில் இருந்து அழகாக இரண்டாம் பாகத்துக்கான நிகழ்வுகளை கனெக்ட் செய்து இருக்கிறார்கள் கதாசிரியர் தனுஷும் , திரைக்கதையாளர் சவுந்தர்யாவும் .
உணர்வில் வரும் அம்மா, அந்த எலும்புக்கூடு டூ வீலர் மோஃபா , தங்க புஷ்பம், மனைவியை சந்தேகப்படும் விவேக், பக்கத்து வீட்டிலேயே குடி இருக்கும் மாமியார் மாமனார் ,
அறிவுரை சொல்லும் அப்பா என்று, சீன்களை முதல் பாகத்தில் இருந்து திரித்த விதம் சிறப்பு .
வசனத்தில் திருக்குறள்களை சரியான விதத்தில் பொருத்தும் வகையில் பாராட்டுக்குரியவர் ஆகிறார் தனுஷ் . அருமை தனுஷ் .
தவிர படம் முழுக்கவே வசனம் சிறப்பு (”நாம நம்ம பொண்டாட்டிய நடத்துற விதத்துலதான் , நம்ம அம்மா நம்மள எப்படி வளர்த்தாங்கன்னு புரியும்” )
சென்னை வெள்ள நாட்களை படத்தில் பயன்படுத்திய விதமும் அருமை (ஏகப்பட்ட ஸ்டாக் வீடியோக்கள் இருக்கே தனுஷ் ? . மாறி மாறி இருட்டுக்கு பயப்படுவதற்கு பதில் அதை எல்லாம் போட்டு அசத்தி இருக்கலாமே )
நடிகர் தனுஷ் வழக்கம் போல கவர்கிறார் .
அமலா பால், சமுத்திரக்கனி, கஜோல் ,எல்லோரும் ஒகே . அவ்வப்போது சிரிக்க வைக்கிறார் விவேக் .
தனுஷ் குடித்து விட்டு வருவதும் அமலா பால் திட்டுவதுமான காட்சிகளின் நீளத்தைக் குறைத்து இருக்கலாம் .
ரகுவரன், இன்னும் அந்த மோஃபா டூ வீலர் ஓட்டுவது போல காட்டாமல் அதை வீட்டில் நினைவுச் சின்னமாக வைத்துள்ளார் என்று சொல்லி யதார்த்தப்படுத்தி இருக்கலாம் .
அம்மா ரகுவரன் முன்பு தோன்றும் காட்சியில் ” நான் உன் இமாஜினேஷன்தான் ” என்று அம்மாவையே கூற வைத்து சொதப்பி இருக்காமல் ,
7 ஜி ரெயின்போ காலனி படத்தின் இறுதியில் சோனியா அகர்வால் வருவது போல சீரியசான ஒரு உணர்வுப் பூர்வமான காட்சியாக வைத்து இருக்கலாம் .
கஜோலுக்கு இன்னும் நல்ல லுக் மற்றும் கெட்டப் செட் பண்ணி இன்னும் அவர் பண பலம் படை பலத்தில் இருப்பது போல காட்டி இருக்கலாம் .
பாடல்கள் வேகத்தடையாக இருப்பதை தடுத்து இருக்கலாம் . சான் ரோல்டனின் இசை இன்னும் சிறப்பாக இருந்து இருக்கலாம்
ரகுவரன் – வசுந்தரா இடையேயான போராட்டத்துக்கு இன்னும் தெறிப்பான சீன்கள் வைத்து டெம்போ , டென்ஷன் ஏற்றி , எதிர்பாராத சமயத்தில் வெள்ளக் காட்சிகளை வைத்து இன்னும் சிறப்பாக சொல்லி இருக்கலாம் .
கிளைமாக்ஸ் மற்றும் கடைசிக் காட்சிக்கு இன்னும் கொஞ்சம் சிறப்பாக யோசித்து இருக்கலாம் .
இப்படி எல்லாம் செய்து இருந்தால் படம் இன்னும் நன்றாக வந்திருக்கும்
மகுடம் சூடும் கலைஞர்
—————————————
வசனகர்த்தா தனுஷ் ( திருக்குறளை ஆங்காங்கே சிறப்பாகப் பயன்படுத்தியதற்காக )