பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் எல் எல் பி தயாரிப்பில் விக்ரம் பிரபு , அஞ்சலி நாயர், லால்,எம் எஸ் பாஸ்கர், மது சூதனராவ், பாவல், போஸ் வெங்கட், கார்த்திக் நடிப்பில் , ஜெய் பீம் படத்தில் கொடுமைக்கார இன்ஸ்பெக்டராக நடித்திருந்த தமிழ் எழுதி இயக்கி ,ஹாட் ஸ்டாரில் வெளியாகி இருக்கும் படம்.
வெள்ளைக்காரன் காலத்தில் இந்தியர்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட காவல் பணியில், பயிற்சி பெறுபவர்கள் இந்தியர்கள் என்பதற்காக உருவாக்கப்பட்ட அடிமைத்தனமான மனிதாபிமானமற்ற கட்டுப்பாடுகள் இன்னும் தொடரும் நிலையில் இன்றும் பயிற்சிக்கு போவோர் பயிற்சிக்கான அவசியங்களையும் மீறி எப்படி மிருகத்தனமாக நடத்தபடுகின்றனர் என்பதைச் சொல்லும் படம்.
அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடும் பயிற்சி இளைஞர்களாக விக்ரம் பிரபு , பாவல், பிரகதீஸ், கார்த்திக். கொடுமைக்கார அதிகாரிகளாக மது சூதனராவ், லால் . நல்ல ஆனால் கொடுமைகளை தடுக்க முடியாத அதிகாரிகளாக எம் எஸ் பாஸ்கர், போஸ் வெங்கட், மற்றும் நாயகி அஞ்சலி நாயர்.பாராத கதை . நுணுக்கமான விவரணை.
களம், பின்புலம், திருமண் ராகவனின் கலை இயக்கம், மகேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு , இயக்குனர் தமிழின் படமாக்கல் இவை…. நம்மை பார்ப்பது படம் என்று நினைக்க விடாமல் உள்ளே சிக்கிக் கொண்ட ஒருவராக உணர வைக்கிறது . படத்தின் முதல் பலம் இது .
விக்ரம் பிரபு உள்ளிட்ட பல நடிகர்கள் கிட்டத்தட்ட நிஜ பயிற்சியே எடுத்துக் கொண்டது போன்ற அளவுக்கு வியர்வை சிந்தி ஆகப் பெரும் உழைப்புக் கொடுத்து நடித்திருக்கும் நடிப்பு இரண்டாவது பலம். அஞ்சலி நாயர் பாலைவனச் சோலை.
நிஜ நிகழ்வில் இருந்து பொறுக்கி எடுத்த சம்பவங்களின் வழியே அமைக்கப்பட்ட சிறப்பான காட்சிகள், ”அதிகாரம் இல்லாத உணர்ச்சி நம்மையே எரிச்சிடும் ( அதிகாரம் இல்லாத நேர்மை என்று சொல்லி இருக்கலாமோ)” போன்ற வசனங்கள் மேலும் சிறப்பு சேர்க்கின்றன
பிலோமின் ராஜின் ஒளிப்பதிவு பரேட் மாண்டேஜ்களில் அசத்துகிறது . ஜிப்ரனின் இசை மொத்த படத்துக்கும் எழுச்சியூட்டுகிறது
முதல் பாதி மிக வெகு படு யதார்த்தம் . இரண்டாம் பகுதி சினிமாத்தனம் மிகுந்தாலும் நாயகன் தோற்று விடக் கூடாது என்று என்று படம் ஆரம்பித்த அரை மணி நேரத்திலேயே நமக்கு ஆசை வந்து விடுவதால் பெரிதாக குறைகள் தெரிவதில்லை.
போலீஸ் துறை உயர் பதவி அதிகாரம் என்பது யாரையும் துச்சமாக எண்ணும். எனவே இதில் சாதிப் பாகுபாட்டை கொண்டு வராமல் இருந்திருந்தால் எல்லோர் மனதிலும் சம அளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும். இப்போ அது கொஞ்சம் மிஸ்ஸிங்.
போலீஸ் அதிகார ஆணவம் என்பது தப்பாதான் இருக்கு. ஆனால் இனியும் அப்படித்தான் இருக்கும் என்று சொல்வதற்கு ஒரு படைப்பு எதற்கு? யதார்த்தம் என்ற பெயரில் அந்த அளவு வளைஞ்சு போகனுமா? அந்த அதிகார ஆணவத்தை அடித்து நொறுக்குகிற அல்லது மன சாட்சியை தட்டி எழுப்புகிற முடிவை வைத்து பெரும் விவாதத்தை உருவாக்கி இருக்க வேண்டாமா?நல்ல ஆள் கூட பயிற்சி முடிவில் வளைஞ்சு கொடுத்தோ சமரசம் செய்தோ வாக்கு தவறியோதான் வெளிய வரணும் என்று சொல்ல ஒரு படைப்பு எதற்கு?
இப்படி ஒரு சில கேள்விகள் வந்தாலும் வித்தியாச கதை திரைக்கதை, அற்புதமான படமாக்கல், நடிக நடிகையரின் பெரும் உழைப்பு என்று டாணாக்காரன் பரேட் நடை போடுகிறான்