வருணன் – GOD OF WATER விமர்சனம்

யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் மற்றும் வான் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில்  ராதாரவி, சரண்ராஜ் , துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், கேப்ரில்லா,  சங்கர் நாக் விஜயன், ஹரிப்பிரியா, மகேஸ்வரி, ஜீவா ரவி, அர்ஜுனா கீர்த்தி வாசன், ஹைடு கார்த்தி, பிரியதர்ஷன், கௌஷிக், துங்கன் மாரி, கிரண் மயி,  பேபி ஜாயிஸ் , ஐஸ்வர்யா நடிப்பில் ஜெயவேல் முருகன் இயக்கி இருக்கும் படம் . 

வட சென்னை கடல்புறப் பகுதியில் வாட்டர் கேன் சப்ளை செய்யும் இரண்டு நிறுவனங்கள் . முதலாளிகளுக்குள் புரிதல் இருந்தாலும் ஒரு முதலாளியின் (ராதாரவி) கீழ் வேலை செய்யும் இளைஞர்கள் இருவருக்குள் (துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் – மாரி) ஆரம்பத்தில் பகையும் பின்னர் நட்பும் . ஒருவனுக்கு ஒரு தெலுங்குப் பெண்ணோடு (கேப்ரில்லா) காதல். இன்னொருவனுக்கு ஒரு சமூக சேவகி பெண்ணோடு (ஹரிப்பிரியா) காதல் 
 
இன்னொரு முதலாளி (சரண்ராஜ்) நல்லவர் என்றாலும் அவரது மனைவி (மகேஸ்வரி ) மனைவியின் தம்பி (சங்கர் நாக் விஜயன்) மற்றும் அவனது நண்பர்கள் நியாய தர்மம் அற்றவர்கள் . 
 
இரு தரப்பையும் முட்டிக் கொள்ள வைத்து ஆதாயம் தேடும் போலீஸ் அதிகாரி ஒருவர் (ஜீவா ரவி)
 
தண்ணி கேன் போடுவது, போட்டி பொறாமை, பேராசை இவற்றால் இரு தரப்பும் முட்டிக் கொள்ள போலீஸ் ரத்தம் குடிக்கும் நரியாகச் செயல்பட , என்ன  நடந்தது என்ன என்பதே படம். 
 
வட சென்னைப் பின்னணியில் ஜிகினா இல்லாத படமாக்கல். 
 
படத்தில் முதலில் கவர்வது ஸ்ரீராம் சந்தோஷின் சிறப்பான ஒளிப்பதிவும் அதற்கு இயக்குனர் ஜெயவேல் முருகன் வைத்திருக்கும் சிறப்பான ஷாட்களும் . 
 
வாட்டர் கேன் வரலாறு , சுண்டிச் சோறு சட்ட விரோதமான பொருளாக மாறிய  வரலாறு , லொக்கேஷன்கள் தேர்வு நடிக நடிகையர் தேர்வு ஆகியவற்றால் பாராட்டுப் பெறுகிறார் இயக்குனர் 
 
வித விதமான கேமரா கோணங்கள் , ஒளி – இருள் பயன்பாடு,  வண்ண ஆளுமை என்று அசத்துகிறார் ஒளிப்பதிவாளர்.  . கேமராவை ஷேக் செய்வதன் மூலம் காட்சியின் உணர்வை கடத்தும் கேமராமேனின் உத்தி அபாரம் . 
 
போபோ சசியின் இசை பாடல்கள் , பின்னணி இரண்டிலும் சிறப்பு . பத்துவின் கலை இயக்கமும் சபாஷ் போட வைக்கிறது . 
 
வாட்டர சப்ளை முதலாளிகளாக அமர்த்தலாக ராதாரவியும் , குடும்பத்தினரின் அயோக்கியத்தனங்களை சமாளிக்க முடியாத  திக்குவாய் நபராக சரண்ராஜும்  சிறப்பு . 
 
 கேப்ரில்லா , ஹரி பிரியா கியூட் கதாநாயகிகள் . 
 
பேராசை பிடித்த மனைவியாக மகேஸ்வரியும் அருமையாக நடித்துள்ளார் . அவரது தம்பியாக வரும் சங்கர்நாக் விஜயன் வித்தியாசமான மேனரிசம் மிரட்டலான நடிப்பு என்று கவனம் கவர்கிறார் . 
 
ஆங்காங்கே சில அட்டகாசமான காட்சிகள் வந்தாலும் திரைக்கதையில் ஏகப்பட்ட குழப்பம், பலவீனம், தெளிவின்மை . 
 
ஆரம்பத்தில் சத்யராஜின் குரலில் ஐம்பூதம் , தண்ணீர் , மனிதனின் மிருக குணம் என்று பெரிய பில்டப் கொடுத்து எதிரபார்ப்பை எக்கச்சக்கமாகத் தூண்டி விட்டு ஒரு எளிய கதையை சொல்கிறார்கள் . எனவே ஆரம்பத்தில் வரும் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாத படமாகப் போகிறது . 
 
படம் முழுக்க யாராவது பின்னணிக் குரல் கொடுத்துக் கொண்டே ஏ ஏ ஏ ஏ … இருக்கிறார்கள். 
 
ஐம்பூதம் , தண்ணீர் சண்டை , காதல் , பண ஆசை , போலீசிந தந்திரம் இவற்றை எதை எந்த அளவில் சொல்வது என்பதில் திட்டவட்டம் இல்லை. 
 
இந்தக் கதைக்கு ரெண்டு காதல் ஜோடி அவர்களுக்கான காட்சி , பாட்டு கண்ணீர் என்பது 25 லிட்டர் தண்ணீர் கேனில் 50 லிட்டர் தண்ணீர் ஊற்றி அழுத்துகிற உணர்வைத் தருகிறது . 
 
ஒரு காதல் ஜோடி என்று வைத்து மொத்த பாதிப்பையும் அதற்கு கொடுத்து விட்டு தண்ணீர் கதை விவகாரத்தில் கவனம் செலுத்தி இருக்க  வேண்டும் . 
 
நீளநீளமான காட்சிகள் , தாக்குப் பிடிக்க முடியாத இடத்தில் நிறுத்தி நிதானமாக ஒரு பாட்டு, மிக எளிதாக யூகிக்க முடிந்த இரண்டாம் பாதித் திரைக்கதை இவற்றால் வறண்டு கிடக்கும் நிலம் போல் ஆகிறது படம் .  வருணன் என்ற பெயரே கூட படத்துக்கு அவ்வளவாக  பொருத்தமில்லை. 
 
வாட்டர் கேன் சுத்தமாக இருந்து உள்ளே இருக்கும் தண்ணீர் சுத்தமாக இல்லை எனில் எப்படி இருக்கும்? அப்படி மேக்கிங்கில் கவர்ந்தாலும் எழுத்தில் ஏமாற்றுகிறது வருணன் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *