
அரசு பிலிம்ஸ் சார்பில் எம்.திருநாவுக்கரசு வழங்க, சிவா, பவர் ஸ்டார் சீனிவாசன், புதுமுக நடிகை நைனா சர்வார் , மன்சூர் அலிகான், மதுமிதா , சிங்க முத்து, சென்ட்ராயன் ஆகியோர் நடிக்க,
கச்சேரி ஆரம்பம் படத்தை இயக்கிய திரைவண்ணன் இயக்கி இருக்கும் படம் அட்ரா மச்சான் விசிலு
அடிச்சா அடுத்தவங்க காத்து கிழியுமா? இல்லை அடிக்கிற வாய் கிழியுமா ? பார்க்கலாம்
கல்வியை வியாபாரமாக்குகிற கல்லூரி கரஸ்பாண்டண்டை, அவரது அறைக்கு சென்றே மிரட்டுகிற மாதிரி ஒரு படத்தில் நடித்த —
‘கும்பலா எத்தனை பேர் வந்தாலும் நான் சிங்கிளாதான் வருவேன்’ என்று இன்னொரு படத்தில் வசனம் பேசி நடித்த–
பிறப்பால் வேறு மாநிலததைச் சேர்ந்தவர் என்றாலும் தமிழ்நாட்டில் கோடி ரசிகர்களை கொண்டு இருக்கிற ….
ஸ்டார் நடிகர் அவர் (படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன்— ஆனா நிஜத்தில் யாரைச் சொல்றாங்கன்னு புரியுதுல்ல?)
அவருடைய வெறித்தனமான –மதுரைக்கார ரசிகர்கள், சிம்மக்கல் சேகர் (சிவா), பழங்காநத்தம் பாபு (சென்ட் ராயன்) மற்றும் ரஹமத்(அருண் பாலாஜி)
சிம்மக்கல் சேகருக்கும் – தேவிக்கும் (நைனா சர்வார்) பள்ளி நாட்களில் இருந்தே காதல் .
ஸ்டார் நடிகர் நடித்த ‘பட்டத்து ராஜா’ படத்தின் வெளியீட்டை சிறப்பாகக் கொண்டாடுவதற்காகவும் ,
மதுரைக்கு வருகைதரும் ஸ்டார் நடிகரின் உதவியாளருக்கு (சிங்கமுத்து ) சிறப்பான வரவேற்பு கொடுக்கவும் கடன் வாங்கி செலவு செய்கிறார்கள் நண்பர்கள் .
இதோடு போட்டி நடிகரான விருதுகளைக் குவித்த ‘அப்பு’க் குட்டியின் (இதுவும் யாருன்னு புரியுதுல்ல? ) ரசிகர்களோடு மோதல் .அதனாலும் பிரச்னை .
இவர்களது சண்டையை அடிக்கடி தீர்த்து வைக்கும் இன்ஸ்பெக்டர் ஒருவரின் (ராஜ்கபூர்) அக்கறையான ஆலோசனைப் படி ,
தாங்கள் வாய்க்கு வாய் தலைவர் என்று கொண்டாடும் ஸ்டார் நடிகரின், அடுத்த படத்தின் மதுரை ஏரியா உரிமையை வாங்கி வியாபாரம் செய்ய முடிவு செய்கின்றனர் மூவரும் .
தேவி நகைகளை எல்லாம் சேகருகுக் கொடுக்க, பாபுவின் அப்பா அம்மாவும் புரோட்டா கடை போட்டு 30 வருடங்களாக கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அவனுக்குக் கொடுக்க ,
ரகமத்தும் கஷ்டப்பட்டு பணம் கொண்டு வர ,
அந்தப் பணத்தை எல்லாம் போட்டு , தங்கள் ஸ்டார் நடிகரின் அடுத்த படமான ‘பாயும்புலி’யும் பாகுபலியும் படத்தை, ஸ்டார் நடிகரின் ஆசியோடு அவரது மேனேஜர் மூலம் வாங்குகின்றனர் .
படம் படுதோல்வி அடைகிறது . மூவரும் பெரும் நஷ்டத்தை அடைகின்றனர் .
எனவே ‘நஷ்டப்பட்ட தங்களுக்கு பண உதவி செய்ய வேண்டும்’ என்று ஸ்டார் நடிகரைப் பார்த்து கேட்கின்றனர் .
“ரசிகனாகவே இருக்க வேண்டியதுதானே ? உங்களை யாருடா படத்தை வாங்க சொன்னது ?” என்று அவர் ஆரம்பிக்க , உங்களை நம்பித்தான் வாங்கினோம் என்று இவர்கள் சொல்ல …
கடைசியில் ”பைசா கூட தர முடியாது” என்று மறுத்து வீட்டை விட்டு வெளியே துரத்துகிறார் ஸ்டார் நடிகர்.
ஸ்டார் நடிகர மீதான தங்கள் மோகத்தை ஒழிக்கும் மூவரும் , பணம் இல்லாமல் ஊருக்கு போக முடியாமல் தவிக்கின்றனர் .
இந்த நேரம் பார்த்து மூவருக்கும் ஒரு விஷயம் தெரிய வருகிறது .
அதாவது கறுப்புப் பண ரெய்டு வரும்போதெல்லாம் மொத்த பணத்தையும் ஆம்புலன்சில் ஏற்றி ஊர் முழுக்கச் சுற்ற விடுவதும்,
ரெய்டு முடிந்ததும் வீட்டுக்கு ந்கொண்டு வருவதும் ஸ்டார் நடிகரின் பழக்கம் என்ற தகவல்தான் அது .
அதன்படி , ஸ்டார் நடிகர் வீட்டுக்கு ரெய்டு வருவதாக இவர்கள் தகவல் அனுப்ப, அதை நம்பும் ஸ்டார் நடிகர் நூறு கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை ஆம்புலன்சில் ஏற்றி , சுற்ற விட ,
அந்த பணத்தை நண்பர்கள் மூவரும் கைப்பற்ற ….
அப்புறம் என்ன நடக்கிறது என்பதே இந்த அட்ரா மச்சான் விசிலு .
சினிமா மீது மக்களுக்கு இருக்கும் அதீத மோகத்தைக் கருவாக வைத்து சினிமா பைத்தியம் என்ற படத்தை முக்தா சீனிவாசன் எடுத்து இருக்கிறார்
அதில் சிவாஜி , கமல் எல்லாம் கவுரவ வேடத்தில் நடித்து இருக்கிறார்கள்
பிறகு 1980 களின் இறுதியில் ஹீரோக்கள் மீது ரசிகர்களுக்கு இருக்கும் வெறி, எப்படி அந்த ரசிகர்களின் குடும்ப உறவுகளை சீரழிக்கிறது என்பதைச் சொல்லி
‘நீங்களும் ஹீரோதான்’ என்ற பெயரில் ஒரு படம் எடுத்தார் , இயக்குனர் வி.சேகர்
அதன் பிறகு இப்போது ரஜினி– ரசிகர்கள் — லிங்கா வியாபார விவகாரம் — பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் பிரச்னயை மறைமுக மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு இருக்கிறது .
ஆனால் உணர்ச்சிவசப்படும் ரசிகர்களை மடை மாற்றி சமாளிக்க வசதியாக இரண்டு இடங்களில் ரஜினியை நேரடியாக பாராட்டுவது போல வசனம் வைத்து விட்டு,
அதோடு நில்லாமல் பவர் ஸ்டாரின் லத்திகா படத்தை கிண்டல் அடிக்கிற மாதிரியும் வசனம் வைத்து , ”நாங்கள் படம் முழுக்க பவர் ஸ்டாரைதான் சொல்றோமாக்கும்” என்று காட்டிக் கொள்கிறார்கள் .
தவிர கிளைமாக்ஸிலும் சச்சரவு இல்லாத சமாதானக் கொடி பறக்கிறது .சமத்துதான் .
இந்த பிரச்னையை தவிர்த்து விட்டு பொதுவில் பார்க்கும்போது,
தலைவர்கள் என்று கொண்டாடப்படும் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது நடக்கும் மேள– தாள, தாரை — தப்பட்டை ,, பட்டாசு — பாலபிஷேக , கட் அவுட் — பேனர் அலப்பறைகளை நன்றாகக் காட்டி உள்ளனர் .
அதற்காக அந்த ரசிகர்கள் எங்கே எல்லாம் எப்படி எல்லாம் கடன் வாங்கி, பெற்றோரை மிரட்டி , குடும்பத்தாருக்குத் தலை குனிவை கொடுத்து , காதலிக்கும் பெண்களிடம் எல்லாம் காசு பிடுங்கி, காசு சேர்த்து,
இந்த செலவுகளை செய்கிறார்கள் என்பதை எல்லாம் சிறப்பாகக் கூறி உள்ளனர். .
அதிலும் பாபுவின் தற்கொலை மிரட்டலுக்கு பயந்து அவனது அப்பா முப்பது வருட சேமிப்பைக் கொடுப்பதும் , அது கை விட்டுப் போன பிறகு அந்த மனிதர் அழும் காட்சிகளும்,
யதார்த்தத்துக்கு மிக அருகில் இருப்பதால் மனதைப் பிசைகின்றன .
அந்தக் காட்சிகளில் சென்ட்ராயன் மற்றும் அவரது அப்பா அம்மாவாக நடித்துள்ளோர் நடிப்பும் பாராட்டப்பட வேண்டியவை .
முதல் பாதியில் சொன்னதையே சொல்லிக் கொண்டு தள்ளாட்ட நடை போடும் திரைக்கதை இரண்டாம் பகுதியில் பணம் கவரப்பட்டதும் சூடு பிடிக்கிறது .காமடி சிக்சர்கள் பறக்கின்றன
அதிலும் ஸ்டார் நடிகரின் மேனேஜர் மனைவியாக வரும் மதுமிதா நடிப்பிலும் காமெடியிலும் சும்மா பின்னிப் பெடல் எடுக்கிறார் .
இந்தப் படத்தின் மகேந்திர சிங் தோனி என்று மதுமிதாவை தாராளமாக சொல்லலாம் . . அட்டகாசமான ஃபர்பார்மன்ஸ் மதுமிதா… வெல்டன் !
(ஆனா வாயைக் கோணிக் கொண்டு பட்டர்பிளை மாதிரி கண் சிமிட்டுவதை மட்டும் இந்தப் படத்தோடு நிறுத்திக்கணும் . ஒகே வா ? குட் கேர்ள்!)
சிவா தனக்கே உரிய வழக்கமான பாணியில் நடித்து விட்டுப் போகிறார் . குறை சொல்லவோ கொண்டாடவோ ஒன்றும் இல்லை .
சூப்பர் ஸ்டாருக்கு பதில் பூடகமாகச் சொல்லப்பட ஒரு ஸ்டார் வேண்டும். அதற்காக மட்டுமே பவர் ஸ்டார் . மற்றபடி ‘அவர் நல்லா நடிக்கல’ என்று யாரும் அழப்போவது இல்லை.
என்றாலும் , பச்சை மிளகாய் கடித்த மாதிரி முகத்தை கோணுவது பச்சை மிளகாட் எரிச்சலை விட பெரிய எரிச்சல் .
புதுமுகம் நைனா சர்வார் .. மறுபடியும் திரும்பிப் பார்க்க சொல்லும் திருத்தமான முகம் . அந்த முகததில் உணர்வுகளுக்கும் பஞ்ச்ம் இல்லை . நல்வரவு .
எதற்கெடுத்தாலும் கத்துவதை காமெடி என்று யாரோ சிங்கமுத்துவிடம் தப்பா சொல்லிட்டாங்க போல . மனுஷன் காது ஜவ்வை கிழிக்கிறார் . படத்தில் மிகப்பெரிய சோதனையே இவர்தான் .
பவர் ஸ்டாரைக் கூட மன்னிக்கலாம் . இந்தப் படததில் சிங்கமுத்துவைதான் மன்னிக்கவே முடியல
மன்சூர் அலிகான் நத்திங் ஸ்பெஷல் .
நர்ஸ்களை கணக்கு பண்ணும் டாக்டர், கணவன் மருத்துவமனையில் இருக்கும்போதே அடுத்த ஆளை கரெக்ட் பண்ணும் மனைவி என்று காமடி என்ற பெயரில் சகட்டு மேனிக்கு சகதி காமெடி .
காசி விஷ்வாவின் ஒளிப்பதிவு கண்ணுகுக் குளிர்ச்சியாகவும் படத்துக்கு பலமாகவும் இருக்கிறது . பாடல் காட்சிகளில் உடைகளும் கலர்ஃபுல்.
ரகு நந்தனின் இசையில் —- நண்பர்கள் கடற்கரையில் சோர்ந்து இருக்கும் போது வரும் அந்த ஆறுதல் பாடலில் நடனமாடும் மங்கை,
கும்மியடிப்பது போல கைதட்டி, அடுத்த நிமிடம் தனது தோள்தட்டி ஆடும் அந்த ஸ்டெப்… அருமை . அருமை அருமை
அடேயப்பா ! உடல் மொழியில் ஆறுதலை காட்டும் ஒரு சிறு நடன அசைவு .திரை வழியே எவ்வளவு வீச்சுடன் வெளிப்படுகிறது. !
நடன இயக்குனர் அசோக் ராஜாவுக்கும் நடனம் ஆடிய அந்த நடன மங்கைக்கும் இதயத்தின் அடித்தளத்தில் இருந்து பாராட்டுக்கள் !
மொத்தத்தில் அட்ரா மச்சான் விசிலு … பரபரப்பும் கலகலப்பும் !