எ காமிக் புக் இண்டியா பிரைவேட் லிமிடெட் சார்பில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசை அமைத்து மற்றும் சிலருடன் சேர்ந்து தயாரிக்க,
கோகுல் ஆனந்த், ராஜேஷ் பாலச்சந்திரன் , அஞ்சு குரியன் ஆகியோர் நடிப்பில் அப்பாஸ் அக்பர் எழுதி இயக்கி இருக்கும் படம் சென்னை 2 சிங்கப்பூர்.
டிக்கெட் எடுக்கலாமா ? பேசுவோம் .
தான் நம்பிய தயாரிப்பாளரே கதையைத் திருடி ஏமாற்றிய நிலையில் அவரை அடித்து உதைத்து விட்டு , நண்பனின் உதவியோடு சிங்கப்பூரில் ஒரு தயாரிப்பாளருக்கு கதை சொல்லப் போகும் ஒரு சினிமா உதவி இயக்குனர் ஹரிஷ்க்கு (கோகுல் ஆனந்த் ),
அங்கே ஒரு லோக்கல் டிவி கேமராமேன் வானம்பாடியின் (ராஜேஷ் பாலச்சந்திரன்) நட்பு கிடைக்கிறது .
அதே நேரம் தன்னைப் போலவே வாழ்வில் நொந்து அழும் ஓர் இளம்பெண் ரோஷினியின் (அஞ்சு குரியன்) அறிமுகம் நட்பாகி காதலாகிறது .
வானம்பாடி உதவியுடன் கதை சொல்லப் போன தயாரிப்பாளர் ரசனை இல்லாதவராக இருக்கிறார் .
ரோஷினிக்கு புற்றுநோய் இருப்பதும் அவள் சிகிச்சைக்கு நிறையப் பணம் தேவைப்படுவதும் ஹரீஷ்க்கு புரிகிறது .
எனவே தயாரிப்பாளரின் பணத்தைக் கொள்ளை அடித்து ரோஷினிக்கு உதவப் போக , தயாரிப்பாளர் தன் அடியாட்களுடன் ரோஷினியைக் கடத்த , ஹரீஷ் பணம் கொள்ளை அடித்தது அறிந்த ரோஷினி அவனை வெறுக்க ,
அப்புறம் என்ன நடந்தது என்பதுதான் இந்த சென்னை 2 சிங்கப்பூர்.
கதையை கேட்டால் கொஞ்சம் சாதரணமாகத்தான் தோணும் . ஆனால் ட்ரீட்மென்ட் மற்றும் மேக்கிங்கில் பல பலே பலே ஆச்சர்யங்களை அள்ளித் தெளிக்கும் படம் இது .
சின்னச் சின்ன காட்சிகளைக் கூட அழுத்தமாகப் படமாக்கி நம்மைக் கவர்கிறார் இயக்குனர் .
குறிப்பாக அவரது வசனங்கள்.
அண்மைக் காலமாக தமிழ் சினிமாவில் வித்தியாசமான பார்வையோடு இவ்வளவு சிறப்பான வசனங்கள் வந்தது இல்லை .
உதாரணமாக ”நாம பொறந்ததுக்கு மொத வருஷம் நாம இல்ல . அப்போ நாம செத்துதானே இருந்தோம் . ஆக, சாவில் இருந்துதான் பிறக்கிறோம் . அப்போ சாக ஏன் பயப்படணும்? ” என்ற வசனம், மிகப் பெரிய மன நல மருந்து.
பிரம்மிப்பு . பாராட்டுகள் .
சிங்கப்பூரை அட்டகாசமாகக் காட்டுவதோடு ஒட்டு மொத்த ஒளிப்பதிவிலும் உள்ளம் கொள்ளை கொள்கிறார் கார்த்திக் நல்ல முத்து .
டைட்டில் முதலே ஜிப்ரான் இசை உற்சாகம் .
சிவகார்த்திகேயனையும் அரவிந்தசாமியையும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்தது போல இருக்கும் கோகுல் ஆனந்த் நடிப்பிலும் கவர்கிறார் . எல்லா சோகக் காட்சிக்கும் ஒரே மாதிரி முக பாவமா ? மாத்துங்க தம்பி .
ராஜேஷ் பாலச்சந்திரன் எக்சென்ட்ரிக் நடிப்பு காமெடிக்கு உதவுது .
புற்று நோய் வந்த பெண்ணுக்கு ஏற்ற முகத்துக்கு பொருத்தமாக இருக்கிறார் அஞ்சு குரியன் .
ஆங்காங்கே காமெடிக்கும் பஞ்சமில்லை .
மலேசியத் தமிழ் நடிகர்களின் அந்த பேச்சு வழக்கும் ரசிக்க முடிகிறது .
எனினும் இரண்டாம் பகுதியில் திரைக்கதை தறிகெட்டு அலைகிறது . காமெடி இருந்தாலும் கூட ஒட்டு மொத்த படத்துக்கான ஒரு கூட்டு உணர்வு கிடைக்க மறுக்கிறது . அதுதான் படத்துக்கு பெரிய மைனஸ் .
ஆங்காங்கே எல்லோரும் ஓவராக கத்துவதும் எரிச்சல் .
அந்த future க்கு கொடுத்த சிம்பாலிக் உருவங்களை அப்படியே விட்டு விட்டது ஏன் இயக்குனரே ? கோர்த்து கொண்டு வந்து நிறுத்துவதுதான் படைப்பாளிக்கு உரிய கெத்து .
எனினும்அ ந்த கிளைமாக்ஸ் காமெடி டுவிஸ்ட் செம அசத்தல்
மொத்தத்தில் சென்னை 2 சிங்கப்பூர்.. காமெடி ட்ரிப்
மகுடம் சூடும் கலைஞர்
————————————-
‘ வசனகர்த்தா ‘ அப்பாஸ் அக்பர்