தென்னிந்திய திரைப்பட சின்னத்திரை நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத் தேர்தல் மார்ச் மூன்றாம் தேதி காலை முதல் மாலை வரை சென்னை வடபழனி பரணி ஸ்டுடியோவில் நடை பெறுகிறது .
இதில் ராதாரவி அணி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து போட்டியிடும் ராம ராஜ்யம் அணி சார்பில் துணைத் தலைவர் பதவிக்கு நடிகை ரோகிணி போட்டியிடுகிறார் .
அதுகுறித்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ரோகிணி,
” இதயத்தை திருடாதே என்ற படத்தில் துவங்கி நான் பின்னணிக்குரல் கொடுத்து வருகின்றேன்.
டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் எனக்கு தெரிந்து இதுவரை எந்த பதவிக்கும் தேர்தல் நடந்தது கிடையாது
நானும் அதுபற்றி பெரிதாக எண்ணியது இல்லை .ஆனால் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோமோ என்ற எண்ணம் இப்போது தோன்றுகிறது.
நான் வெளியில் சென்று பார்க்கும்போது விவசாயிகள் பிரச்சினைகள் உட்பட எந்த விதமான பிரச்சினையாக இருந்தாலும் குரல் கொடுக்கும் நான் என்னுடைய துறையில் நடக்கும் பிரச்சினையை நான் கவனிக்கவில்லை என்பது மிகப்பெரிய தவறு என்பதை உணர்கிறேன்.
முதலில் மூத்தவர்கள் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் சரியாக செய்வார்கள் என்ற ஒரு நம்பிக்கை எனக்கு இருந்தது.
அந்த நம்பிக்கையில் தான் நான் மற்ற வேலைகளை கவனித்துவந்தேன்.
ஆனால் மெல்ல மெல்ல முறைகேடுகள் நடைபெறுவதும் , ஊழல் நடைபெறுவதும் இன்னும் நிறைய பின்னணி கலைஞர்கள் வேலை இல்லாமல் திண்டாடி கொண்டிருப்பதையும் பார்த்ததும்,
முதலில் இந்த பிரச்சினையைதான் கவனிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
இந்த ஒரு மாத காலமாக சங்கத்தில் நடந்த அனைத்து முறைகேடுகளையும் தெரிந்து கொண்டேன்.
தெரிந்து கொண்ட பிறகு ‘நாமும் பொறுப்பை எடுத்துக் கொள்வோம். ஒன்றாக பணியாற்றலாம் அனைத்தையும் சரி செய்ய வேண்டும்’ என்ற எண்ணம் தோன்றியது.
வீடு வீடாகச் சென்று டப்பிங் கலைஞர்களை பார்த்த போது அவர்கள் அனைவரும் கூறிய ஓரே விஷயம் என்னவென்றால் நங்கள் டப்பிங் பேசியே ரொம்ப வருடங்கள் ஆச்சு என்பதுதான் .
பாலன் என்ற ஒரு உறுப்பினர் இறந்த பின்பு அவருடைய உறப்பினர் அட்டையைக் கொண்டுவந்து அவருடைய இறுதிச் சடங்கிற்கு தேவையான பணத்தை கேட்டதற்கு மதிக்கவே இல்லை என்றும்,
கடைசியில்ஏ னோ தானோ என்று 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்ததாகக் கூறினர்.
இத்தனைக்கும் ஒவ்வொரு டப்பிங் கலைஞரும் தன் சம்பளத்தில் சில சதவீதங்களை சங்கத்துக்கு கொடுக்கிறார் .
இது போல நிகழ்வுகளைக் கேட்கும்போது மிகவும் கஷ்டமாக இருந்தது.
இந்த நிலை மாறவேண்டும் என்றால் இந்த தேர்தலில் இவர்களுடன் கைகோர்த்து நிற்கவேண்டும் என்று முடிவு செய்தேன் .
இந்த தேர்தலில் நான் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட முடிவு செய்தேன்.
34 வருடங்களில் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் பணம் , கல்வி உதவித் தொகை என பல்வேறு திட்டங்களை வைத்திருந்தாலும் அவர்களுக்கு வேலை இல்லை என்பதை நான் ஓரு கலைஞராக உணர முடிகிறது.
டப்பிங் கலைஞர்கள் அனைவர்க்கும் ஒரு சுழற்சி முறையில் வேலைகள் வர ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
இது தவிர சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் … !
இவை எல்லாம்எ ல்லா உறுப்பினர்களுக்கும் சென்றடைய வேண்டும். அனைத்து உறுப்பினர்களும் வந்து வாக்களிக்க வேண்டும். இனி ஒரு மாற்றம் வேண்டும்.
அந்த மாற்றத்தினால் நன்மை நடக்கும் என்ற நம்பிக்கையில் அனைவரும் வந்து எங்கள் அணிக்கு வாக்களிக்க வேண்டும் ” என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார் .
பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் தாசரதி தன் பேச்சில்,
“திரையில் நடிக்கும் அனைத்து நடிகர், நடிகைகளுக்கு உயிர் கொடுக்கும் அதாவது குரல் கொடுக்கும் கலையில் இடுபட்டுள்ள உறுப்பினர்களைக் கொண்டுள்ள சங்கம் எங்கள் தென்னிந்திய திரைப்பட சின்னத்திரை நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கம்.
அனைத்து நடிகர்களுக்கும் குரல் கொடுக்கும் நாங்கள் சொந்த வாழ்வுரிமையை மீட்கவும் அதை பாதுகாக்கவும் குரல் எழுப்ப முடியாமல் தவித்த நிலையில்,
இன்று வணக்கத்திற்குரிய திரு. G.V. ரத்னகுமார் அவர்களின் பெரும் முயற்சியில் உயர்நீதிமன்றத்தின் மேற் பார்வையில் ஒரு நியாயமான தேர்தலை நோக்கி எங்கள் சங்கம் முன்னேறிச் செல்கிறது.
1983-ல் பதிவு செய்யப்பட்டது தென்னிந்திய திரைப்பட சின்னத்திரை நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கம். அதில் இருந்து பல கட்ட வளர்ச்சிகளையும் கிட்டத்தட்ட நான்கு தலைமுறைகளையும் எங்கள் சங்கம் பார்த்துள்ளது .
திரைத்துறையில் FEFSI கூட்டமைப்பில் உள்ள சங்கங்களில் எங்கள் சங்கமும் ஒன்று. இதில் மற்ற சங்கங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியில் எங்கள் சங்கத்தின் வளர்ச்சியை ஓப்பிட்டு பார்க்கும்போது மிகவும் பின்தங்கியே உள்ளோம் இதுவே உண்மை.
காரணம் என்னவென்றால் மிகவும் பிரபலமான நடிகர், இந்த சங்கத்தின் தலைவராக இருந்தால் மட்டுமே இந்த சங்கம் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என்ற மாயையை 3 தலைமுறைகளாக நம்பவைத்ததுள்ளனர்.
அதை இந்த தலைமுறையிலாவது அதை உடைக்கவேண்டும் எனபது தான் இந்த போராட்டம். மற்ற எல்லா சங்கத்திலும் பெருவாரியாக உறுப்பினர்களுக்கு காப்பீடு, ஓய்வூதியத் திட்டங்கள் உள்ளன.
குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு சங்கத்தில் உறுப்பினராக உள்ள ஒருவர் அவருடைய உறுப்பினர் அட்டையை கொண்டுவந்து சங்கத்திடம் ஒப்படைத்து ஓய்வு பெற விரும்பினால் அவருக்கு தகுந்த மரியாதையை செலுத்தி விழா அமைத்து,
சங்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஒன்றுகூடி கைதட்டி உற்சாகபடுத்தி அவர் மேல் உள்ள அன்பை வெளிப்படுத்தி அவருக்கு ஓய்வு தொகையாக ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கி அவருடைய வாழ்வுரிமையை பாதிக்காத அளவில் பணிகளை செய்யும் சங்கங்களும் உண்டு
டப்பிங்கலைஞர்கள் சங்கதை பொறுத்தவரை இந்த மாதிரியான செயல்கள் நடைமுறையில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இல்லாமல் போனதற்கு காரணமாக இருந்தது சிலபல முறைகேடுகள் .
அந்த முறைகேடுகளை பட்டியலிட்டால் ஒரு புத்தகமே போடமுடியும். . இந்த மாதிரியான முறைகேடுகள் வேறுஎங்கும் நடக்காமல் தடுக்கவேண்டும் என்ற ஒரு எண்ணம்.
டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் கல்வி உதவித்தொகையில் முறைகேடு , சம்பளம் பிடித்தலில் முறைகேடு , மருத்துவ உதவி தொகையில் முறைகேடு , இதுமட்டுமல்லாமல் நல்உள்ளம் படைத்த சில கல்லூரிகள் வருடா வருடம் வழங்கும் குறிப்பிட்ட இலவச கல்லூரி சீட்டுகள் வரைக்கும் முறைகேடுகள்
தட்டிக்கேட்ட அனைவரும் அடக்கமுறைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் ஆளானார்கள். சிலர் சங்க நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்
இந்த மாதிரியான செயல்களில் தொடந்து இப்போது உள்ள பொறுப்பாளர்கள் வருவதால் தென்னிந்திய திரைப்பட சின்னத்திரை நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்க தேர்தலை ” ராம ராஜ்யம் ” அணியாக சந்திக்கவுள்ளோம்.” என்றவர் ,
சங்கத்துக்கான இடம் வாங்கிய வகையில் சுமார் 26 லட்ச ரூபாய் ஊழல் நடந்திருப்பது முதற்கொண்டு , பல லட்சக் கணக்கான ரூபாய் ஊழல் இருப்பதை பட்டியலிட்டார்.
“எந்த விசயத்தையும் முறையாக செய்யாமல் மரபு பற்றி கவலைப் படாமல் இஷ்டத்துக்கு செயல்பட்டுள்ளார்கள்.
ஊழல் மலிந்து கிடக்கிறது சங்கத்தில் ” என்றார், பொருளாளர் பதவிக்குப் போட்டியிடும் நடிகரும் டப்பிங் குரல் கலைஞருமான காளிதாஸ் .
“உங்கள் சங்கத்தில் சேர்வதற்கு ஆர்வம் உள்ள பலரும் அதீத சேர்ப்புக் கட்டணம் காரணமாக உள்ளே வரமுடியாமல் தவிக்கிறார்கள் .
கட்டணம் குறைக்கும் திட்டம் உள்ளதா ?” என்று நான் கேட்டேன் .
“ஆரம்பத்தில் குறைந்த கட்டணம் பெற்று இணை உறுபினராக சேர்த்துக் கொண்டு , பிறகு அவர்கள் தொழிலில் உறுதி பெற்றவுடன் மீதத் தொகை பெறும் திட்டம் உள்ளது ” என்றார்கள் .
நல்லது !