காஸி @ விமர்சனம்

gaasi 1
பிவிபி சினிமாஸ் மற்றும் மேட்னி மூவி என்டர்டெயின்மென்ட் இணைந்த தயாரிப்பில் , ராணா டகுபதி, டாப்சீ, நாசர், ஓம் புரி, அதுல் குல்கர்னி ,கே .கே மேனன் ஆகியோர் நடிக்க

இயக்குனர் சங்கல்ப் ரெட்டி,  தான் எழுதிய ப்ளூ ஃபிஷ் என்ற நாவலை தானே திரை வடிவில் எழுதி இயக்கி இருக்கும் படம் காஸி (GHAZI). போட்ட காசை எடுக்குமா காஸி? பார்க்கலாம் !

இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது இன்றைய பங்களா தேஷ்  ( அதன் அன்றைய  பெயர் கிழக்கு வங்காளம் )  பாகிஸ்தானின் ஒரு பகுதியாகப் போனது .

கிழக்கு வங்காளம் என்ற பெயர் கிழக்கு பாகிஸ்தான் என்று மாறியது ஆனால் இந்தியாவின் மேற்கே உள்ள பாகிஸ்தானுக்கும் , கிழக்கு பாகிஸ்தானுக்கும் நில ரீதியாக நேரடித் தொடர்பு இல்லை .
பாகிஸ்தானில் இருந்து அரபிக் கடல் வழியே தெற்கே வந்து , இந்து மகா சமுத்திரத்தில் நுழைந்து கிழக்கில் போய் வடக்கு நோக்கி வங்காள விரிகுடாவில் பயணித்துதான் மேற்கு பாகிஸ்தானை அடைய முடியும் .

தனக்கு இரண்டு பக்கமும் பாகிஸ்தான் இருப்பது இந்தியாவுக்கு சிக்கலாகவே இருந்தது .

இந்த சமயத்தில் மேற்கு பாகிஸ்தானின் பூர்வகுடி வங்காள மக்களை,சிங்களம் தமிழனத்தை அழித்தது போல,  பாகிஸ்தான் ராணுவம் முற்றிலும் ஒழிக்க முயன்றது ,

sea 2

ஏராளமான தமிழர்களின் ரத்தத்தால் மாபெரும் இந்தியத் தலைவராக உருவான வங்காளியான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ,
தமிழ் நாட்டைச் சேர்ந்த ராமநாதபுரம் அரசர் பாஸ்கர சேதுபதியின் பண உதவியால் சிக்காகோ சென்று புகழ் பெற்ற வங்காளியான விவேகானந்தர்…
இவர்களால் இந்திய அரசியலில் வங்காளிகளுக்கு பெரும் முக்கியத்துவம் ஏற்பட்டு இருந்தது ,

இந்த முக்கியத்துவம் காரணமாக கிழக்கு  பாகிஸ்தானில் அதாவது கிழக்கு வங்காளத்தில் அதாவது இன்றைய பங்களாதேஷில், 

பாகிஸ்தான் ராணுவத்தால் கடும் அடக்குமுறைக்கு ஆளான வங்காள மக்களுக்கு உதவ வேண்டும் என்று  இந்திய வங்காளிகள் விரும்பினார்கள் .
 
இன்றைய மேற்கு வங்காள மாநிலத்தில் அப்போது வாழ்ந்த இந்திய வங்காளிகள் ,

கிழக்கு வங்காளம் என்கிற கிழக்கு பாகிஸ்தானில் பாகிஸ்தானால் அடக்கு முறைக்கு ஆளாகும் தங்கள் தொப்புள் கொடி உறவுகளான வங்காளிகளை காக்க , இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தனர் .

gaasi 2

பாகிஸ்தான் ராணுவத்தால் கிழக்கு பாகிஸ்தான் என்கிற கிழக்கு வங்காளத்தில் அடக்கு முறைக்கு ஆளாகும் வங்காளிகள், இந்தியாவில் உள்ள  மேற்கு வங்காள மாநிலம் வழியே இந்தியாவுக்குள் அகதிகளாக வந்தனர் .

வங்காளிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக கிழக்கு பாகிஸ்தானை பாகிஸ்தானில் இருந்து பிரித்து தனி நாடாக உருவாக்கி   வங்காளிகளுக்கு கொடுத்தது  இந்தியா .

இன்றைய சூழ்நிலையில் இந்தியாவுக்குள் தீவிரவாதிகள், போலி ரூபாய் நோட்டு , போதைப் பொருள்கள் வருவதில் பங்களாதேஷ்க்கு பெரும் பங்கு உண்டு .

பாகிஸ்தானோடு சேர்ந்து இந்த செயல்களை செய்கிறது பங்களாதேஷ் .( 2000  ரூபாய் நோட்டு களேபரத்துக்கு ,
பங்களாதேஷ் மூலம் பாகிஸ்தானால் இந்தியாவுக்குள் அனுப்பப்பட்ட டூப்ளிகேட் ஐநூறு  ரூபாய் ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கும் பங்கு உண்டு )

எனினும் இன்றும் மேற்கு வங்காள மாநில மக்களுக்கு பங்களா தேஷ் மீது மாறாத பாசம் உண்டு.

சில பல வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மம்தா பானர்ஜி அமைச்சராக பதவி ஏற்கும் தினத்தில், பங்களா தேஷில் வெள்ளம் வந்து பலர மாண்டனர் .

அப்போது மம்தா பானர்ஜி ” என் இன மக்கள் பக்கத்து தேசத்தில் (அது இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தேசமாக இருந்தாலும் ) வெள்ளத்தால்  சாகும்போது ,

gazi 1
என்னால் சந்தோஷமாக பதவி ஏற்க முடியாது ” என்று சொல்லி துக்கம் அனுஷ்டித்து விட்டு,  சில நாட்கள் கழித்து அப்புறம் போய் பதவி ஏற்றார் .
கிழக்கு வங்காளம் என்கிற கிழக்கு பாகிஸ்தான் என்கிற இன்றைய பங்களாதேஷில் பூர்வ குடி மக்களான வங்காளிகளுக்கு ஏற்பட்டதை விட பெரும் அராஜகம் .
இலங்கையில் அதன் பூர்வகுடி மக்களான  ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட போது, இதே நமது இந்திய தேசம் எப்படி வஞ்சகத்தனமாக நடந்து கொண்டது ;
நம்ம ஊர் அரசியல் வியாதிகள்  எப்படி டெல்லியில் பதவிப் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தார்கள் என்பதை நாம் ரத்தச் சுவடுகளாக நினைவில் வைத்துக் கொண்டு இருக்கிறோம் .

எதற்கு இவ்வளவு விளக்கம், என்றால் …

அப்படி கிழக்கு பாகிஸ்தானில் வங்காளிகளை அழித்துக் கொண்டு இருந்த ராணுவத்துக்கு ஆயுதம் கொடுக்க 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தான் முயன்றபோது–

இந்திய பாகிஸ்தான் போருக்கு காரணாமான அமைந்ததாக –  விசாகப் பட்டினம் பகுதியில் நடந்ததாக-  கூறப்படும் ஒரு சம்பவமே இந்த காஸி படம் .

gaasi 4
காஸி என்பது  பாகிஸ்தானுக்கு அமெரிக்கா 1963 ஆம் ஆண்டு கொடுத்த  சக்தி வாய்ந்த நீர் மூழ்கிக் கப்பல். 1945 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இந்தக் கப்பல் உருவாக்கப்பட்டது .

அமெரிக்க கப்பற்படையில் USS Diablo (SS-479) என்ற பெயரில் 1963 ஆம் ஆண்டு வரை  இருந்த இந்தக் கப்பலை அமெரிக்காவிடம் இருந்து லீசுக்கு வாங்கிய பாகிஸ்தான் அதற்கு காஸி என்று பெயர் வைத்தது

அரேபிய மொழியில் காஸி என்றால் இஸ்லாத்தைக் காக்கும் வீரன் என்று பொருள் . அப்போது இந்தியாவிடம் இருந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை .

1971 ஆம் ஆண்டு வங்காள விரிகுடா கடலில்  மேற்படி காஸி மூழ்கி அழிந்து போனது. ”அதை தகர்த்து மூழ்கடித்தது இந்திய நீர் மூழ்கிக் கப்பலான ஐ என் எஸ் ராஜ்புத்”  என்று அப்போது இந்திய ராணுவம் சொன்னது  

ஆனால் பாகிஸ்தான் ராணுவமோ “இல்லை இல்லை … கப்பலுக்குள் நடந்த வெடிப்பு காரணமாகவோ , விசாகப் பட்டினம் கடல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த நீர்க் கண்ணி வெடிகள் வெடித்தோதான் எங்கள் கப்பல் அழிந்தது ” என்கிறது .

 (இந்த காஸி படத்தில் காஸி கப்பலில் உள்ள  பாகிஸ்தான் கப்பற்படையினர்,  கண்ணி வெடிகள் மூலம் இந்திய நீர் மூழ்கிக் கப்பலை அழிக்க முயன்று அந்த முயற்சியில் தோற்பதாக காட்சி வருகிறது )

நிஜமான காஸி கப்பல்
நிஜமான காஸி கப்பல்

இரண்டு தரப்பிலும் அல்லாத பொதுவான நாடுகளோ,  ”காஸி வெடித்து அழிந்தபோது ஐ என் எஸ் ராஜ்புத் விசாகப்பட்டினம் கடற்கரையில்தான் இருந்தது ”என்றே கூறுகின்றன .

”எப்படிப் பார்த்தாலும் காஸியின் அழிவு என்பது  1971  ஆம் ஆண்டு நடந்த இந்திய பாகிஸ்தான் போரின் அவிழ்க்கப் படாத பெரிய புதிர்களில் ஒன்று ” என்றே இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

ஆனால் காஸியை கடலுக்குள் தாக்கி அழித்தது,  விசாகப் பட்டினத்தில் இருந்து போன S21 எனப்படுகிற INS Karanj என்ற நீர் மூழ்கிக் கப்பல்தான் என்று சொல்கிறது  இந்த காஸி படம்

INS kursura என்ற நீர்மூழ்கிக் கப்பல் விசாகப் பட்டினம்  ராமகிருஷ்ணா மிஷன் பீச்சிலும் INS kalvaari என்ற நீர்மூழ்கிக் கப்பல் விசாகப் பட்டினம் மியூசியத்திலும் இருக்கிறது .
ஆனால்காஸி படம்  INS Karanj என்ன ஆனது ; இப்போது அதன் நிலை என்ன என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை
இப்போது இந்த படம் சொல்லும் கதைக்கு வருவோம் கிழக்கு பாகிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் படைகளுக்கான ஆயுதங்களை சுமந்து கொண்டு,
 நிஜமான ஐ என் எஸ்  கிரஞ்ச்  கப்பல்
நிஜமான ஐ என் எஸ் கிரஞ்ச் கப்பல்
காஸி என்ற அந்த நீர்  மூழ்கிக் கப்பல் அரபிக் கடல் வழியே இந்தியக் பெருங்கடலைக் கடந்து வங்காள விரிகுடா கடலுக்குள் நுழைகிறது.

கிழக்கு பாகிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் படைகளுக்கு,  எந்த வகையிலும் பாகிஸ்தான் ராணுவம் ஆயுதங்களைத்  தாராமல் தடுக்கும் பணி இந்திய கப்பல் படைக்கு தரப்படுகிறது .

நீர் மூழ்கிக் கப்பல் மூலமே ஆயுதம் அனுப்ப பாகிஸ்தானால் முடியும் என்ற நிலையில் விசாகப்பட்டினத்தில் இருந்து ஐ என் எஸ் கரஞ்ச் நீர் மூழ்கிக் கப்பல்  வங்காள விரிகுடா கடலுக்குள் ரோந்து சொல்கிறது .

கப்பலுக்குள் முதன்மை தலைமை அதிகாரியாக  ஒரு சீக்கியர் (கே கே மேனன் ) இரண்டாம் நிலை முதன்மை அதிகாரியாக ஒருவர் (ராணா டகுபதி) , இருவரையும் ஒருங்கிணைக்கும் அதிகாரி ஒருவர் (அதுல் குல்கர்னி)

எந்த நிலையிலும் முதன் முதலில் நாம் தாக்குதல் நடத்தக் கூடாது என்பது இந்திய அரசின் முடிவு . அதற்கு பொறுப்பு இரண்டாம் நிலை முதன்மை அதிகாரி .

ஆனால் முதன்மை நிலை தலைமை அதிகாரியான சீக்கியர் நேர் மாறு . முந்தைய போரில் இந்திய அரசின் இதே கட்டுப்பாடு காரணமாக  தன் மகனை கொடூரமாக இழந்தவர் அவர்

09Fir07.qxp

எனவே பாகிஸ்தான் கப்பலை பார்த்தால் ‘உடனே தாக்குதல்தான்’ என்பது அவரது திட்டம் .

இவர்களுக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் ஏற்படும் சில பிரச்னைகள்  ஒரு வழியாக தீரும் நிலையில் ,  சீக்கிய அதிகாரியின் பாணியில் இரண்டாம் நிலை முதன்மை அதிகாரி ஒரு முடிவு எடுக்கிறார் .

அதன் விளைவாக அங்கே கடலுக்குள் முன்னேறும் காஸி கப்பல் வைக்கும் நீர்க் கண்ணி வெடி ஒன்றில் மோதி,  ஐ என் எஸ் கரஞ்ச் கப்பல்  பலத்த சேதம் அடைந்து டைட்டானிக் போல கடலுக்குள் மூழ்கித்  தரை தட்டுகிறது .

விசாகப் பட்டினத்தை தாக்கி அழிக்க காஸி திட்டமிடுகிறது .

பெரும் போராட்டத்துக்கு பிறகு கடலுக்குள் இருந்து சேதாரம் அடைந்து இருக்கும்   ஐ என் எஸ் கரஞ்ச் மேலே வர, விசாகப்பட்டினத்தை  தாக்கும் முன்பு ஐ என் எஸ் கரஞ்ச் கப்பலை  அழிக்க,  எந்தக் குறையும் இல்லாத சக்தி வாய்ந்த  காஸி கப்பல் முயல ,

அப்புறம் என்ன நடந்ததே என்பதுதான் இந்த படமான  காஸி .

சும்மா சொல்லக் கூடாது . இதுவரை இந்திய சினிமா கண்டிராத திரை அனுபவம்!

இந்தியாவின் முதல் ஆழ்கடல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் படமாக வந்துள்ளது காஸி. அந்தப் பெருமைக்கு மாசு ஏற்படாத வகையில் படமாக்கலில் அசத்தி இருக்கிறார்கள் .

gasi-5

நீர் மூழ்கிக் கப்பல் கடலுக்குள் பயணிப்பது , ஒரு நீர் மூழ்கிக் கப்பலில் இருந்து இன்னொரு நீர் மூழ்கிக் கப்பலை நோக்கி  டார்பிடோ எனப்படும் நீர் மூழ்கி ராக்கெட் குண்டுகள் பாய்வது …

இவை எல்லாம்  அட்டகாசமான ரசனை அனுபவம் .

சீக்கிய அதிகாரி ராணுவத் தலைமையகத்தின் உத்தரவுக்கு முன்பே தாக்குதல் நடத்த விரும்புவதற்கான காரணத்தை சொல்லும் இடத்தில் திரைக்கதையாளர் சங்கல்ப் ரெட்டியும் , 

“வீரம் என்பது போரில் மரணம் அடையறது இல்ல, எதிரியைக் கொல்றது ” என்பது உள்ளிட்ட பல இடங்களில் வசனகர்த்தா சங்கல்ப் ரெட்டியும் (தமிழில் மணிகண்டன்) ,

”மொத்தக் கப்பலும் அதிரும் . கீழ விழாம இருக்க எதையாவது கெட்டியா புடிச்சுக்குங்க” என்ற அறிவிப்பின் போது ,

ஓர் அதிகாரி கையில் உள்ள சிறிய இந்தியக் கொடி டாலரைப் பிடித்துக் கொள்வது போன்ற இடங்களில் டைரக்டர் சங்கல்ப் ரெட்டியும் ஜொலிக்கிறார்கள் .

நீர் மூழ்கிக் கப்பல் கடல் மட்டத்தின் மேலே இருந்து கடலுக்குள்ளே மூழ்கி நீந்தத் துவங்கும் நொடி…. கப்பலுக்குள் இருக்கும் அதுல் குல்கர்னி தலையை தூக்கி சீலிங்கை பார்ப்பது ,

gasi-4
அடடா ! அட்டகாசமான டைரக்டோரியல் டச் !

இந்தப் படத்தை மிக அட்டகாசமாக உருவாக்கியதில் மிக சிறப்பான பங்கு , நம்ம ஊரு ஒளிப்பதிவாளர் மதிக்கு இருக்கிறது .

மதியின் ஒளிப்பதிவு,  லைட்டிங்  போன்றவை நாம் பார்ப்பது சினிமா அல்ல . நிஜம் என்ற உணர்வை கொடுக்கிறது .
பெரிசாக இழுத்துப் போட்டுக் கொள்ளாமல் டைட்டான பிளாக்குகளில் அரங்கச் செலவு அதிகமாக இல்லாமல் படமாகும்படி முடிந்தவரை சிக்கனமாக இயங்கி இருக்கிறது ஆர்ட் டைரக்ஷன் .

ஆனால்  கிராபிக்ஸ் ஆசம் அட்டகாசம் . கடலடிக் காட்சிகள் மிகப் பிரம்மதமகப்  படமாக்கப்பட்டு உள்ளன
பாடல்கள் இல்லாத நிலையில் பின்னணி இசையில் திகில் திரில் கூட்டி இருக்கிறார் இசை அமைப்பாளர் கே .

சீக்கிய அதிகாரியாக வரும் கே கே மேனன் நடிப்பில் அசத்தி இருக்கிறார் .

பதவிக்கு உரிய மிடுக்கு , ஹீரோயிசம் என்று எல்லா ஏரியாவிலும் ஸ்கோர் செய்து சபாஷ் வாங்குகிறார் ராணா. அதுல் குல்கர்னியும் ஒகே

காஸி கப்பலின் பாகிஸ்தான் கமாண்டராக வரும் குணால் கௌசிக் (?)  நடிப்பில் அசத்தி இருக்கிறார்

கிழக்கு வங்காளத்தில் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி அல்லல் படும் வங்காள அகதியாக டாப்ஸி.  குறைவான காட்சிகள் என்றாலும் வங்காளித் தோற்றத்தில் அருமை .

gaasi 3

படம் துவங்கிய ஐந்தாவது நிமிடம் சீட்டின் நுனியில் உட்கார்ந்து பார்க்க ஆரம்பிக்கிறோம் . இடைவேளையில்  எழ மனம் இல்லாமல் எழுகிறோம் . மீண்டும் ஆர்வத்துடன் அமர்ந்தால் ,

இரண்டு நீர் மூழ்கிக் கப்பலுக்கும் இடையே டார்பிடோக்கள்  சீரும் காட்சிகளால் இதயத்தை உடலுக்கு வெளியே துடிக்க வைக்கிறார்கள். கிரேட் !

இரண்டாம் பகுதியில் கப்பல்களுக்கான மோதல் மட்டுமே படமாகப் போய்விடுவதால் திரைக் கதையின் விஸ்தீரணம் குறைகிறது . அது ஒரு குறையே .

பிடிப்புக்கு தேசியக் கொடி டாலரை  ஒரு அதிகாரி பிடிப்பது போன்ற, லிட்டில் டீட்டெயில் காட்சிகளை சிறு சிறு கிளைக் கதைகளை இரண்டாம் பகுதியில்  சேர்த்து, 

படத்தின் கனத்தை இன்னும் அதிகப் படுத்தி இருக்க வேண்டும்.

காஸி கப்பலின் கேப்டன் ‘சென்னை அல்லது விசாகப்பட்டினத்தைத் தாக்கலாம்’ என்று சொல்கிறார் . அன்றைய நிலையில் விசாகப் பட்டினத்தை விட முக்கிய துறைமுகமாக இருந்த சென்னையை விடுத்து, 

விசாகப் பட்டினத்தை அவர்கள் தேர்ந்தெடுத்தது ஏன் ? அதை படத்தில் சொல்லவில்லை .

gasi-1

அதிலும் கூட விசாகப்பட்டினததை தாக்கப் போகிறோம் என்று சும்மா வசனத்தில்தான் சொல்கிறார்களே தவிர, , அதை நோக்கி திரைக்கதை திருப்பப் படாத காரணத்தால், 
ஒரு முக்கியமான பரபரப்பும் பதைபதைப்பும் படத்தில் மிஸ் ஆகிறது .

இந்திய தேசப் பற்றை வலியுறுத்தும் இந்தப் படத்துக்கு காஸி என்று பாகிஸ்தான் கப்பலின் பெயரை வைத்தது ஏன் என்ற கேள்வி வருகிறது .

ஒரு சென்சேஷனுக்குதான் என்றால் , காஸி கப்பலின் சக்தி என்ன ? அது எந்த வகையில் சக்தி வாய்ந்த ஆபத்தான கப்பல்? என்பதை எல்லாம் படத்தில் சொல்லி,

மிரட்டும் படியான காட்சிகளை படத்தில் வைத்து இருக்க வேண்டாமா? . 

காஸி கப்பலின் பலம் படத்தில் விவரிக்கப் படவே இல்லை . அதை விவரித்தால்தனே , அதை எப்படி நமது கப்பல்  சமாளிக்கப் போகிறது என்ற பதட்டம் அதிகரிக்கும் !

படத்தின் கதைப்படி எஸ்  21 கப்பல் காஸியை அழித்து விட்டு வெற்றிகரமாக விசாகப் பட்டினத்தை அடைந்து விட்டதாக படம் சொல்கிறது .

gasi-2
ஆனால்  காஸியை அழித்த இந்த கப்பல்படை வீரர்களின் சாதனை வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்டு விட்டது என்று சொல்லப்படுவதன் காரணம் என்ன ?
அந்தக் காரணம் படத்தில் இல்லை  (மேற்படி எஸ்  21 கப்பல் என்ன ஆனது என்ற குறிப்பே இப்போது இல்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது

இப்படி சில குறைகள் , நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் இருந்தாலும் ….

ஒரு படமாகப் பார்க்கையில் காஸி ஏற்படுத்தும் பிரம்மிப்பு  அசாதாரணமானது . அபாரமானது .

பள்ளிப் பாடத்தில் நீர் மூழ்கிக் கப்பல் என்ற வார்த்தையை மட்டும் படிக்கும் குழந்தைகளுக்கு இந்தப் படத்தைக் காட்டினால் நீர் மூழ்கிக் கப்பல் என்றால் என்ன என்று புரிந்து ரசித்து வியப்பார்கள்

அந்த வகையில் யாராலும் தவிர்க்க முடியாத படம் காஸி .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *