மரம் மூவீஸ் மற்றும் பரணி மூவீஸ் சார்பில் குமார் டி எஸ் மற்றும் கே. ராமராஜ் ஆகியோர் தயாரிக்க,
ரகுமான், அகில், கவுரி நந்தா, சுரேந்தர் , மோனிகா , கருத்தம்மா ராஜ ஸ்ரீ ஆகியோர் நடிப்பில்,
ராம் கே சந்திரன் எழுதி இயக்கி இருக்கும் படம் பகடி ஆட்டம் . ரசிகர்கள் மனசில் வெற்றி ஆட்டம் போடுமா இந்தப் பகடி ஆட்டம் படம்? பார்க்கலாம்
பணக்கார வீட்டு இளைஞன் ஒருவன்( சுரேந்தர்), ஒரு மதுபான விடுதியில் ஓர் இளம்பெண் மீது கை வைக்க , அவளது காதலனுக்கும் (அகில் ) , இளைஞனுக்கும் தகராறு வருகிறது .
இந்த பெண் மீது கை வைத்து மட்டுமல்ல , அந்த பணக்கார இளைஞன் பல பெண்களை காதல் என்ற பெயரில் காம வலையில் வீழ்த்தி ஏமாற்றுபவனாகவும் இருக்கிறான்.
அப்படி பாதிக்கப்பட்ட பெண்களில் …..
அப்பா இல்லாத வீட்டில் ஆட்டோ ஓட்டும் அக்காவின் (கவுரி நந்தா) மற்றும் அம்மா (ராஜ ஸ்ரீ) ஆகியோரின் ஆதரவில் வளர்ந்து பள்ளிப் பொதுத் தேர்வில் நிறைய மதிப்பெண் எடுத்து,
பெரிய வேலைக்குப் போகும் கனவோடு, மேற்படிப்பில் காலடி எடுத்து வைத்த இளம்பெண் ஒருத்தியும் (மோனிகா ) உண்டு .
இவன் அந்தப் பெண்ணை சமயம் பார்த்து படுக்கையில் வீழ்த்தி, ஒரு கேவலமான காரியம் செய்ய , அடுத்து ஒரு பெரும் விபரீதம் நிகழ்ந்திருக்கிறது .
இந்த நிலையில் அந்த காமுகனை யாரோ பிடித்து, ஒரு எட்டடிக்கு நான்கடி அளவிலான பெட்டியில் அடைத்து வைக்கிறார்கள் .
அவன் செல்போனுக்கு ஒரு ஆண் குரல் அடிக்கடி போன் செய்து ”நீ செய்த எந்த பாவத்துக்கான தண்டனை இதுஎன்று நீயே கண்டு பிடி”’ என்று சொல்கிறது .
இந்த நிலையில் , அந்த காமுகன் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துக் காப்பாற்ற காவல் துறை முயல்கிறது . அவனைக் காப்பாற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் ( ரகுமான்) முயல்கிறார் .
அவனை அடைத்து வைத்தது யார் ? எங்கே ? எந்த பாவத்துக்காக ? அவனை போலீசால் காப்பாற்ற முடிந்ததா? இல்லையா? முடிந்தது எனில்அப்புறம் என்ன ? இல்லை எனில் நடந்தது என்ன ? என்பதே இந்த படம் .
ஏழ்மையில் வாழ்ந்து கஷ்டப்பட்டு பள்ளிப் படிப்பை முடித்து மேற்படிப்பை நோக்கி முன்னேறும் பெண்களை, சில பணக்கார இளைஞர்கள் ஜஸ்ட் லைக் தட் மயக்கி வீழ்த்தி ,
அந்தப் பெண்களின் வருங்காலததையே அழிப்பதை அழுத்தமாக சொல்கிறது படம் . பாராட்டுகள் இயக்குனருக்கு !
இன்றைய பணக்கார இளைஞர்கள் பலரின் மோக வலை , அதற்கு பெண்கள் மயங்கும் சூழல் ,
இன்னொரு பக்கம் ஒன்றுக்கும் மேற்பட்ட காதலன் அல்லது ஆண் நண்பர்களை வைத்திருக்கும் சில பெண்கள் , அவர்களது செயல்பாடுகள் ,
தன் பிள்ளைகளை பெற்றோர்கள் கண் காணிக்க வேண்டிய அவசியம் ,
இவற்றை போலீஸ் அதிகாரி கேரக்டர் மூலம் மனம் பதைக்க சொல்லும் வகையில் கவனம் கவர்கிறார் இயக்குனர் ராம் கே சந்திரன் .
அவர் எழுதி இருக்கும் வசனங்களும் அருமை . ” எதுக்கும் தயாரான பொண்ணுங்களோட என்ன வேண்ணாலும் பண்ணித் தொலைங்கடா . படிக்கவர்ற பொண்ணுங்களை விட்டுடுங்கடா ”
– என்ற ரீதியிலான வசனம் இதயத்தின் சுவர்களில் எதிரொலிக்கிறது .
கிருஷ்ண சாமியின் ஒளிப்பதிவு காட்சிகளை யதார்த்தமான நிகழ்வுகள் போல உணர வைக்கிறது சபாஷ் .
கார்த்திக் ராஜாவை மியூசிக் டைரக்டராகப் போட்டால் இளையராஜாவின் பாடல்களை அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம் போல இருக்கிறது. இரண்டு பாடல்களை அப்படி பயன்படுத்தி இருக்கிறார்கள் .
போலீஸ் அதிகாரியாக ரகுமான் சிறப்பாக வலம் வருகிறார் . துருவங்கள் பதினாறு இமேஜ் அதற்கு ரொம்ப உதவுகிறது .
ஆட்டோ ஓட்டும் அக்காவாக வரும் கவுரி நந்தா கேரக்டரை உணர்ந்து எமொஷனலாக நன்கு நடித்துள்ளார் . சுரேந்தர் காமுகன் கேரக்டரில் சிறப்பு , மோனிகாவும் ஒகே .
போனில் இருக்கும் வசதிகள் பற்றி ஆரம்பத்தில் ஒரு காட்சியில் விளக்கமாக கூறுவதால் கடத்தி வைத்துள்ளது யார் என்பதை இயல்பாக ஊகிக்க முடிகிறது .
அந்த காட்சியை தவிர்த்து பின்னர சஸ்பென்ஸ் திறக்கப்படும் இடத்திலேயே அதை விளக்கி சொல்லி இருக்கலாம் .
நல்லா படிச்சு முன்னேறப் போன பெண், அந்தப் பையனைப் பார்த்ததும் தொபக்கடீர் என்று காதலில் குதிப்பது அநியாயம் .
இப்படி சொல்வதற்கு மாறாக , அவள் காதலிக்கவில்லை . ஆனால் காதலிக்க மறுத்த அவளை அவன் நட்பு ரீதியாக பழகி மயக்கி ஏமாற்றினான் என்று சொல்லி இருக்கலாம்.
அடைக்கப்பட்ட பெட்டியில் ஒரு லைட்டர் அவ்வளவு நேரம் எரியும் போது ஆக்சிஜன் வேகமாக குறைந்து அவன் மூச்சு முட்டி சீக்கிரமே இறந்து விடுவானே .
அதுபோல அவன் அடைக்கப்பட்ட பெட்டி இருக்கும் இடத்தில் செல்போன் சிக்னல் கிடைக்குமா ?
என்பது போன்ற ஓரிரு லாஜிக் கேள்விகள் வரத்தான் செய்கின்றன.
ஆனால் இயக்குனர் சமூக அக்கறையோடு ஒரு படத்தைக் கொடுத்து இருப்பதால் , இது போன்ற குறைகளை மறந்து விடலாம் .
கடைசியில் காவல்துறை அதிகாரியும் காமுகனை அடைத்து வைத்திருக்கும் நபரும் சந்திக்கும் காட்சி மனிதம் .அருமை! நெகிழ்வு .
பகடி ஆட்டம் இன்றைய சூழ்நிலையில் மிக அவசியமான ஒரு கதை .