ஹிட் 3 கேஸ் @ விமர்சனம்

வால் போஸ்டர் சினிமா மற்றும் யுனாநிமஸ் புரடக்ஷன்ஸ் சார்பாக பிரசாந்தி திபிர்னேனியோடு சேர்ந்து நடிகர் நானி தயாரித்து நாயகனாக நடிக்க, ஸ்ரீநிதி ஷெட்டி, சமுத்திரக்கனி, சூர்யா சீனிவாஸ், மற்றும் பலர் நடிக்க, சைலேஷ் கோலானு இயக்கி தெலுங்கில் வந்திருக்கும் படத்தின் தமிழ் மொழி மாற்று வடிவம். 

இரண்டு பேரை கொடூரமாக கழுத்தை அறுத்துக் கொன்று அதை வீடியோ எடுக்கும் நபராக அதுவும் போலீஸ்காரராக அறிமுகம் ஆகிறார் நானி.

வில்லனா என்றால் அவர் கொல்லும் நபர்கள்தான் வில்லன்கள். 

சரி…  கழுத்தறுத்துக் கொடூரமாகக் கொல்லக் காரணம்  என்னவென்றால்  இப்படி கொலை செய்யும் நபர்கள் எல்லாரும் ஒன்று கூடி வருடம்,  ஒரு முறை அப்பாவி மக்களை பிடித்து விதம் வித கொடூரமாக அறுத்து வெட்டி அடித்து உடைத்து நசுக்கி கிழித்துக் கொலை செய்து அதை கும்பலாக பார்த்து ரசிப்பார்கள் . 

அந்த குழுவில் இணைய வேண்டுமானால் இரண்டு பேரை கொடூரமாகக் கொலை செய்து அதை டார்க் வெப் மூலம் குறிப்பிட்ட வெப் சைட்டில் ஏற்றினால் அட்மின் அப்ரூவல் கொடுத்து பிறகுதான் அந்தக் குழுவில் சேர முடியும் . நானி கொன்ற நபர்கள் சிறுமி பாலியல் பலாத்காரக் குற்றவாளிகள் .

பல அப்பாவிகளைக் கடத்திக் கொடூரமாக கொல்லும் அந்தக் கூட்டத்தில் தானும் இணைந்து அவர்களை ஒட்டுமொத்தமாக ஒழிக்க அந்த வருடாந்திர  கொலைக் கூடலுக்குப் போகும் நாயகனுக்கும் அவனது காதலியான பெண் போலீஸ் அதிகாரிக்கும் (ஸ்ரீநிதி ஷெட்டி) என்ன நடந்தது என்பதே படம் . 

படத்தின் ஆரம்பம் .. நேர்க்கோட்டில் போகும் அந்த திரைக்கதை டிராவல் , கொடூரக் கொலைகளுடன் நாயகனை அறிமுகப்படுத்தி  விட்டு பின்னர் அதை ஏற்கச் செய்யும் திரைக்கதை லாவகம், திட்டமிட்டுக் காதலிக்கும் பெண் போலீசின் ஃபிளாஷ் பேக் யாவும் அருமை .

நானியின் திரை ஆளுமை ,, சானு ஜான் வர்கீசின் ஒளிப்பதிவு , லொக்கேஷன் , கலை இயக்கம் யாவும் சிறப்பு . 
ஆனால் படத்தின் ஆரம்பம் முதல் யாராவது யாரையாவது கோழி அறுப்பதை விட சகஜமாகக் கரகரவென அறுத்துக் கொண்டே இருப்பதும்  படத்தில் பின்னணியில் தண்ணீரை விட ரத்தம் அதிகம் ஓடுவதும் கொடுமை . 
அதுவும் கடைசி அரை மணி நேரத்தில் ரத்தப் புட்டு, ரத்தப் பொரியல், ரத்தக் கூட்டு, ரத்த அவியல், ரத்த சாம்பார், ரத்த ரசம், ரத்த பச்சடி, ரத்த சட்னி, ரத்த தொக்கு, ரத்த ஊறுகாய் , ரத்த ஜூஸ், ரத்த மில்க் ஷேக் எல்லாம் வைக்கிறார்கள் (லிஸ்ட் இன்னும் நீளும்) 

அதுவும் ஒரு பச்சைக் குழந்தையை அப்படி அந்த ரத்த வெறிக் கூட்டம் கொல்ல முயலும் காட்சிகள் எல்லாம் ஐயோ சாமி.. 

கேட்டால் இதுவும் ஒரு ஜானர் சார் என்பார்கள் . என்ன ஜானரோ என்ன கருமமோ . 

தியேட்டரை விட்டு வெளியே வந்த உடன் வாஷ் பேசினில் கை கழுவத் தோன்றியது . 

எளிய புன்னகையோடு , குழநதைகள் முதல் பெரியவர்கள் வரை வித்தியாசமான கதைகள் மூலம் கவர்ந்த அந்த நானி  இனி வருவாரா? இல்லை ரத்தக் குளத்தில் மூழ்குவாரா?

HIT THE THIRD CASE … BLOOD BATH 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *