2D என்டர்டைன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் சார்பில் ஜோதிகா , சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க,
சூர்யா, பூஜா ஹெக்டே , ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் மற்றும் இரண்டு டஜன் நடிகர்கள் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கி இருக்கும் படம்.
ரெட்ரோ (RETRO) என்பது அடிப்படையில் ஒரு பிரஞ்சு வார்த்தை . பின்னோக்கி நகர்தல் என்பது நேரடி அர்த்தம்.
1972 ஆம் ஆண்டில் புழக்கத்துக்கு வந்த இந்த வார்த்தை- மிக சரியாக சொல்வது என்றால்- 1990 வரை உருவான புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் நாகரீகப் பழக்க வழக்கங்ங்களைக் குறிக்கும் சொல்.
பிறகு இது ‘முந்தையது’ என்ற பொதுப் பொருளுக்கு வந்தது .
பிரபல தாதா ( ஜோஜு ஜார்ஜ்)வின் மனைவியின் (ஸ்வாசிகா) சகோதரன் (தீனா) , மாமன் மீது கொண்ட பகையால் அவன் நிறுவனத்தில் பணியாற்றும் ஆட்களைக் கொன்று ஒரு ஒரு பெரிய கொள்ளையிலும் இறங்க, பலர் கொல்லப்படுகின்றனர்.
அதில் இறந்து கிடக்கும் ஒருவனின் அருகில் ஓர் அழகான குழந்தை இருக்க, அந்த குழந்தையை எடுத்து வளர்க்க ஆசைப்படுகிறாள், தாதாவின், குழந்தை இல்லாத மனைவி. தாதாவுக்கு பிடிக்கவில்லை என்றாலும் மனைவிக்காக சம்மதிக்க , அவன் வயிற்றில் உள்ள வேல் போன்ற அடையாளம் காரணமாக அவனுக்கு பாரிவேல் கண்ணன் என்று பெயரிட்டு வளர்க்கிறாள் அவள்.
கொலையை பார்த்த அதிர்ச்சியில் பாரிவேலுக்கு எந்த சூழ்நிலையிலும் மனோ நிலையிலும் சிரிப்போ புன்னகையோ வராத குறைபாட்டுக்குப் போய் விடுகிறான்.
பின்னர் தாதாவுக்கும் மனைவிக்கும் ஒரு குழந்தை பிறக்க, தாதா பாரியை மேலும் வெறுக்க, அம்மா மட்டும் மாறாத பாசத்தோடு இருக்கிறாள் .
ஒரு நிலையில் அம்மா செத்துப்போக , அவளை காசியில் எரிக்கும்போது அங்கு வரும் கன்னட சிறுமி, அம்மா சொன்ன வார்த்தைகளையே சொல்கிறாள் .
வளரும் பாரி அப்பாவின் எதிரிகளை பந்தாட , அவனை வாய் வார்த்தைக்கு மகனாக அங்கீகரிக்கிறான் தாதா .
பாரி இளைஞனாக ( சூர்யா) காசியில் பார்த்த சிறுமியை இளம்பெண்ணாகப் பார்த்து ( பூஜா ஹெக்கடே) காதல் கொள்கிறான் .
அவளது ஆசைப்படி அடிதடி குற்றச் செயல்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு காதல் மனைவியோடு நிம்மதியாக வாழ நினைக்க , அதை மறுக்கும் தாதா அப்பா , பல ஆயிரம் கோடி மதிப்புள்ள வஸ்து அல்லது வஸ்துக்களை கொடுத்து விட்டுப் போகச சொல்ல , பாரி மறுக்க, கதை அந்தமான் போன்ற ஒரு தீவுக்கு மாற , அங்கே சிரிப்பு டாக்டர் என்ற பெயரில் ஜெயராமும் நாயகன் கூடவே வர, அங்கே ஒரு சர்வாதிகார அரசன் போன்ற மிராஸ்தார் , அவனது ஆல் டைம் போதை சைக்கோ மகன் ,
அந்தத் தீவில் காலகாலமாக உழைக்கும் கறுப்பின மக்களைக் கொல்ல , வெள்ளையர்களுடனான கொடூர சண்டை, தோற்றவனை கொடூரமாக கொல்லும் போட்டி , பல ஆயிரம் கொடுத்து அதைப் பார்த்து ரசிக்கும் போதை நிறைந்த வெள்ளைக்காரக் கூட்டம் என்று எதையாவது எழுதி எங்கயாவது போய் எப்படியாவது படத்தை முடித்தால் அதுதான் ரெட்ரோ.
படத்தில் முதலில் கவர்வது அட்டகாசமான அழகான அசத்தலான சூர்யா . எல்லா இடங்களிலும் எல்லா விதங்களிலும் கவர்கிறார் .ஆ ஊ என்றால் படத்தில் அடுத்தடுத்து வரும் சண்டைகளை பார்க்க முடிகிறது என்றால் அதற்குக் காரணம் சூர்யா . .
படத்தின் டைட்டில் துவங்கி டைட்டில் முடிவதற்குள் ஒரு அழகான நறுக்கான கதையை (கொஞ்சம் பழைய கதைதான் என்றாலும்) சொல்கிறார் கார்த்திக் சுப்புராஜ். அழகு .
கனிமா பாடல், அதன் முன்னும் பின்னும் இடையிலும் வரும் காட்சிகள் , அவை ஒன்று கலந்து இருக்கும் விதம் , சிங்கிள் ஷாட் மேக்கிங் , ஷெரிப்பின் நடன அசைவுகள், இடையிடையே வரும் கிண்டலான மற்றும் சீரியசான காட்சிகள், சுரேன் ஜி யின் சவுண்ட் மிக்சிங் , ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு , அட்டகாசமான சந்தோஷ் நாராயணின் இசை , அசத்தலான கார்த்திக் சுப்புராஜின் இயக்கம் என்று சிரிக்கும் புத்தர் சிலையில் முடியும் அந்தக் காட்சித் தொகுப்பு…. உலகத்தரம் . கார்த்திக் சுப்புராஜ் எப்படிப்பட்ட ஒரு ரசனையான டெக்னிக்கல் சிறப்பு வாய்ந்த இயக்குனர் என்பதற்கு அடையாளம் அந்த பகுதி ,
ஆரம்ப ரயில் சண்டைக் காட்சியில் சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை சிறப்பு.என்றாலும் இளையராஜாவின் சென்யூரீட்டா ஐ லவ் யூ பாடல் காட்சி கொடுக்கும் உற்சாகமே வேறு.
லொக்கேஷன்கள் அட்டகாசம் .
பூஜா ஹெக்டே மீது இயக்குனருக்கு என்ன கோபம்? யதார்த்தம் என்ற பெயரில் மோசமான ஸ்கின் டோன் தோற்றம் , முகத்துக்குப் போருத்த்மில்லாத கேமரா கோணங்கள் , எந்த ஈர்ப்பும் தராத உடல் தோற்றம் என்று…
ப்பூ.. ஜா ஹெக்கடே இவ்வளவுதானா என்று யோசிக்கும் அளவுக்கு இறக்கி விட்டார் .
”இரும்புக் கை” என்று சொல்வதற்குப் பதில் ‘இரும்புக் காய் … இரும்புக் காய்.. என்கிறார் ஜோஜு ஜார்ஜ். இறைவா…!இந்த மலையாள நடிகர்களால் தமிழ் சினிமாவில் நடக்கும் மொழிக் கொலைகளைத் தடுத்து நிறுத்தி, தமிழைக் காப்பாற்ற ஒரு பாரிவேல் கண்ணன் வர மாட்டானா?
நாசர் போலவும் பிரகாஷ் ராஜ் போலவும் இரண்டு பேர் வருகிறார்கள். அவர்கள்தானா என்று உறுதி செய்ய ஒரு விசாரணைக் கமிஷன் போடணும்.
பாவம் ஸ்வாசிகா.
படத்தின் இரண்டாம் பகுதி எல்லாம் முடியல சாமி. சூர்யாவின் சிரிக்கவே முடியாத குறைபாட்டை வைத்து எல்லாம் திரைக்கதையில் ஒரு சிலம்பமே ஆடலாம். ஆனால் சீவாங்குச்சி ஜோசியம் பார்த்து இருக்கிறார்கள் படத்தில்.
சிரிப்பு வராதவன் மிராஸ்தாருக்குப் பயந்து வாழும் மக்களை சிரிக்க வைக்கும்படி பேசுகிறான் .. சிரிப்பு டாக்டர் என்ற பெயரில் ஜெயராம் வேறு இருக்கிறார் . ஆனால் வாய் விட்டு சிரிக்கும்படி ஒரு காமெடி வசனம் கூட படத்துக்கு எழுதப்படவில்லை என்பது எல்லாம் உச்சபட்ச போங்காட்டம் .
‘ நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று நாயகன் கேட்கிறான் . அதற்காகக் காத்திருந்த நாயகி உள்ளுக்குள் சிலிர்த்துப் போய் அவனை முத்தமிடுகிறாள் . அதுதான் பெஸ்ட் பதில் . அதற்குப் பிறகு அவள் சம்மதம் என்பது போல தலையாட்டும் ஷாட் எல்லாம் தேவை இல்லாத ஆணிதானே எடிட்டரே மற்றும் இயக்குனரே? பிடுங்கி எறிந்து இருக்க வேண்டாமா?
கார்த்திக் சுப்புராஜின் முந்தைய படமான ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நாயகன் பழங்குடி மக்களுக்கு எதிராக போராடும் பகுதியும் அந்த கிளைமாக்சும் அவ்வளவு சிறப்பாக அமைந்து படத்தை தூக்கி நிறுத்தி , கொண்டாட வைத்தது.,காரணம் அதன் நம்பகத்தன்மை . அப்படி ஓர் அசத்தல் அசத்தி இருந்தார் கார்த்திக் சுப்புராஜ்.
புலியைப் பார்த்து பூனை உறும முயன்ற கதையாக அதன் டூப்ளிகேட் போல இந்தப் படத்தில் ஒரு கதை விட்டிருக்கிறார்கள். ஆனால் செல்ஃப் எடுக்கவில்லை .
கடைசியில் கார்த்திக் சுப்புராஜ் பெயர் போட்ட உடன் எல்லோரும் தியேட்டரை விட்டு வெளியே ஓடுகிறார்கள். அதற்குப் பிறகும் தியேட்டர் உள்ளே ஏதோ டாக்கி சவுண்ட் கேட்டுக் கொண்டே இருந்தது .
அன்பு சூர்யா … உங்கள் படங்களின் திரைக்கதைகளில் கவனம் செலுத்துங்கள் . நீங்கள் தோற்கக் கூடாது .
மொத்தத்தில் ரெட்ரோ…. FADE OUT .