ஓய் நாட் ஸ்டுடியோ சஷிகாந்த் மற்றும் ரேடியன்ஸ் வருண் மணியன் தயாரிப்பில், சித்தார்த் , பிருத்வி ராஜ், வேதிகா நடிக்க ஏ ஆர் ரகுமான் இசையில் வசந்த பாலன் இயக்கும் காவியத் தலைவன் படத்தின் பாடல்களை சூரியன் பண்பலைக்காக ஏ. ஆர் ரகுமானின் ஸ்டுடியோவில் வெளியிட்டுவிட்டு (அதை விட சிறந்த இடம் எது ?) நண்பகலில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து படக் குழு .

கிட்டப்பா — கே.பி. சுந்தராம்பாள் காலத்து இசை நாடகப் பின்னணியில் உருவாகும் பீரியட் ஃபிலிம் இது.
படத்தின் மூன்று பாடல்களை திரையிட்டார்கள் .
(மூன்று பாடல்களிலுமே இசை , கலை இயக்கம் , ஒளிப்பதிவு மூன்றும் அருமையாக இருந்தது .
சந்திர சூரியரே என்ற முதல் பாடலில் நடனம் மட்டும், படம் சொல்லும் கால கட்டத்தை விட நவீனமாக தெரிந்தது .
வீட்டு மாடியில் சித்தார்த் – அனேகா ஜோடி பாடும் ஹலோ மிஸ்டர் (?) பாடலின் முதல் சரணத்துக்கு முந்தைய பி ஜி எம் மில் , படத்துக்கான காலகட்டத்தை இசையில் அட்டகாசமாக கொண்டு வந்திருந்தார் ஏ ஆர் ரகுமான் . ஆனால் அந்த இசை மேல் வசனக் காட்சிகள் வந்து அதை ரசிக்க முடியாமல் செய்கின்றன .
மூன்றாவதாக திரையிடப்பட்ட மேடைப் பாடலில் சித்தார்த் அனேகா பர்ஃபார்மன்ஸ் அருமை . ஆனால் அந்தப் பாடலில் பழைய சினிமாவின் தன்மை தெரிகிறதே தவிர, நாடகத் தன்மை இல்லை . பார்த்தவரை சித்தார்த் தமிழை நன்றாக பேசி இருப்பது தெரிகிறது . பாராட்டுக்கள் . )

தமிழகமெங்கும் உள்ள தலை சிறந்த நாடகக் கலைஞர்கள் ஐந்து பேரை வரவழைத்து இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏ ஆர் ரகுமான் கையால் ஆளுக்கு இருபத்தைந்தாயிரம் வெகுமானத் தொகை வழங்கினார் தயாரிப்பாளர் சஷிகாந்த் . உண்மையிலேயே அற்புதமான விஷயம் இது. அவர்கள் எல்லோரும் இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று மனதார வாழ்த்தியது நெகிழ்வாக இருந்தது .
அந்த ஐந்து பேரையும் படக் குழுவினரோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள அறிவிக்கப்பட்டபோது அவர்கள் பின்னல் நிற்கப் போக . முன்னால் நிற்கவைத்து போட்டோ எடுத்ததும் அருமையான விஷயம். அந்த போட்டோ எடுக்கும்போது அவர்களின் காலடியில் நடிகர் சித்தார்த் பணிவோடு உட்கார்ந்தது , அவரது பண்பை வெளிக்காட்டியது .

“எழுத்தாளர் ஜெயமோகனோடு பேசும்போது ஏற்பட்ட உணர்வே இந்தப் படம் வரக் காரணம். படத்தின் வசனமும் அவரே ” என்றார் வசந்த பாலன்
நாடக உலகின் பிதாமகனான சங்கரதாஸ் சுவாமிகளை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கும் நாசர் “பொதுவாக ஒரு படத்தைப் பற்றி கேட்கும்போது ஷூட்டிங் ஸ்பாட்ல நடந்த மறக்க முடியாத சம்பவம் சொல்லுங்கன்னு கேட்பாங்க . இந்தப் படம் முழுக்கவே எனக்கு அப்படிதான் ” என்றார் பெருமையாக

“படத்தை ஆரம்பித்த உடன் சக்திக்கு மீறி இறங்கி விட்டோமோ என்று தோன்றியது . ஆனால் தயாரிப்பு, நட்பு இரண்டிலும் தோள் கொடுத்தது வருண் மணியன் ” என்றார் சஷிகாந்த்

“இந்தப் படம் எனக்கு என் நண்பன் சஷிகாந்த் கொடுத்த வாழ்நாள் பரிசு ” என்று கண்ணீர் மல்க குரல் கம்ம சொன்னார் சித்தார்த். தொடர்ந்து “படம் எடுக்க முடிவு செய்தபோது நாடகம் பத்தின படம் எல்லாம் ஓடுமான்னு எல்லாரும் கேட்டாங்க . ஆனா நாசர்தான் ஓடும்னு சொல்லி எடுக்க வச்சார் ” என்ற சித்தார்த், ” படம் மட்டும் ஓடாம இருக்கட்டும் .. அப்புறம் இருக்கு உங்களுக்கு ” என்று நாசரை விரல் நீட்டி எச்சரித்து மிரட்டல் விடுக்க , செம கலகலப்பு .
ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் ” அண்மையில் ஈரான் இயக்குனர் மஜீத் மஜீதியின் படத்துக்கு இசை அமைப்பது பற்றி பேச அவர் அழைத்திருந்தார் . அவரை சந்தித்து பேசியபோது ‘ஏன் உங்கள் இந்தியாவில் மட்டும் உங்கள் கலாச்சாரத்துக்கு சம்மந்தமே இல்லாமல் மேற்கத்திய பாணியில் படம் எடுக்கிறீர்கள்?’ என்று கேட்டார் . அவருக்கு நான் சொல்லும் நல்ல பதிலாக இந்த காவியத் தலைவன் இருக்கும் ” என்றார் .
சபாஷ் ரகுமான் .
அன்னிக்கும் இன்னிக்கும் திருக்குறள்தான் வியக்க வைக்குது . ரெண்டே அடிதான் இருக்கனும் . விசயமும் இருக்கணும் !