
புதுமை இயக்குனர் ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்து ….
இருபத்தைந்து வாரங்கள் ஓடி ….
காலங்களைக் கடந்து இன்றும் ரசிக்கப்படும் காதல் மற்றும் நகைச்சுவை விருந்தான காதலிக்க நேரமில்லை படம் வெளியாகி….
ஐம்பதாண்டுகள் ஆன நிலையில்,
படத்தின் பொன் விழாவை ஓய.ஜி.மகேந்திரன் நடத்தினார்.
படத்தில் இடம் பெற்ற பலரும் விழாவில் கலந்து கொண்டனர்.
“படத்துல நானும் ரவிச்சந்திரனும் புதுமுகங்கள் . படத்துல கடைசி வரை நாம இருப்போமான்னு ரவிச்சந்திரன் கேட்டுகிட்டே இருப்பாரு.ஆனா இப்போ இந்தப் படத்தாலதான் இங்க இருக்கேன் ” என்றார் காஞ்சனா
“திடீர்னு ஷூட்டிங் வான்னு கூப்பிட்டு எந்த ஒப்பந்தமுமே போடாம, ஹீரோ யாருன்னே முடிவாகாத நிலையில் அனுபவம் புதுமை பாட்டுல ஹீரோ யாருன்னே தெரியாம நடிக்க வச்சு அப்புறம் என்னையும் அதன் பிறகு ரவிச்சந்திரனையும் படத்துக்கு தீர்மானித்தார் ஸ்ரீதர் ” என்றார் ராஜ ஸ்ரீ
“எனக்கு காமெடி வேடத்தை முடிவு செய்து விட்டு , காமெடி என்று சொன்னால் நான் நடிக்க மாட்டேன் என்பதற்காக ‘நீயும் ஒரு ஹீரோயின்; உனக்கு ஜோடியாக நடிக்கும் நாகேஷும் ஒரு ஹீரோ’ என்று சொல்லி என்னை நடிக்க வைத்தார் ஸ்ரீதர் ” என்றார் சச்சு .

சத்யராஜின் ஆசைப்படி படத்தை மனோபாலா ரீமேக் செய்ய விரும்பி ஸ்ரீதரிடம் ரைட்ஸ் வாங்க போனாராம்.
ஹீரோ யார் என்று ஸ்ரீதர் கேட்க முத்துராமன் ரவிச்சந்திரன் கேரக்டர்களுக்கு என்று சில பெயர்களை சொன்னாராம் மனோபாலா .
“டேய் ஃபூல் .. உனக்கு அறிவிருக்கா?
அந்தப் படத்துல ஹீரோ பாலையாதான் .
அந்தக் கேரக்டருக்கு யாரை போடப் போறன்னு சொல்லு .
அப்புறம் ரைட்ஸ் தரேன் ” என்று சொன்னாராம் ஸ்ரீதர்.
“அந்த கேரக்டருக்கு ஆள் கிடைக்காததால ரீமேக் ஐடியாவையே விட்டுட்டேன் என்றார் மனோபாலா.
“சிவாஜி , ஸ்ரீதர் போன்றவர்களின் படைப்புகளை நம் பேரப் பிள்ளைகளும் பார்த்து ரசித்து வியந்து மகிழும்” என்றார் இயக்குனர் சேரன்
படத்தின் இணை கதை வசனகர்த்தா கோபு பேசும்போது, படம் வெளிவந்த சமயத்தில் தான் வசித்த திருவல்லிக்கேணி வஸ்தாதுகள் பலர், தங்கள் நாடகத்துக்கு தலைமை தாங்க வர சொல்லி கலாட்டா செய்த கதைகளை சிரிக்க சிரிக்க சொல்லிவிட்டு “இப்போது ஸ்ரீதர் உயிரோடு இருந்து என் கிட்ட ‘ டேய் கோபு.. காதலிக்க நேரமில்லை படத்தை ரீமேக் பண்ணலாமாடா..?’ன்னு கேட்டா ‘பாலையாவுக்கு ஈக்குவலா ஆள் கிடையாது . வேணாம்’னு சொல்லுவேன் . ‘சரிடா’ன்னுட்டு போயிடுவார்” என்றார் .

பொம்மை படத்தில் வந்த நீயும் பொம்மை நானும் பொம்மை பாட்டு மூலம் தமிழில் அறிமுகமானாலும் இந்தப் படத்தில் வந்த ‘என்ன பார்வை உந்தன் பார்வை’ பாடல் மூலம் பிரபலமான பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பேசும்போது ” நான் இன்னும் தமிழ் பாட்டை மலையாளத்தில் எழுதி வைத்துதான் பாடறேன் . என்கிட்டே சிலர் ‘என்ன சார்… இன்னும் தமிழ் கத்துக்கலையா?’ன்னு கேட்கறாங்க . ழ என்கிற எழுத்தை தமிழ் நாட்டில் யாரும் ஒழுங்காக உச்சரிப்பது இல்லை . மலையாளிகள்தான் அதை ஒழுங்காக உச்சரிக்கிறார்கள் . இனி அந்த எழுத்து மலையாளிகளின் உரிமை ” என்றார் , காதலிக்க நேரமில்லை நிகழ்ச்சிக்கு எந்த சம்மதமும் இல்லாமல்.
மிஸ்டர் ஜேசுதாஸ் !
“திருக்கோவிலே ஓடி வா என்று பாடச் சொன்னால் இவன் தெருக்கோயிலேன்னு பாடறான்” என்று கவியரசு கண்ணதாசன் உங்களை காய்ச்சி எடுத்த கதையையும் ”பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்” என்று பாடுவதற்கு பதில் ”பில்லைத் தமில் பாடுகிறேன்” என்று நீங்கள் அடித்த கூத்தையும் இங்கே யாரும் மறக்கவில்லை .
உங்கள் குரல் பாடுவதற்கு மட்டுமே … பேசுவதற்கு அல்ல !
