லேடி ட்ரீம் சினிமாஸ் சார்பில் பைஜா டாம் தயாரிக்க, சச்சின் மணி, நந்திதா ஸ்வேதா, அருள் தாஸ் , சென்றாயன், நடிப்பில்
பாலையா டி ராஜசேகர் எழுதி இயக்கி இருக்கும் படம் காத்திருப்போர் பட்டியல் .
தொடர்வண்டி பயணச் சீட்டில் வெயிட்டிங் லிஸ்ட் என்று சொல்வோம் இல்லையா அதன் தமிழாக்கம் . 
அதற்கேற்ப, படத்தின் பாடல் வெளியீட்டு விழாவையொட்டி திரையிடப்பட்ட முன்னோட்டம் இருந்தது .
பயணிச் சீட்டு இல்லாமல் பயணம் செய்வோர், ரயில் நிலையத்தில் அசுத்தம் செய்வோர், கண்ட இடங்களில் கிறுக்கி வைப்போர்….
இவர்களை பிடித்து உதைக்கும் இன்ஸ்பெக்டர் (அருள்தாஸ்) மாட்டிக் கொள்ளும் சிலர் (சென்றாயன், அப்புக் குட்டி) , அவர்களில் ஒரு காதலன் (நாயகன் சச்சின் மணி ),
அவனது காதலி (நந்திதா) , ரயிலுக்கு வைக்கப்படும் வெடி குண்டு.. என்ற கதைப் போக்கில் முன்னோட்டம் சிறப்பாக இருந்தது . 
சான் ரோல்டனின் இசையில் சுகுமார் ஒளிப்பதிவில் அமைந்த இரண்டு பாடல்களைத் திரையிட்டார்கள்.
காதுக்கும் இனிமை . கண்ணுக்கும் குளிர்ச்சி . மிக சிறப்பாக படமாக்கி இருக்கிறார் இயக்குனர் பாலையா டி ராஜ சேகர். 
புதுமுகம் சச்சின் மணி உற்சாகமாக ஆடிப் பாடி நடித்துள்ளார் . நந்திதாவும் அப்படியே .
நிகழ்ச்சியில் விஷால் , தயாரிப்பாளர் கதிரேசன் ஆகியோர் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் பைஜா டாம் ” இதுவரை காத்திருப்போர் பட்டியலில் இருந்த எங்கள் படம் இப்போதுதான் R A C என்ற நிலைக்கு வந்து இருக்கிறோம் .
சீக்கிரம் கன்ஃபார்ம் ஆகும் என்று நம்புகிறோம் . அதற்கு உங்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும் ” என்றார் . இவர் முன்பே யுவன் யுவதி என்ற படத்தை தயாரித்தவர் .
நடிகர் அருள்தாஸ் ” பலகாலம் முயன்று கஷ்டப்பட்டு இந்தப் படத்தை பைஜா டாம் மேடமும் பாலையா ராஜ சேகரும் உருவாக்கி இருக்கிறார்கள் .
ராஜ சேகர் மிகச் சிறந்த மனிதர் . படம் நன்றாக வந்திருக்கிறது ” என்றார் .
இசையமைப்பாளர் சான் ரோல்டன் பேசும்போது ” நான் சந்தித்த இயக்குனர்களிலேயே மிக டீசன்ட் ஆனவர் பாலையா ராஜ சேகர் .
அவர் எனது வேலையில் எந்த குறுக்கீடும் செய்யாமல் என்னை பணியாற்ற அனுமதித்தார் அவ்வளவு சுதந்திரமாக என்னை வேலை செய்ய அனுமதித்த காரணத்தால்தான், 
பாடல்கள் நீங்கள் எல்லோரும் பாராட்டும் அளவுக்கு சிறப்பாக வந்துள்ளது ” என்றார் .
தயாரிப்பாளர் கதிரேசன் பேசும்போது ” இங்கே இப்போ சினிமா வியாபாரம் ரொம்ப மோசமாக இருக்கிறது . இது மாற வேண்டும் .
சிறு படங்கள்தான் சினிமாத் தொழிலை வலுவடையச் செய்யும் . எனவேதான் சிறு படங்களுக்கு ஆதரவு கொடுக்கிற வேலையை கட்டாயம் செய்ய வேண்டும் .
அதை விஷால் தொடர்ந்து செய்வார் ” என்றார்.
இயக்குனர் பாலையா டி ராஜசேகர் பேசும்போது ” இந்தப் படத்துக்கு அருள்தாஸ் அண்ணன் , அப்புக் குட்டி முதலிய பலரும் கொடுத்த ஒத்துழைப்பு அபாரமானது . 
சான் ரோல்டன் மிக சிறப்பான பாடல்களை கொடுத்துள்ளார் . தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் லால்குடி இளையராஜா , சாதனை செய்த கேமரா மேன் சுகுமார் ஆகியோர்,
புதியவனான என்னிடம் எந்த வித்தியாசமும் காட்டாமல் இயல்பாக பேசி பங்களிப்பை கொடுத்ததால் படம் நன்றாக வந்து இருக்கிறது ” என்றார் .
விஷால் தன் பேச்சில் ” பெரிய நடிகர்கள் படங்களுக்கு இயல்பாக விளம்பரம் கிடைத்து விடும். 
ஆனால் சிறு படங்களுக்கு அப்படி கிடைப்பதில் சிரமம்உள்ளது . அதற்கு ஏற்ப ரிலீஸ் விசயத்தில் சில திட்டங்கள் கொண்டு வர இருக்கிறோம்
அதே நேரம் தயாரிப்பாளர்களும் பட வெளியீடு குறித்த அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் . தங்கள் படம் சென்னையில் எந்த திரையரங்கில் எந்த ஷோ வருகிறது .
சிறு நகரங்களில் கிராமத்தில் எந்த திரையரங்கில் எப்போ ஓடுது . எத்தன சீட் ? ஏரியா எப்படி ? எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் .
இங்கே எனக்கு எல்லோரும் நன்றி சொன்னார்கள் . இப்போது சொல்ல வேண்டாம் .
நான் இந்தப் படத்துக்கு உரிய உதவிகளை செய்து,
படம் வெளிவந்து முதல் ஷோ ஓடிய பிறகு சொல்லுங்கள் ” என்றார் .