கேலக்ஸி பிக்சர்ஸ் சார்பாக ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிக்க,
நடிகை ஸ்ரீதேவியின் அக்கா மகனும், உல்லாசம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை மகேஸ்வரியின் சகோதரருமான அவிஷேக் கதாநாயகனாக நடிக்க,
ரஜினியின் கபாலி படத்தில் நடிக்கும் தன்ஷிகா கதாநாயகியாக நடிக்க
இவர்களுடன் சம்பத், ஜான் விஜய், மனோபாலா, கோட்டா சீனிவாசராவ், வி.எஸ்.ராகவன், கா ளி வெங்கட், சுமார் மூஞ்சி குமார் டேனியல், நான் கடவுள் ராஜேந்திரன், பசங்க சிவகுமார், லொள்ளு சபா மனோகர்,
வினோதினி, மதுமிதா, சூப்பர் குட் சுப்ரமணி,சேரன்ராஜ், மிக முக்கியமான கதாபாத்திரத்தில் பேபி சாதன்யா ஆகியோர் நடிக்க,
சமீபத்தில் வெளியாகி பாராட்டுக்களைப் பெற்ற கத சொல்ல போறோம் படத்தை எழுதி இயக்கிய எஸ். கல்யாண் கதை, திரைக்கதை, வசனம், இயக்கும் படம் காத்தாடி .
மறைந்த பழம்பெரும் நடிகர் வி எஸ் ராகவன் தனது 93 ஆவது வயதில் நடித்துக் கொடுத்த கடைசி படம் இது
படத்தின் பாடல் வெளியிட்டு விழாவில் பாடல்களும் முன்னோட்டமும் திரையிடப்பட்டன . நல்ல மெலடியான பாடல்களைக் கொடுத்து இருந்தார் இசையமைப்பாளர் பவன்
இந்த படத்தின் நாயகன் அவிஷேக்குக்கு பின்னணிப் பாடகி பி.சுசீலாவின் மகனும் மருமகளும் குடும்ப நண்பர்கள் . சுசீலாவும் இவரை நன்கறிந்தவர் .
அந்த வகையில் படத்தின் பாடல்களை வெளியிட்டு வாழ்த்தினார் பி.சுசீலா .
படக் குழுவினர் தவிர நடிகரகள் ஆரி , அஸ்வின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் மகேஸ்வரியின் நெருங்கிய தோழியான நடிகை மீனா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள் .
நிகழ்ச்சியில் பேசிய ஜான் விஜய் “வழக்கமாகவே எனக்கு ஒரு மாதிரியான கேரக்டர்கள்தான் கொடுப்பார்கள் . இதில் இன்னும் வில்லங்கமான வேடம் .
இதில் நான் மெட்ராஸ் பாஷைக்கே மெட்ராஸ் பாஷை பேசி இருக்கிறேன் ” என்றார் .
அஸ்வின் பேசும்போது ” இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்த டேனி இந்தப் படத்தில் நடித்து இருக்கிறார் . அந்தப் படத்தில் டாஸ்மாக் சீனில் அவர் கலக்கி இருப்பார் .
இதிலும் நன்றாக நடித்து இருப்பார் . அனைவருக்கும் வாழ்த்துகள் ” என்றார் .
நடிகர் ஆரி தனது பேச்சில் ” தன்ஷிகா ஹீரோயின் மட்டும் அல்ல . ஹீரோவுக்கு சமமானவர் . நான் சிலம்பம் கற்றுக் கொள்ளப் போனால் அங்கே அவரும் சிலம்பம் கற்றுக் கொண்டு இருப்பார்.
சம்மர் சால்ட் பல்டி எல்லாம் சூப்பரா அடிப்பார். இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக பொருத்தமான வேடத்தில் நடித்து இருக்கிறார் ” என்றார் .
தன்ஷிகா பேசும்போது ” இந்தப் படத்தின் கேரக்டரோடு என்னை இயல்பாக தொடர்புப் படுத்திக் கொள்ள முடிந்தது . இந்தப் படம் எனக்கு ஒரு புதிய களத்தை ஊர்வாக்கும் என்று நம்புகிறேன் ” என்றார் .
அவிஷேக் பேசும்போது “படத்தை சந்தோஷமாக ஆரம்பித்தோம் . கொஞ்சமா விரக்தியான சூழல் . பிறகு போராடி வெற்றிகரமாக முடித்தோம் .
பொதுவாக இயக்குனரை கேப்டன் ஆஃப் தி ஷிப் என்பார்கள் . ஆனால் இந்தப் படத்தில் அவர் தானே கீழே இறங்கி கப்பலை தள்ளும் வேலையைக் கூட செய்து இருக்கிறார் ” என்றார்
இயக்குனர் கல்யான் தன பேச்சில் “தொழிலதிபராக வரும் சம்பத்தின் குழந்தை சாதன்யாவை திருடர்களான அவிஷேக், சுமார் மூஞ்சி குமார் டேனியல் இருவரும் பணத்திற்காகக் கடத்துகிறார்கள்.
போலீஸ் ஆபிசராக வரும் தன்ஷிகா திருடர்களிடமிருந்து பேபி சாதன்யாவை எப்படிக் காப்பாற்றினார் என்பதை ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்து உருவாக்கி உள்ளோம்.
படத்தின் ஆரம்பம் முதல், இறுதிவரை காமெடி கலாட்டாவாக இருக்கும். ஏலகிரி, கேரளாவில் உள்ள வாகுமன் மற்றும் சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது
எனது கத சொல்ல போறோம் படம் வெற்றி பெற்றதற்கு காரணமே அதில் உள்ள செண்டிமெண்ட் காட்சிகள் தான். அது இந்த படத்திலும் இருக்கிறது.
படத்தின் தயாரிப்பாளர் முதன் முதலில் கோட் போட்டு நிற்கிறார் .
படம் வெளிவந்த பிறகு அவர் ரெயின் கோட் போட வேண்டி இருக்கும் . அந்த அளவுக்கு பாராட்டு மழையிலும் வசூல் மழையிலும் நனைவார் ” என்றார் .
நன்னம்பிக்கை வெல்லட்டும் !