விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரிக்க, விஜய் ஆண்டனி, அஜய் தர்ஷன், ப்ரீதிகா, ப்ரிகிடா, தீப்ஷிகா, சேஷ்விதா நடிப்பில் எடிட்டர் லியோ ஜான்பால் முதன் முதலில் இயக்குனராக அறிமுகம் ஆகி இருக்கும் படம்.
இளம்பெண்கள் கடத்தப்பட்டு விஷ ஊசி போட்டு அவர்கள் உடல் முழுக்க கறுத்துப் போகும்படி செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள்.
குற்றவாளியைப் பிடிக்க மும்பையில் ஏ டி ஜி பி யாக இருக்கும் துருவ்வை ( விஜய் ஆண்டனி) களம் இறக்குகிறார்கள்.
சேலம் பக்கம் முருக வழிபாட்டில் சித்தர் மரபில் பிறந்து தண்ணீரின் மூலம் சில சிறப்பு சக்திகளும் அதீத நினைவாற்றலும் கொண்ட ஓர் இளைஞன்( அஜய் தர்ஷன்) ஒரு நிலையில் தண்ணீரில் அமர்ந்து தியானம் செய்வதன் மூலம் — ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அப்பிஸ் படத்தில் வரும வினோத உயிரிகள் போல– நீர் வடிவ உருவம் கொண்டு , அவன் போயிருக்காத இடங்களுக்கும் போய் அங்கு நடக்கும் நிகழ்வுகளை காணும் ஆற்றல் பெறுகிறான் .
ஆரம்பத்தில் இவன்தான் கொலைகாரன் என்று எண்ணி துருவ் வளைக்க, ஒரு நிலையில் அவனே போலீசுக்கு உதவுகிறான்.
பெண்களைக் கொலை செய்வது யார்? அவர்கள் போடும் ஊசி என்ன? எதனால் கொலை செய்யப்பட எல்லோருமே அப்படி கறுத்துப் போகிறார்கள் என்பதே படம்.
சித்த மரபில் வரும் இளைஞனாக மிக சிறப்பாக நடித்துள்ளார் அஜய் தர்ஷன் . முக பாவனைகள் உடல் மொழிகள் , தோற்றம் யாவும் சிறப்பு.
முன்பே அப்படி ஒரு விஷ ஊசியால் குத்தப்பட்டு , உடனடியாக காப்பாற்றப்பட்டதால் ஒரு பக்கம் மட்டும் உடல் கறுத்து , மனைவி மகளை இழந்த சுமை நெஞ்சில் இருந்தும் குற்றவாளியைக கண்டுபிடிக்க தீவிரமாய் போராடும் போலீஸ் அதிகாரி கேரக்டரில் விஜய் ஆண்டனி சிறப்பு.
சிறப்பாக நடித்து இருக்கும் சேஷ்விதா ராஜு தவிர பெண்கள் யாருக்கும் வலுவான கேரக்டர் இல்லை எனவே பாராட்டவும் ஒன்றும் இல்லை.
விஜய் ஆண்டனியின் இசையில் இரண்டு பாடல்களும் அருமை . உலகையே முழுவதும் பாடல் உடனடியாக மனதில் ஒன்றி முணுமுணுக்க வைக்கிறது . யுவாவின் ஒளிப்பதிவும் மிக சிறப்பு. படத்தை இயக்கி இருக்கும் லியோ ஜான்பாலின் படமாக்கல் ஈர்க்கிறது.
சித்த மரபு முருக வழிபாடு என்று சொல்லி விட்டு அவன் ஒரு பெண்ணை காதலித்து அவமானப்படுத்தப்பட்டு மூர்க்கமானான் என்று சொல்வது இம்மெச்சூரிட்டி.
அப்படி ஒரு வித்தியாசமான கேரக்டர் பாதிக்கப்பட்ட போலீஸ்காரர் என்று இரண்டு சிறப்பான கேரக்டர்களை வைத்துக் கொண்டு கடைசியில் வேறொரு கதாபாத்திரம் வேறொரு கதை என்று மடைமாற்றியது பலவீனம்.
தேவைக்கு மேல் நீளும் காட்சிகள் , பில்டப் பெரிதாக இருந்து அதை அடுத்து வரும் விஷயம் சாதாரணமாக இருப்பது , இப்படி இரண்டு கேரக்டர்கள் இருக்க, கடைசியில் கொலைகளுக்காக சொல்லப்படும் மிக சாதரணமாக இருக்கிறது. அல்லது அதை அழுத்தமாக சொல்லவில்லை .
எடிட்டர்கள் டைரக்டர் ஆகும்போது இந்தப் பிரச்னை வரும் . தேவையான LAG தான் பில்ட் அப் . தேவையற்ற பில்ட் அப் தான் LAG.
எடிட்டிங் என்பது எல்லா சமயத்திலும் எல்லா பில்ட் அப் களையும் LAG ஆகவே பார்ப்பது அல்ல.
CUT to CUT, ஷார்ப் கட், எக்ஸ்பிரஸ் கட் என்பது எல்லா சமயங்களிலும் பலன் தராது . சில சமயம் அதுவே சறுக்கலாக அமையும்
மார்கன் …கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் பரவால்ல. வித்தியாசமான கதை இருக்கணும் என்பவர்களுக்கான சாய்ஸ் .
