ஆசியன் சினி கம்பைன்ஸ் சார்பில் திருப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் Ice Wearசந்திராசாமி மற்றும் நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் டி என் தாய் சரவணன் மற்றும் ராஜீவன் ஆகியோர் தயாரிக்க,
விஷ்ணு விஷால், ரா. பார்த்திபன், ஸ்ரீதிவ்யா, சூரி ஆகியோர் நடிப்பில் சுசீந்திரன் கதை திரைக்கதை எழுதி இயக்கும் படம் மாவீரன் கிட்டு .
ஈழப் போராட்டத்தின் மறக்க முடியாத மாவீரர்களில் ஒருவரான கிட்டுவை இந்தப் பெயர் ஞாபகப்படுத்தினாலும் ,
“பழனி பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கேட்டுப் போராடிய வேறொரு மாவீரனின் கதையே இது” என்கிறார் சுசீந்திரன்.
இந்தப் படத்தில் இமான் இசையில் அனைத்துப் பாடல்களையும் எழுதி இருப்பது மட்டுமல்லாமல் முதன் முதலாக வசானகார்த்தாவாகவும் அறிமுகம் ஆகிறார் பாடலாசிரியர் யுக பாரதி .
மாவீரன் கிட்டு திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் இயக்குநர் சுசீந்திரன் , விஷ்ணு விஷால் , பார்த்திபன் , ஸ்ரீ திவ்யா , தயாரிப்பாளர் Ice Wear சந்திர சாமி ,D.N. தாய் சரவணன் ,
இசையமைப்பாளர் இமான் , ஒளிப்பதிவாளர் A.R. சூர்யா , எழுத்தாளர் – கவிஞர் யுகபாரதி
மற்றும் சிறப்பு விருந்தினர்களாக அம்மா கிரியேஷன் டி.சிவா , இயக்குநர் பா.ரஞ்சித் , பாண்டி ராஜ் , ரவிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் திரையிடப்பட்ட முன்னோட்டம் மிக சிறப்பாக இருந்தது . மக்களின் நன்மைக்காக போராடும் ஒருவனை அவனது காதலியை வைத்தே வீழ்த்த சிலர் எடுக்கும் முயற்சியும் அதன் விளைவுமே
இந்தப் படம் என்பது முன்னோட்டத்தில் தெரிந்தது .
காட்சிகளை மிக சிறப்பாக பதித்து இருந்தார் ஒளிப்பதிவாளர் ஏ கே சூர்யா . பீரியட் பிலிம் என்பதற்கு ஏற்ப உடைகள் , கலை இயக்கம் , பின்புலம் (குறிப்பாக பாடலில் வரும் அந்த , தியேட்டரில் படம் பார்க்கும் காட்சி )
ஆகியவற்றை சிறப்பாக பயன்படுத்தி இருந்தார் சுசீந்திரன் . பாடல்கள் இனிமை . வரிகளும் மண் மனம் வீசும் அருமை !
விழாவில் கவிஞர் யுகபாரதி பேசிய போது “மாவீரன் கிட்டு திரைப்படம் எனக்கு மனதுக்கு மிகவும் நெருக்கமான படம் , இப்படத்தில் நான் முதன் முறையாக வசனம் எழுதியுள்ளேன்.
இப்படம் தமிழ் சினிமாவில் எனக்கு மிக முக்கியமான திரைப்படம். இப்படம் தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த அரசியல் படங்களில் ஒன்றாக இருக்கும்.
நான் இசையமைப்பாளர் டி. இமான் அவர்களுடன் தினமும் பேசிவிடுவேன். அவரோட இணைந்து பணியாற்றுவது மிகப்பெரிய மகிழ்ச்சியான விஷயமாகும்.
நான் எதிர்காலத்தில் வாய்ப்பு வந்தால் திரைக்கதை எழுத்தாளராகவும் மாறவுள்ளேன். நான் திரைக்கதை எழுதினால் தயாரிப்பாளர் சந்திர சாமி அவர்களின் படத்துக்கு தான் முதலில் எழுத வேண்டும் என்று,
தயாரிப்பாளர் சந்திர சாமி கேட்டுள்ளார். வருங்காலத்தில் எனக்கு பாடல் , வசனம் , திரைக்கதை எழுத வாய்ப்பு ஒன்றாக வந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்” என்றார் .
இயக்குநர் பா.ரஞ்சித் பேசியபோது ” பொதுவாக தமிழ் சினிமாவில் கிராமங்கள் என்னவாக இருக்கிறது , கிராமங்களின் தெருக்கள் என்னவாக இருக்கிறது….
கிராமங்களில் வாழும் மக்கள் , எப்படிப்பட்ட அடையாளமாக இருக்கிறார்கள் என்பதைப் பற்றி எனக்குள் ஒரு கேள்வி இருந்து வந்தது .
முதன் முதலாக வெண்ணிலா கபடிக் குழு படம் பார்த்தபோது கிராமங்களில் இருக்க கூடிய அரசியல் , அதுவும் விளையாட்டில் இருக்கும் அரசியலை
மிக அழகாக ஒரு வணிக சினிமாவில் காட்சிப்படுத்தியிருந்தார் சுசீந்திரன் ,
அதே போல இன்றைய கிராமங்களில் பொதுப்பயன்பாட்டிற்குள் இருக்கிற அரசு பொதுவுடைமை என்னவாயிருக்கிறது , யாருடைய சொந்தமாயிருக்கிறது என்கிற ஒரு கேள்வியிருக்கிறது ,
அந்தக் கேள்விக்கு இந்தப் படம் நிச்சயமாக ஒரு பதிலாக இருக்கும் என்று நம்புகிறேன் .
இந்தப் படத்தின் டிரெயிலரும் , பாடல்களும் அதைதான் திருப்பி திருப்பி சொல்ல வருகிறது . இந்த “காதல்” இருக்கிறதே அது சும்மாயிருக்காது .
“மாவீரன் கிட்டு ” படத்தில் வரும் இந்த வசனம் கண்டிப்பாக சலசலப்பை உண்டுபண்ணும் .”காதல்” இந்த சமூகத்தை மாற்றியே தீரும் .
சமூகத்தில் காதலால் மட்டுமே புரட்சியை உண்டுபண்ண முடியும் . என்கிற நம்பிக்கையை உண்டு .
அந்த வகையில் சுசீந்திரன் , யுகபாரதி , இமான் கூட்டணியில் உருவாகும் இந்தப் படம் சமூகத்துக்கான நல்ல கருத்துக்களை பேசக்கூடிய படமாக இருக்கும் என்று நினைக்கிறேன் .
இந்தமாதிரியான படங்கள் கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்றால் மட்டுமே இந்த மாதிரியான படங்கள் எடுக்கமுடியும் என்கிற நம்பிக்கை கலைஞர்களுக்கு ஏற்படும் .
தயாரிப்பாளர்களும் தயாரிக்க முன்வருவார்கள் , தமிழ் ரசிகர்கள் எந்தப் படத்தையும் பேதம் பிரித்துப் பார்ப்பதில்லை.
இந்தப் படம் கமர்சியல் ரீதியாகவும் , அரசியல் ரீதியாகவும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது . என்றார்
இயக்குநர் பாண்டிராஜ் தன் பேச்சில் ” , எனக்கு இந்தப் படத்தின் கதை மனதுக்கு நெருக்கமான ஒன்று . . இப்படம் தென்னகத்தில் நடந்த மிக முக்கியமான சம்பவத்தை பற்றி பேசும் படமாக இருக்கும்.
இயக்குநர் சுசீந்தரனை எல்லோரையும் போல் எனக்கும் மிகவும் பிடிக்கும். நாங்கள் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றால் கூட அவர்தான் எங்களுக்கு ஆர்டர் செய்வார்.
அந்த அளவுக்கு எங்கள் மேல் அவருக்கு உரிமை அதிகம் உண்டு. இயக்குநர் சுசீந்திரன் தான் தமிழ் சினிமாவில் எனக்கு தெரிந்து மிகவும் வேகமாக படத்தை இயக்கி முடிக்கும் இயக்குநர் எனக்கு,
அவருடைய வேகம் மிகவும் பிடிக்கும். மாவீரன் கிட்டு சமூகத்துக்கு மிக முக்கியமான திரைப்படம் அது நிச்சயம் வெற்றி பெறும்” என்றார் இயக்குநர் பாண்டிராஜ்.
ஆர். பார்த்திபன் பேசியபோது “இப்போ எல்லாம் சினிமா ரசிகர்கள் அனைவரும் சினிமாவை மிகவும் கவனமாக பார்க்கிறார்கள். நாம் சின்ன தவறு செய்தால் கூட அதை கண்டுபிடித்துவிடுகிறார்கள்.
உதாரணத்துக்கு இதை எடுத்துகொள்ளலாம் “ நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தாலும் தொடரி திரைப்படத்தில் 150km வேகத்தில் செல்லும் இரயிலில் கீர்த்தி சுரேஷ் பாவாடை ஏன் தூக்கவில்லை “
– என்ற ஓர் விஷயம் ரசிகர்களால் வாட்ஸ் அப்பில் பகிரப்படுகிறது. இயக்குநர் சுசீந்திரன் எப்போதும் Perfect ஆக படத்தை இயக்கும் ஓர் இயக்குநர். இந்தப் படத்தில் நடித்திருக்கும் ஸ்ரீ திவ்யா மிகச்சிறந்த நடிகை.
நான் அழவேண்டிய ஒரு காட்சியில் இயக்குநர் சுசீந்திரன் ஸ்ரீ திவ்யாவை கிளிசரின் போடுமாறு கூறியதும் அவர் மறுப்பேதும் கூறமால் அக்காட்சி நன்றாக வரவேண்டும் என்ற எண்ணத்தில்,
அவர் முகம் பிரேமில் வராது என்று தெரிந்தும் கிளிசரின் போட்டுக் கொண்டு நடித்தார் . இவ்த்ல் நாயகன் விஷ்ணு விஷால் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்தார்கள்.
இப்படத்துக்கு பின்னர் விஷ்ணு மகா விஷ்ணுவாக மாறிவிடுவார்” என்றார்.
இயக்குநர் சுசீந்திரன் தன் பேச்சில் ” இசையமைப்பாளர் இமான் மிகச் சிறப்பான பாடல்களை வழங்கியுள்ளார். இதயத்தில் இருந்து பாடல்களை தந்துள்ளார்.
எனக்கு நடிகர் பார்த்திபனை விட இயக்குநர் பார்த்திபனை மிகவும் பிடிக்கும் ஏன்னென்றால் அவர் உலக நாயகன் கமல் ஹாசனை போல் சம்பாதித்த பணத்தை எல்லாம் சினிமாவில் முதலீடு செய்பவர்.
விஷ்ணு விஷால் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். வெண்ணிலா கபடிக் குழு படத்துக்கு பின்னர் இப்படத்துக்காக நான் விஷ்ணு விஷாலுடன் எட்டு வருடத்துக்கு பிறகு அதே கணக்கம்பட்டி சென்றிருந்தேன்.
அங்கு மக்கள் எங்களை நன்றாக நியாபகம் வைத்து எங்களுடன் பேசி படப்பிடிப்பு நன்றாக நடக்க ஒத்துழைத்தனர்.
விஷ்ணு விஷாலுடன் நான் இது வரை மூன்று திரைப்படங்கள் இணைந்து பணியாற்றிவிட்டேன். நான்காவது திரைப்படத்தில் அவருடன் இணைய பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் படபிடிப்பு நன்றாக நடக்க மிகமுக்கிய காரணமாக இருந்த என் தம்பி தாய் சரவனன்னுக்கு நன்றி அவர் தான் அனைவரையும் ஒருங்கிணைத்து படபிடிப்பு நன்றாக நடக்க உதவினார்.
மாவீரன் கிட்டு நான் எடுத்த படங்களில் மிகச்சிறந்த படமாகவும் கமர்ஷியலாக வெற்றிபெறும் படைப்பாகவும் இருக்கும்” என்றார் இயக்குநர் சுசீந்தரன்.






