மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில்,நவீன் ஏர்னெனி மற்றும் ரவி ஷங்கர் தயாரிக்க, ரிஷிகாந்த் , அனிஷ்மா அனில்குமார், சேத்தன், வெங்கடேஷ், பக்ஸ் , ஷெல்லி கிஷோர் நடிப்பில் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கி இருக்கும் படம்.
ஆறு வருடமாக துபாயில் இருக்கும் ஒருவனுக்கு ( ரிஷிகாந்த்) பெண்(அனிஷ்மா அனில்குமார்) பார்த்து திருமணம் நிச்சயிக்கிறார்கள் . கல்யாணத்தன்றுதான் காலையில் விமானத்தில் வந்து இறங்கும் (!) அந்த மாப்பிள்ளைக்கு கல்யாணம் என்பதே அதுவரை தெரியாதாம்.
தங்கையின் கணவன் விஷயம் சொல்ல, அப்படியே கிளம்பிப் போக நினைக்கிறான் மாப்பிள்ளை. காரணம் அவன் காதலித்த பெண்ணை சாதி வித்தியாசம் காட்டி கல்யாணத்துக்கு மறுக்க, அவள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள்
ஒருவழியாக வற்புறுத்தி மாப்பிள்ளையை அழைத்து வருகிறான் தங்கையின் கணவன் . அதற்குள் பெண் வீட்டுக்கார உறவினர் ஒருவர்( பக்ஸ்) கலாட்டா செய்ய, சூழல் சூடாகிறது.
உண்மையில் மணப்பெண்ணுக்கும் கல்யாணத்தில் இஷ்டமில்லை. காரணம் அவள் இன்னொருவனை (இயக்குனர் ராஜா கருப்பசாமி) காதலிக்கிறாள். கல்யாணம் நடப்பதற்குள் அவள் அவனோடு ஓடிப் போக திட்டமிடுகிறாள். ஆனால் அந்தக் காதலன் ஒரு டுபாக்கூர் பேர்வழி.
இதற்கிடையே பெண் வீட்டுப் பெண்கள், ஆண் வீட்டுப் பெண்கள் இடையே கவுரவப் பிரச்னை, நோண்டி விட்டு ஆழம் பார்த்தல் போன்ற செயல்களால் சிக்கல் அதிகமாகிறது.
ஒரு நிலையில் பெண் வீட்டார் பெண்ணின் காதலை மறைத்த விஷயம் மாப்பிள்ளை வீட்டுக்கும் , மாப்பிள்ளை வீட்டார் மாப்பிள்ளையின் காதல் விஷயத்தை மறைத்த விஷயம் பெண்ணுக்கும் தெரிகிறது.
தன் காதலனோடு ஓடிப் போவதை கடிதமாக எழுதி வைத்துவிட்டு மணப் பெண் கல்யாண வீட்டை விட்டு கிளம்ப, அழைத்துப் போக வருவதாக சொன்ன டுபாக்கூர் காதலன் கை விரித்து விட, கல்யாணப் பெண் அனாதையாய் நிற்க,
அவளைக் காணோம் என்பதை அறிந்து மாப்பிள்ளை வீடும் பெண் வீடும் அடித்துக் கொள்ள, பெண் எழுதி வைத்த கடிதம் மாப்பிள்ளை வீட்டாரிடம் சிக்க,
மணப்பெண்ணை தேடி மாப்பிள்ளை போக, மழை கொட்டோ கொட்டு என்று கொட்ட, காட்டுக் கோவில் பூசாரி ஒருவரிடம் அவள் தஞ்சமாக, மாப்பிள்ளை அவளைப் பார்க்க,
அவர்கள் எடுத்த முடிவு என்ன? அதைக் குடும்பங்கள் ஏற்றதா இல்லையா என்பதே படம்.
படத்தின் முதல் பலம் மொத ராத்திரி என்ற பெயர்.
இரண்டாவது பலம் நாயகியாக நடித்திருக்கும் அனிஷ்மா அனில்குமாரின் அட்டகாசமான நடிப்பு காதலன் உட்பட அனைவரிடமும் படபடப்பாக கீச்சுக் குரலில் பேசும் பேச்சு , ஏக வெறுப்பில் ரிஷப்ஷன் மேடையில் போடும் வெறித்தனமான குத்தாட்டம், கடைசி வரை ஒரு ரிதம் உள்ள நடிப்பு என்று அசத்துகிறார்.
ரிஷிகாந்த் நன்றாக நடிக்கிறார்.
நிறைய பெண் கேரக்டர்களை நன்றாக எழுதி இருப்பதோடு,அதற்கு பொருத்தமான நடிகைகளை போட்டு நன்றாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர்.
மிகுந்த நாடகத்தனமாக இருந்தாலும் சில இடங்களில் சூழலில் இருந்தும் வசனங்களில் இருந்து காமெடி ஒர்க் அவுட் ஆகிறது. சில சீரியஸ் வசனங்களும் கவனிக்க வைக்கின்றன.
இயல்பாக வெளிப்படும் சாதி ஆணவம் போன்ற காட்சிகளும் கவனிக்க வைக்கின்றன.
மாப்பிள்ளையின் தங்கையாக வரும் பெண், அவளது கணவராக வரும் அப்துல் லீ இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர் .
மாப்பிள்ளையின் அம்மாவாக ஆரம்பத்தில் பாந்தமும் அப்புறம் ஆவேசமுமாக ஷெல்லி கிஷோர் அசத்தி இருக்கிறார்
பரத் ஷங்கர் இசை பெரிதாக குறையும் இல்லை . ஆனால் நிறைவும் இல்லை சுரேந்திரனின் ஒளிப்பதிவும் அப்படியே
உண்மையில் ஈர்ப்புள்ள ஒரு மூலக்கதைதான்.
ஆனால் ஆரம்பம் முதலே கேரக்டர்கள் வடிவமைப்பு காட்சி அமைப்பு ஆகியவற்றில் ஒரு பக்குவமின்மை கூடவே வருகிறது.
யதார்த்தமாக சொல்ல வேண்டிய கதைக்கு லாஜிக் இல்லாத சூழலில் காட்சிகள் அமைந்துள்ளன . முக்கியமாக ஆரம்பிக்க காட்சிகளே அப்படி இருக்கின்றன.
ஒவ்வொரு காட்சியும் சில சமயம் ஒவ்வொரு ஷாட்களும் கூட தேவைக்கு மேல் நீள்கின்றன. காமெடி என்றும் சீரியஸ் என்றும் எல்லா காட்சிகளிலும் காட்டுக்கு கத்தல் கத்துகிறார்கள். சேத்தன் கூட ஓவர் ஆக்டிங் செய்து கடுப்பேத்துகிறார் . அவ்வளவு நேரத்தை எடுத்துக் கொள்ளும் அவரது கேரக்டருக்கு கூட சரியான முடிவு இல்லை. பல கேரக்டர்களும் தொங்கலில் நிற்கின்றன.
மணமகன் மணமகள் இருவரும் என்ன முடிவை எடுக்கப் போகிறார்கள் என்று எல்லோருக்கும் புரிந்த பிறகும் இருபது நிமிடம் ஓடி அதே முடிவில் முடிகிறது . படத் தொகுப்பாளர் அசோக் அர்ஜுனன் அந்த இருபது நிமிடத்தில் பதினைந்து நிமிடத்தையாவது வெட்டிக் கெடாசி இருக்கலாம்.
கதைக்கும் சூழலுக்கும் ஏற்ப சிறப்பாக எழுதி , இயல்பான நிகழ்வுகள் மூலமே காமெடி , சீரியஸ் , டுவிஸ்டுகள் எல்லாம் கொண்டு வந்து , மாப்பிள்ளையின் காதலி செத்த கதையை கொஞ்சமாவது காட்சிகளாகச் சொல்லி ( மாப்பிள்ளை திருமணம் வேண்டாம் என்று நினைக்க காரணமே அதுதானே?) ஒரு கவிதை போல முடிய வேண்டிய படம் இது .
அப்படி இருந்திருந்தால் தலைவர் தம்பி தலைமையில் மாதிரி பட்டையைக் கிளப்பி இருக்க வேண்டிய படம் ..
அது இல்லாத காரணத்தால் படத்தின் டைட்டில் மற்றும் கொஞ்சம் காமெடி இவற்றை மட்டுமே நம்பி திரைக்கு வருகிறது.
மொத ராத்திரி … வீரியம் கம்மி