ஒரு கனவு போல @ விமர்சனம்

 ராமகிருஷ்ணன், சவுந்தர்ராஜா , அமலா ஆகியோர் நடிக்க, 
கதை திரைக்கதை வசனம் எழுதி  விஜய் சங்கர் இயக்கி இருக்கும் படம் ஒரு கனவு போல .
 

காணலாமா ? 

சிறு வயது முதலே ஒருவருக்கு ஒருவர் அன்பும் பாசமும் கொண்டு நெருங்கிப் பழகும் நண்பர்கள் நடராஜ் (ராமகிருஷ்ணன்) மற்றும் ஜான் ஜோசப்  (சவுந்தர் ராஜா) இருவரும் .

நட்ராஜுக்கு கல்யாணம் செய்து வைக்க அவனது பெற்றோர முயல, பெண் கேட்டு போன இடத்தில் ஒரு நல்ல  பெண்ணின் தந்தை,

 

தனது பெண் சுமதியை (அமலா)  நட்ராஜுக்கு கொடுக்க விருப்பமில்லை என்று கூறி விடும் நிலையில், 

அந்த நல்ல பெண் எப்படியாவது தன் நண்பனுக்கு மனைவியாக வர வேண்டும் என்று விரும்புகிறான் ஜோசப் .

மிகுந்த கஷ்டப்பட்டு அவமானப் பட்டு போராடி அந்த பெண்ணை தன் நண்பன் நட்ராஜுக்கு மனம் முடித்து வைக்கிறான் ஜோசப் . 

மணமான நிலையில் நடராஜ் – சுமதியின் முதலிரவு பல காரணங்களால் தள்ளிப் போகிறது . இந்த நிலையில் எதிர்பாராத விதமாக ஜோசப் மனதில் கள்ளம் புகுகிறது . 

 ஒரு சந்தர்ப்ப சூழலில் ஒரு நொடி அவன் எல்லை மீரா, சுமதியும் ஒரு கணம் நிலை தடுமாறி விடுகிறாள் . 
 

அடுத்த நொடி இருவரும் சுதாரித்துக் கொள்கிறார்கள் . 

எனினும் நடராஜ் இருவர் மீதும் வைத்து இருக்கும் நம்பிக்கை அவர்களின் மன சாட்சியைக் கொல்கிறது. ஒரு நிலையில் நடராஜ் சுமதி தம்பதியை பிரிய முடிவு செய்கிறான் ஜோசப் . 

சுமதிக்கு அது உடன்பாடுதான் என்றாலும் நடராஜ் நேர்மாறாக இருக்கிறான் . ஜோசப்பைப் பிரிந்து வாழவே முடியாது என்ற நிலை . 

 இதற்கிடையே ஜோசப் – சுமதி பற்றி சிலர் தவறாக பேச அது நடராஜ் மற்றும் ஜோசப் இருவரின் காதுக்கும் வர, அடுத்து என்ன நடந்தது என்பதே இந்த ஒரு கனவு போல .
 

நீண்ட இடைவேளைக்கு பிறகு நட்பு,  காதல்,  அன்பு, பாசம் , நம்பிக்கை போன்ற  விசயங்களை வைத்து ஒரு படம்.

தவிர  ஆபாசமான  காட்சிகளை வைத்து அதை நியாயப் படுத்தவே ஆயிரம் வாய்ப்பு இருந்தும் கண்ணியமாக கதை சொல்லி இருக்கும் இயக்குனர் விஜய் சங்கருக்கு நெகிழ்வான பாராட்டுகள் .
 
நடராஜ் ஜோசப் இருவருக்கும் சிறு வயதில் நட்பு தோன்றக் காரணமான அந்த ஆரம்பக் காட்சியே இயக்குனரின் திறம் சொல்கிறது . 
 

படத்தில் வரும் — பெண்மையைப் போற்றும்படியான காட்சிகள் அருமை 

வள்ளலாரின் பெற்ற தாயினை பாடலை படத்தில் பயன்படுத்தியமைக்கும் அதை அவ்வளவு சிறப்பாக படமாக்கி இருப்பதற்கும் கூடுதல் பாராட்டுகள் . 

இது தவிர ஈ எஸ் ராம் இசையில் புலமைப்பித்தன் , முத்து லிங்கம் மற்றும் சினேகன் எழுதியுள்ள பாடல்கள் எல்லாமே  காதுக்கும் கருத்துக்கும் தவிர கண்ணுக்கும் இனிமை 

கேரளாவில் பல விருதுகள் பெற்ற ஒளிப்பதிவாளர் அழகப்பனின் ஒளிப்பதிவு அழகாக இருப்பதோடு , காட்சிகளில் உணர்வுக் கூட்டலுக்கும் பலம் சேர்க்கிறது . 

நட்ராஜாக ராம கிருஷ்ணனும் ஜோசப்பாக சவுந்தர் ராஜனும் நன்றாக நடித்துள்ளார்கள் . சவுந்தர ராஜா ஒரு படி மேல் .

புதுமுகம் அமலா பந்தமான முகம் , பக்குவமான முக பாவனைகள் என்று கவனம் ஈர்க்கிறார் .  

ஆரம்பத்தில் அவ்வளவு பரிசுத்தமான நல்லவர்கள் என்று பில்டப் கொடுக்கப்படும் நட்ராஸ் சுமதி கேரக்டர்கள் ஒரு நொடி தடுமாறுவது கூட ,கதாபாத்திரச் சீர்குலைவாகவே இருக்கிறது . 

அல்லது அதுதான் கதை என்றால் அந்தக் கதாபாத்திரங்களை ஆரம்பத்தில் அவ்வளவு கொண்டாடி இருக்கத் தேவை இல்லை .  இயல்பாக விட்டிருக்கலாம் . 

படத்தின் ஆரம்பக் காட்சிகள் சொல்லும் விஷயங்கள் படி ஜோசப் மற்றும் சுமதி இடையே ஒரு சகோதர பாசம் இயல்பாகவே வந்து இருக்கும் .

அப்படி இருக்க , அந்த ஒரு நொடி சலனத்துக்குக் காரணமான காட்சிகளாக இயக்குனர் சொல்லும் முன் காட்சிகளில் யதார்த்தம் இல்லை . 

எனினும்  மனித உறவுகள் உணர்வுகள் அடிப்படையில் ஒரு இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் கண்ணியமான கவிதை போன்ற படம் ஒரு கனவு போல . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *