நடிகர் சூர்யா தனது 2D எண்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரித்து முக்கியக் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்க அமலா பால் , பிந்து மாதவி, வித்யா, முனீஸ்காந்த் இவர்களுடன் நாயகன் நாயகியாக குழந்தை நட்சத்திரங்கள் கவின் , நயனா ஆகியோர் நடிக்க , பாண்டிராஜ் எழுதி இயக்கி இருக்கும் படம் பசங்க -2
பசங்க படத்தில் கிராமத்து சிறுவர்களின் உலகைக் காட்டிய பாண்டிராஜ் இதில் நகரத்து சிறுவர்களின் உலகைக் காட்டுகிறார் .
கற்றல் திறமையில் வித்தியாசம் உள்ள குழந்தைகளின் தன்மை உணராமல், மக்கட்டைத்தனமான மனப்பாடக் கல்வியில் முதல் மதிப்பெண் வாங்கச் சொல்லி பெற்றோரும் ஆசிரியரும் செய்யும் கொடுமைகள் …
அதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை சொல்லும் படம் என்பது , படத்தின் முன்னோட்டத்தில் தெரிகிறது .
முன்னோட்டத்தோடு இரண்டு பாடல்களையும் திரையிட்டார்கள் .
பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவில் அழகழகான குழந்தைகளின் உற்சாகப் புன்னகையில் மிக சிறப்பான கலை இயக்கம் இவற்றின் உதவியோடு மிக அற்புதமாக பாண்டிராஜ் இயக்கி இருப்பது முன்னோட்டத்திலும் பாடல்களிலும் தெரிகிறது .
தாரே ஜாமீன் பார் படத்து அமீர்கான் மாதிரியான ஒரு கேரக்டரில்–செயல்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளை சந்தோஷப் படுத்தும் ஒரு கேரக்டரில் வரும் சூர்யா டைனோசார் மாதிரி எல்லாம் எக்ஸ்பிரஷன் கொடுத்து அசத்துகிறார் . ஒரு நல்ல ஆசிரியையாக அமலா பால் .
விழாவில் இயக்குநர் பாண்டிராஜ் பேசியபோது “வம்சம் படத்துக்கு பிறகு இந்த மேடைதான் எனக்கு மிகப் பெரிய மேடை. வம்சம் படத்தின் நாயகன் அருள்நிதி அந்தப் படத்தின் பாடல் வெளியீட்டின் போது இதை போல் ஒரு மேடை இனி உங்களுக்கு நிச்சயம் கிடைக்காது” என்றார்.
அவர் சொன்னது போலவே அதன்பிறகு எனக்கு அதைப் போன்ற ஒரு மேடை அமையவில்லை. ஐந்து வருடங்களாகி விட்டது, மீண்டும் அப்படி ஒரு மேடை அமைய.
இவ்வளவு நாள் நான் காசுக்காக படம் பண்ணி கொண்டு இருந்தேன். இப்போது நியாமான ஒரு படம் பண்ணி இருக்கிறேன். புரியும் வகையில் கூறவேண்டும் என்றால், இவ்வளவு நாள் ஆவின் பால் தயாரித்து கொண்டு இருந்தேன் இப்போது மறுபடியும் தாய்ப்பால் தயாரித்து உள்ளேன்.
நான் இந்த படத்தின் மூலமாக சில நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன், நாம் சொல்லும் நல்ல விஷயங்கள் எளிதாக மக்களிடம் போய் சேரவேண்டும் என்றால் சூர்யாவை போல் ஒரு பெரிய நடிகரை வைத்துச் சொன்னால் மக்களிடம் எளிதாகப் போய்ச் சேர்ந்து விடும்.
நாம் சொல்ல நினைக்கும் அனைத்து நல்ல விஷயங்களையும் சூர்யா போன்ற ஒரு பெரிய நடிகரின் வாயிலாக கூறினால் மக்களிடம் எளிதாக சென்றடையும்.”என்றவர் “ஆனால் இந்தப் படத்தில் கவின் , நயனா என்னும் சிறுவன் சிறுமிதான் நாயகன் நாயகி ” என்று அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார்.
“நூறு கோடி வசூல் செய்யும் நடிகர் சூர்யா பசங்க2 வை போன்ற தரமான படத்தில் நடித்துள்ளது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது”என்றார் பாடலாசிரியர் நா.முத்து குமார்.
இயக்குநர் சீனு ராமசாமி “என்னுடைய பாட்டியும், என்னுடைய அம்மாவும் நடிகர் சிவகுமார் அய்யாவை முருகப்பெருமானாகப் பார்க்கிறார்கள் , இனி வருங்காலத்தில் நடிகர் சூர்யாவை ஆசிரியரை போலப் பார்ப்பார்கள்” என்றார்.
“இந்தியாவின் மக்கள் தொகையில் அதிகம் பேர் முப்பது வயதுக்கும் கீழே உள்ளவர்கள்தான். அவர்கள் கையில்தான் இந்த நாடு உள்ளது.
குழந்தைகளை மையமாக வைத்து வந்துள்ள இந்த படம் நிச்சயம் மிக பெரிய வெற்றி பெறும்” என்றார், நடிகர் கார்த்தி
நடிகர் சூர்யா பேசும்போது “எனக்கு இந்த பசங்க-2 படத்தை தயாரித்து நடித்துள்ளது மிகவும் பெருமையாக உள்ளது. இந்த படத்தில் நடித்துள்ள சிறுவர்கள் அனைவரும் மிகவும் சிறப்பாகவும் அழகாகவும் நடித்துள்ளனர். இயக்குநர் பாண்டிராஜ் அவர்கள் இதை போன்ற சிறந்த படத்தை கொடுத்ததற்கு நன்றி.
இந்த படத்தில் நடித்துள்ள குழந்தைகள் அனைவரும் இந்த படத்தில் வேலை செய்த துணை இயக்குநர்கள் அனைவரோடும் இணைந்து சிறப்பாக வேலை செய்து , அவர்களுடனேயே இருந்து படத்துக்காக உழைத்துள்ளனர். படத்துக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி ” என்றார் .






