ரஜினி முருகன் ஒரு வழியாக தட்டுத் தடுமாறி திக்கித் திணறி ரிலீஸ் ஆகப் போகிறது . (என்னது ? வெள்ளிக் கிழமை வரை உறுதி இல்லையா? அப்படி எல்லாம் சொல்லாதிங்கப்பா பிளீஸ் )
ரஜினி முருகன் படம் துவங்கியபோது முந்தைய வெற்றிகளை கணக்கில் வைத்துக் கொண்டு , ஆறு கோடி சம்பளம் கேட்டாராம் சிவ கார்த்திகேயன் . ஆனால் படத்தை தயாரிக்கும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் , இழுத்துப் பிடித்து அடித்து வளைத்து ஒரு கோடி ரூபாய் சம்பளத்துக்கு சிவா கார்த்திகேயனை ஒத்துக் கொள்ள வைத்தார்களாம்.
”வருத்தப் படாத வாலிபர் சங்கம் தந்த பொன் ராமுடனான வெற்றிக் கூட்டணி , திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும்ம் பெரிசு . இதுவும் சீக்கிரம் வந்து வெற்றிப் படம் ஆகட்டும் ; அடுத்த படத்தில் சம்பளத்தில் பலம் காட்டிக் கொள்ளலாம்” என்று எண்ணி, ஆறில் ஒரு பங்கு சம்பளத்துக்கு நடிக்க ஒத்துக் கொண்டார் சிவ கார்த்திகேயன் .
படம் முடிந்தும்,, திருப்பதி பிரதர்ஸின் முந்தைய திருவிளையாடல்களால் சிக்கி சீரழிந்து நொந்து நூலாகி அழுகி ஒழுகி , இப்போதுதான் ஒரு வழியாக திரைக்கு வருகிறது ரஜினி முருகன் .
படம் ரிலீஸ் ஆக வேண்டும் என்றால் படம் சம்மந்தப்பட்ட ஒவ்வொருவரும் நஷ்டத்தை சரி செய்ய திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு தர்ம சேவையாக பணம் தர வேண்டும் என்று முடிவானதாம் .
அங்கே தான் சிவ கார்திகயனை பைத்தியக்காரராக ஆகி இருக்கிறது திருப்பதி பிரதர்ஸ் !
எப்படி ?
“உங்க பங்குக்கு நீங்க ஏழு கோடி ரூபாய் கொடுத்தால்தான் படம் ரிலீஸ் ஆகும் . உங்களுக்கு நாங்க பேசின சம்பளம் ஒரு கோடி ரூபாய் . அத கழிச்சுக்கிட்டு மீதி ஆறு கோடி ரூபாய் கொடுங்க ‘ என்று கேட்டார்களாம் .
அடப் பாவிகளா என்று பொங்கி நொந்து எழுந்த சிவா ” பேசின சம்பளம் ஒரு கோடி . உங்களால ஒன்றரை வருஷம் வீணாப் போச்சு . இதுல நான் ஆறு கோடி தரணுமா ? இது நியாயமா ? தர்மமா ? அடுக்குமா ? ” என்று மானசீகமாக மண்ணை வாரித் தூற்றிவிட்டு (மழை பெய்து சேறும் சகதியுமாக இருப்பதால் ,நிஜ மண் கிடைக்கலையாம் ) , ஒரு பைசா கூட கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டு வந்து விட்டாராம் .
விஷயம் அறிந்த ஹீரோக்கள் கிடுதாக்கிப் போய் இருக்கிறார்கள் .
மேனேஜரை கூப்பிட்டு திருப்பதி பிரதர்சில் இருந்து யார் வந்தாலும் நான் சினிமா இண்டஸ்ட்ரிய விட்டே போயிட்டேன்னு சொல்லிடு ” என்று தகவல் சொல்லி வைத்து விட்டார்களாம்.
நல்லதுக்குக் காலம் இல்ல . நல்லவனுக்கும் மரியாதை இல்ல .